11 மார்ச் 2012

எனது வலையை விரிக்கிறேன்.!-- பொள்ளாச்சி அபி

எனது வலையை விரிக்கிறேன்.!

எனக்கு விருப்பமானதும்
விருப்பமல்லாததும்
தானாய் வந்தது வலையில்

பிடித்ததை சேகரிப்பதும்
பிடிக்காதவற்றை விலக்குவதும்
வாடிக்கையாய் கழிகிறது.

நல்ல வண்ணத்துடன் சில
வந்தெனைப் பிடித்துக்கொள்ளென
ஆசை காட்டுகிறது.
வலையை அங்கு விரித்தால்
அது மோசம் செய்யும்
வகையாயிருக்கிறது.

என் குழந்தைகளுக்குப்
பிடிக்குமேயென்று,
எதிர்பார்த்தேன் சிலதை
அங்கோ பெரியவர்களுக்கும்
பிடிக்காததே நிறைந்திருந்தது.

பிறகு தேடித்தேடி
வலைவீசுவதை
தவிர்த்துக் கொண்டேன்.
மீண்டும் இல்லம் திரும்பினேன்.

அலைகளின் இடையே
வலை வீசுவதும்
கணிணியின் இடையே
வலைவீசுவதும்,


இப்போது
ஒன்றெனவே புரிந்தது.!

ரூபா நோட்டு.. !

புதுசு,புதுசா கள்ளநோட்டு அச்சடிச்சு,அதை மாத்தி சம்பாரிக்கறதே பொழப்பா வெச்சிருந்த ஒருத்தன்,ஒரு தடவை கள்ள நோட்டு அடிக்கும்போது பதினைஞ்சு ரூபா நோட்டை தெரியாம அடிச்சுட்டான்.
நகரத்துக்குள்ள இதை மாத்தினா,சீக்கிரம் சிக்கிடுவோம்னு நெனச்சு,கிராமத்துலே ஒரு பெட்டிக்கடைக்கு போனான்.ஒரு ரூபாய்க்கு ஏதோ வாங்கிட்டு,அவங்கிட்டே இருந்த பதினைஞ்சு ரூபா நோட்டுலே ஒன்னைக் கொடுத்துட்டு,மீதி சில்லறையைக் கேட்டான்.
அவனையும்,அவன் குடுத்த பதினைஞ்சு ரூபா நோட்டையும்,நல்லா நோட்டம் விட்ட கடைக்காரன்,யோவ்,என்னா இது.?,பதினைஞ்சு ரூபா நோட்டைக் குடுக்கிறே.? ன்னு கேட்டான்.
நம்ம ஆளுக்கு கொஞ்சம் பேஜாராயிடுச்சு,என்னடா இது,சுலபமா ஏமாத்தலாம்னு பாத்தா,உஷாராக் கேள்விகேட்கறானே.., சரி,துணிஞ்சு சமாளிக்கலாம்னு நெனச்சுகிட்டு,கடைக்காரனைப் பாத்து,யோவ்,பதினைஞ்சு ரூபா நோட்டை,சென்ட்ரல் கவர்ன்மெண்ட் புதுசா அடிச்சு விட்டுருக்குதுன்னு கூட,உங்களுக்கெல்லாம் தெரியலையே..சே..சே..,உனக்கு நம்பிக்கையில்லேன்னா நோட்டைத் திருப்பிக்குடுத்துரு.நான் வேற கடைக்கு போயிக்கிறேன்னு சொன்னான்.
கடைக்காரன் லேசா குழம்புவது மாதிரி நம்ம ஆளுக்கு தெரிஞ்சதும் குஜாலாகிட்டான்.
சரி.சரி,கோவிச்சுக்காதீங்கண்ணே..இதா இப்ப மீதியைத்தந்துடுறேன்னு சொல்லிட்டு,கல்லாப் பெட்டியை கடைக்காரன் திறக்க,நம்ம ஆளுக்கு சக்கையா சந்தோசம்.அப்பாடா,நல்லா ஏமாந்துட்டான்டா கிராமத்தான்னு மனசுக்குள்ள குதியாட்டம் போட்டுட்டு,மீதி சில்லறை வாங்க,ஸ்டைலா கையை நீட்டினான்.

கடைக்காரனும்,மீதி பதினாலு ரூபாய் சில்லறைக்காக..ரெண்டு ஏழு ரூபா நோட்டை எடுத்து,அவன் கையிலே வெக்க,அடுத்த செகண்டுலே,தொபுக்கடீர்னு ஒரு சத்தம் கேட்டுச்சு..
சில்லறையை வாங்கிப்பாத்தவன் கீழே உழுந்த சத்தம்தான் அதுன்னு தனியா வேற சொல்லணுமாக்கும்..!