01 ஜூன் 2012

கடவுளுக்குத் தெரியுமா.?

எப்படித்தொடங்குகிறது..?
எங்கிருந்து தொடங்குகிறது.?
எல்லாம் ‘அவர்களுக்குத்’ தெரியும்..!
ஆனால்..
எதுவுமே தெரியாத அப்பாவிகள்
உயிர்பிழைக்க தெருவில்
ஓடிக்கொண்டிருக்கின்றனர்..

முன்பின் பார்த்தறியாத
முன்பகை எதுவுமில்லாத
சிக்கிய ஒருவனை நோக்கி
உயர்ந்தன ஆயுதங்கள்..

அவன் கைகூப்பியபடி
உயிருக்கு மன்றாடினான்..
“மதஅடையாளங்கள்
மட்டுமல்ல
மதம்கூட எனக்கு வேண்டாம்.
நீங்கள்தான் என் கடவுள்..
உயிர்ப்பிச்சை தாருங்கள்..!”

“நாங்கள் உன் மதத்துக் கடவுளல்ல”
உன்மத்தமாய் உயர்ந்த
ஆயுதங்களில் படிந்த இரத்தத்துடன்
கடவுள்கள் திரும்பிச் செல்கின்றனர்..

கடவுளரால்
கொல்லப்பட்டதை எண்ணியபடி
இறக்கிறான் அவன்..
இனி அவன் செல்லுமிடம்
சொர்க்கமா நரகமா..?
அது எதுவென்று
கடவுளுக்குத் தெரியுமா.?

நட்பென்னும் வானவில்.!

வாழ்க்கையில் வந்துபோகும்
அனைவருக்கும் நிறமுண்டு.

அம்மா பசுமை அப்பா சிவப்பு

இரண்டும் கலந்த குடும்பம் ஊதா

நன்றும்தீPதும் கலந்திருக்கும் காதல் நீலம்

உறவுகளாய் அமைவது எப்போதும்

மங்கலம் சொல்லும் மஞ்சள்

சிவப்பா மஞ்சளா எனத்தெரியாத

வண்ணம் காட்டும் ஆரஞ்ச் மனைவி

ஆனால்..அத்தனைகுணத்தையும்

தனக்குள் அடக்கியிருக்கும்

நட்பு மட்டுமே வானவில்

வாழ்க்கையில் வந்துபோகும்
அனைவருக்கும் நிறமுண்டு

நிறங்கள் எப்போதும்
தொடராவிடினும்

வானவில் என்றும் உடனிருக்கும்..!

எதைத் தேடுகிறாய்.?

மலையளவு குப்பைகளுக்குள்
தேடுவதென்ன குழந்தைகளே..?

அரசியல்வாதிகள் கொடுத்த
வாக்குறுதிகளையா.?

கட்டாயக் கல்வி எனும்
சட்டங்களையா..?

தேகம் வலுப்பெறவுதவும்
சத்தான உணவுகளையா.?

இளமையில் மரணிக்கும்
நோயிலிருந்து விடுதலையா.?

எப்படியும் வாழந்துவிடலாமெனும்
எதிர்காலத்தையா.?

மறுஜென்மம் அயல்நாட்டிலாவெனும்
தலைவிதியையா.?

அல்லது
மானுடம் தொலைத்த
மனிதநேயத்தையா.?

ஏதோ ஒன்றைத் தேடினோம்
எதுவோ ஒன்று கிடைத்ததென்று மட்டும்
சொல்லிவிடாதீர்கள் குழந்தைகளே
அதுவும் லாபம்தான் என்று
குப்பைபொறுக்குவதையும்
தேசியத்தொழிலாக மாற்றுவதற்கு
வெட்கமேயில்லாத அரசியல்வாதிகள்
இங்கு காத்துக்கொண்டிருக்கிறார்கள்.!

எனக்கு வேண்டாமடா.!

கல்லால் செய்த சிலைகள் கூட
வேளைக்கு உண்ணுதடா..!
சிலைகள் செய்த மனிதனின்
வயிற்றில் அமிலம் கொல்லுதடா..!

முன்னர் எடுத்த ஜென்மப் பலனே
இந்தத் துன்பமடா..,
என்றாலெம்மைத் துன்பப் படுத்துவதில்
உனக்கென்ன இன்பமடா..?

மற்றவர் துன்பம் பார்த்து ரசிப்பவன்
மனிதனே இல்லையடா.!
அதனினுமுயர்ந்த கடவுள் என்றால்
எனக்கு வேண்டாமடா.!

நாங்கள் ஒருநாள் உன்னைதண்டிக்கும்
காலம் வருமடா.!
நாங்களமர்ந்த இடத்திலுன்னை இருத்தி
வைப்போம் உண்மையடா.!

பழிக்குப்பழியென பொங்கும் உணர்வில்
சாபம் இல்லையடா..இது
காலம் சொல்லும் சேதியான
தீர்க்க தரிசனமடா..!

கட்டளையிட்டாள் கவிதையெழுத..!

இரவின் அமைதியில்
நிலவின் ஒளியில்
நட்சத்திரங்களின் சிமிட்டலில்
மனம் பறிகொடுத்தொரு
வலசை வந்தால்
கவிதை தானாய் வரும்
என்றுதான் என்னைநான்
பழக்கிவைத்திருந்தேன்
நடைக்காக கூட்டிச் செல்லும்
நாய்க் குட்டிபோல..,

நிலவும் மலரும்
காற்றும் வானவில்லும்
இன்னபிற சங்கதிகளும்
இன்பமென்றே,கவிதையென்றே
எழுதியும் வந்தேன்
கற்பனையாக எழுதியதெல்லாம்
பிச்சைக்காக சாமிவேடம்
போட்டவன்போல
பல்லிளித்தது..!

அப்போதெல்லாம் கவிதை
தன்னை எழுதச்சொல்லி
என்னிடம் கேட்டதேயில்லை..!
அடிமை மனைவிபோல
எழும்பிய குரலையும்
அடக்கியே வைத்திருந்தேன்
ஆணவக் கணவன் உருவில்.!


எனது திமிர்க்குதிரையினோடு
ஒருநாள் மதியம்
நகர்ப்புறப் பகுதியில்
உலா வந்தபோது..,

குடியிருப்புக்கு குடிநீர்
வேண்டுமென..
தெறிக்கும் வெயிலில்
சாலையில் நூறுபெண்கள்
எழுப்பிய முழக்கமெலாம்
கவிதையாகவே இருந்தது.
ஒரு நூறு பெண்கள்
ஒரே சமயத்தில்
வாழ்வியல் உண்மைசொல்லும்
கவிஞர்களாக முடியுமெனில்

இதுவரை கவிதையென
எழுதிய பொய்களுக்காக
வெட்கப்படுகிறேன்.!

அடிமை மனைவியாய்
இருந்த கவிதைப்பெண்
சுதந்திரமான தன்சொந்தக்
குரலிலெனக்கு கட்டளையிட்டாள்
இனியாவது எழுதுவது
கவிதையாக இருக்கட்டும்..!

இதுவா இந்தியா..!

எதிர்கால வாழ்க்கைக்காக
ஏங்கி ஏங்கி..
வாழ்வின் எல்லைகளையும்
வாழ்விடங்களின் எல்லைகளையும்
விட்டு நீங்கி..அல்ல நீக்கப்பட்டு
குப்பைமேடுகளின் ஒருபகுதியாக
குழந்தைகள் மாறிநிற்பதும்
இங்கு சாதாரணம்.!

முப்பத்திரண்டு ரத்தினங்கள்
பதித்த கிரீடங்களை
தலையில் தாங்கும்
முற்றும்துறந்த முனிவர்கள்..
கோடிகள் கொடுத்து
பதவிகள் வாங்குவதும்
இங்கு சாதாரணம்..!

முற்றும் துறந்தவனுக்கு
எல்லாம் இருக்கிறது.!
எல்லாம் வேண்டுபவர்க்கு
எதுவும் இல்லாதிருக்கிறது.!

இந்தியாவில் மட்டுமே
வேற்றுமையிலும் ஒற்றுமையென
இறந்தகாலச் சரித்திரம் எழுதியவர்களே..!
இந்த நிகழ்காலத்தை எதுவாய் எழுதுவீர்கள்.?

எப்போது வருவாய்.?

தேவகுமாரன் முதல்
மனுஷ்ய குமாரி வரை..
மனிதனின் பாவக்குப்பைகளை
யாரோ சிலர் இவர்போல்
சுமப்பது மட்டும்
இன்னும் தீரவில்லை.
இனி தீர்வும் இல்லையோ.?

மனித உள்ளங்கள் சுத்தமானால்
மலையளவு குப்பைகளும்
மாய்ந்து போகுமே..!
மானிடா கேள்..
உனது பாவங்கள்
கோபங்கள்,ஆசைகள்
வக்கிரங்கள் என
எல்லா அழுக்குகளையும்
அடுத்தவர் சுமக்கவே விட்டுப்போகிறாய்.
அடுத்தவருக்காக அதனைச் சுமக்க
நீ முன்வருவது எந்நாளோ..,
அன்றே மாயும் அனைத்தும்
இவ்வுலகைவிட்டு.!

போதைகளில்லாத உலகம்.!

கசடனுக்கு மதுவில்..
கவிஞனுக்கு புகழில்..
அரசியல்வாதிக்கு பதவியில்..
மனைவியை அடிமைப்படுத்துவதில்
கணவணைக் கொடுமைப்படுத்துவதில்
போதை...!

அது
எல்லோருக்கும் ஏதோவொன்றில்
எப்போதும் மயங்கிக் கிடக்க
தேவைப் படுகிறது..!

போதையில்
பேசுவதும்,சிந்திப்பதும்
நிந்திப்பதும் தண்டிப்பதும்
நியாயம் வழங்குவதும்கூட
மானுட வழக்கமாய்
மாறிப்போனது..!

போதைகளில்லாத உலகம்
எங்கேனும் இருக்கிறதா.?
தேடலின் முடிவில் கண்டேன்
இன்னும் மனிதனாக வளராத
பேதையாகவே உள்ள
ஒரு குழந்தையின் சிரிப்பில்..!

ஒரு மனக்குமுறல்.!

இயற்கையின் உந்துதல்களுக்கேற்ற
வடிகால்கள் எத்தனைவிதமாய்..

செல்வத்தின் மதிப்பைக் காட்டும்
பளிங்குக் கற்கள்..
சென்றவுடன் இயங்கும் தானியங்கி
தண்ணீர்க்குழாய்..
நின்ற இடம் தெரியும்
பரந்த கண்ணாடி..
ஈரக்கைகளை உலர்த்த
வெப்ப யந்திரம்..
அங்கும் மேனி வியர்க்காமல்
மையக் குளிரூட்டியென..

இயற்கையின் உந்துதல்களுக்கேற்ற
வடிகால்கள் எத்தனைவிதமாய்..,
அரசு அலுவலகங்கள்..
தனியார் அலுவலகங்கள்..
திரையரங்கங்கள்,
பேருந்து நிலையங்கள் என
எல்லா இடங்களிலும்
உங்களுக்கான வகையில்
எல்லாம் அமைத்தீர்கள்..நன்று.!

ஆனால்..,
தவழ்ந்தநிலையில் படியேறும்..
படிகளிலேறத் தடுமாறும்..,
சக்கரநாற்காலிகளில் உலாவரும்
நாங்கள் உங்கள் கணக்கில்
மனிதராய் இல்லையோ..?

உமது உடை
உமது உணவு
உமது இருப்பிடமும் கூட
எங்களுக்குப் பொருந்தும்.
ஆனால்..உமது கழிப்பிடம்
எமக்குப் பொருந்துமா.?

கழிப்பிடம் என்றால்
முகம் சுளிக்காதீர்கள்..!
அந்தரங்கங்களை
வெளியே சொல்வது
அசிங்கமென எமக்கும் தெரியும்..
இது அந்தரங்கமல்ல..
எம்வாழ்வின் ஜீவாதாரப் பிரச்சினை..!
நீ இதில் அசூயைப்பட
எதுவும் இல்லை..!
எல்லோரும் மலக்குடலை
உடலில் சுமந்தே திரிகிறோம்
என்பதே யதார்த்தம்.!

மொண்டிக்கு முந்நூறு குறும்பு
முடவன் கொம்புத்தேனுக்கு
ஆசைப்பட்டது போல
என்று பழமொழிகளையடுக்கி
எதுகையும் மோனையுமாய் எழுதி
உங்கள் மனவக்கிரங்களை
நிறைவேற்றிக் கொண்டவர்களே..!

மாற்றுத் ‘திறன்’ உடையவர்களென
பெயரால் எங்களை
உயர்த்தி வைத்தீர்கள்..!

ஆனால்
உங்கள் கழிப்பிடங்களை
உபயோகப்படுத்தும் திறன்
எங்களுக்கில்லை என்பதை
எப்போதுதான் உணர்வீர்கள்..?

எங்களிடமும் கெஞ்சி
ஓட்டுவாங்கிப் போனவர்களே..!
எங்களின் உழைப்பையும்
லாபமாக்கிப் பார்த்தவர்களே..!

நீங்கள் எங்களை
குடும்பஅட்டைக்கு
அடையாள அட்டைக்கு
ஓட்டுரிமை அட்டைக்கு
அரசு உதவித் தொகைக்கு
என எதற்கெடுத்தாலும்
பொறுக்கச் சொன்னீர்கள்..!
இயற்கை உபாதைக்கும்
எப்படி அய்யா பொறுப்பது.?

முட்டாளாகிப் போனேன்..!

அவன் பறம்பு நாட்டின் மன்னன்..
மலையும் காடும் அவனது நாடு
அவனது ஆட்சியின்கீழ் சிலநூறுவீடு
விலங்கும் மனிதனும் சேர்ந்து வாழ்ந்த
அழகிய இயற்கை இணைந்த வீடு..!

சேர்த்து வைக்க பெரும் பொருளில்லை
சேர்க்க வேண்டிய தேவையும் இல்லை.
சாலையில் செல்லும் வழியில் கிடந்த
முல்லைக் கொடிக்கு காலாய் தேரை
நிறுத்திச் சென்றான் மன்னன் பாரி.!

வள்ளல் பாரியென்றே வையம் வாழ்த்திட
வாழ்ந்தான்,இன்னும் வாழ்கிறான் மனதில்..
செல்லும் வழியில் கண்டதெற் கெல்லாம்
செங்கோல் தாழ்த்தி செய்தான் உதவி..!

வரலாறென அதனையும் நாம் படித்தோம்
வாழ்ந்தால் இப்படியென உறுதியும் பூண்டோம்.
மன்னன் வாழ்வை மனதில் இருத்தி
மழலைக்கெல்லாம் சொல்லியும் கொடுத்தோம்.!

மாநிலம் போற்றும் மன்னராகவே இருந்தாலும்
இருப்பதை எல்லாம் அடுத்தவர்க்கு கொடுத்த
மா மனிதர்கள் வாழ்ந்த நாட்டில்
மட அதிபதிகளுக்கு எதற்கப்பா சொத்து.?

முற்றும் துறந்த முனிவர்க் கெதற்கு
தங்க சிம்மாசனம், வைர கிரீடம்.?
பாரியென்று நீ சொன்னவரே முனிவர்
நீ முனிவரென்று சொன்னவர் மன்னர்.?

வரலாறு தெரியாத வாத்தியாராய் நினைத்து
மாற்றிச் சொல்லி விட்டாயே அப்பாவென
மழலைகள் பேசும் கேலியில் நான்
முழி பிதுங்கி முட்டாளாகிப் போனேன்..!
நான் மட்டுமல்ல என எப்படி சொல்வது.?

எவருமே கிடையாது..!

எனக்குத் தெரிந்த
எல்லா மனிதர்களையும்
ஒருமுறை மனதில் நிறுத்தி
அவர்கள் குறித்து அலசினேன்.
சிலருக்கு தாய் இல்லை
சிலருக்கு தந்தையில்லை.
சிலருக்கு சகோதர சகோதரிகள் இல்லை
சிலருக்கு மனைவி இல்லை
சிலருக்கு குழந்தைகளும் இல்லை..,
ஆனால்,
நண்பர்கள் இல்லாத எவருமே கிடையாது..!

நானொருவன் இருக்கிறேனென,
என்னிடம் நீங்கள் சொல்லவும் முடியாது.
அதைச் சொல்லும்போதே,
நீங்களும் என் நண்பராகிவிடுவீர்களே.!

என்னா நீ செய்யப்போறே.?

எங்க வேதனை
உனக்குப் புரியுமா.?
எடுத்துச் சொன்னாக்கா
எல்லாம் தெரியுமா.?


மீசைமுளைச்ச பருவத்திலிருந்து
தாடி வெச்ச தாகூர்போலவே
மாசக்கணக்கிலே திரிகின்றோம்.!
உழைச்ச காசுலே செரைக்கவேண்டியே
வெளியூர் போகற நெலமை தெரியுமா.?

கண்ணாடி அலமாரிலே
கண்ணைப் புடுங்குற
செருப்பு இருக்குது..
அதைவாங்கிப் போட
வக்கிருந்தாலும்
வீதியில்போட்டு நடக்கமுடியாத
விதியும் இருக்குது உனக்குத் தெரியுமா.?

சொதந்திரம் வாங்கி
ஆனது பல ஆண்டு..
அது இன்னும் வரலையேன்னு
ஏங்கித்தவிக்கிற பெருசுக
எல்லாம் எங்க ஊரிலே
இருக்குதென்பது உனக்குத் தெரியுமா.?

கார்ப்ரேட் கம்பெனி சம்பளம் வாங்குற..
நீ காரும் பைக்கும் ஓட்டிப்போறே..
உன்னோட தேவை எங்கோ முடியுது.
என்னோட பொழப்பெல்லாம்
எங்கே உனக்குப் புரியுது.?

நீ நல்லாப் படிச்சே
நல்லவேலைக்குப் போறே..
உன்னோட சொந்தம்
நாங்களும் முன்னேற
என்னா நீ செய்யப்போறே.?

அப்போது சிந்திப்போம்..!

நானும் நீயும்
ஒரே தமிழைப் படித்தோம்
ஒன்றாய் எழுதிப்பழகினோம்.!

உன்மீது எனக்கும்
என்மீது உனக்கும்
அளவற்ற அன்பு இருந்தது
அதை நானும் அறிவேன்.!

நாளடைவில்..
தமிழை நீ காதலித்தாய்.
ஆனாலது எனக்குத்தாய்.

தமிழ் ஒரு ஆயுதம்..
அதை வைத்திருப்பவன்
கைபோலவே உருமாறும்.

உன்கையிலது..
சிருங்காரமென்றால்
இங்கே அது சீற்றம்..

எனக்கு
கடவுள் நம்பிக்கையில்லை
அதனால் உன்பிரச்சாரத்துக்கு
கொடி பிடிக்கவில்லை.
காதலுக்கு நான் எதிரியுமில்லை.
எனக்கு
காதல்மட்டுமே பெரிதுமில்லை..!

தமிழால்தான் நீயும் நானும்
சிந்திக்கிறோம்..ஆனால்
உன் சிந்தனை வேறு
என் சிந்தனை வேறு

நட்பென்பது பழக்கத்தால் வருவது
அதனால் நிலை பெறுவது..
நட்புநீடிக்க அன்பு மட்டுமே
போதாது..!
இலட்சிய ஒற்றுமையும் வேண்டும்..!

இணைந்த புள்ளியிலிருந்து,நாம்
இருதுருவங்களாய் மாறியது
சதியல்ல அது
இயக்கவியல் விதி..!

உனது பாதைக்கு நானும்
எனது பாதைக்கு நீயும்
எப்போதாவது திரும்பினால்
எங்கேனும் ஒரு புள்ளியில்
சந்திப்போம்..! அப்போது
மேற்கொண்டு சிந்திப்போம்.!

05 ஏப்ரல் 2012

மனிதா..நீ



மனிதா..நீ
பிறந்தபோது பெற்றோருக்கு
மகிழ்ச்சியளித்தாய்..

வளர்ந்தபோது சொந்தங்களுக்கு
உறவளித்தாய்..

கற்றபோது நண்பர்களுக்கு
அன்பளித்தாய்..

மணந்தபோது மனைவிக்கு
வாழ்வளித்தாய்..

உன்பி;ள்ளை மதிக்கும்படி
தந்தையானாய்..

உனது குடும்பம்
உனது உறவுகள்
உனது நண்பர்கள்
என
ஒரு வட்டத்திற்குள்
உனது வாழ்க்கை..
இதுமட்டுமா வாழ்க்கை..?.

நீ கேட்காமலே பிறந்ததும்
அழைக்காமலே இறப்பதும்
நிச்சயிக்கப்பட்டவை..!

இதுவரை நீ மனிதனாக
இருந்தாயா..அது கேள்வியல்ல.

இறப்பிற்குப் பின் நீ
மனிதனாக வாழ்ந்த
வரலாறுகள் உனக்காக
காத்திருக்கின்றன.
வாழ்த்தவும் வணங்கவும்
சிலர் காத்திருக்கின்றனர்.
என்ன ஆச்சரியமா..?

வாழும்போது யாருக்கு
என்ன கொடுத்தாயோ..
வாங்கியவர்களின் நினைவில்
அது உண்டோ இல்லையோ..

ஆனால்
உனக்குத் தெரியாமல்
உன்னிடம் இருக்கிறது
மற்றவர்களுக்கான உயிர்..
நீ இறந்தபின்னென எழுது
இன்றே ஒரு உயில்
என் உடலை
தானம் செய்வதாக..!

உனக்கு என் சிரம்தாழ்ந்த
வணக்கங்கள்...!

02 ஏப்ரல் 2012

கரெண்ட் நியூஸ்




எந்த தேசத்திலும்
இல்லாத வகையில்,
தமிழக ஊடகங்கள்
மிகவும் அதிர்ஷ்டம்
செய்தவை..!

எப்போதுமே அவற்றில்
கரெண்ட் நியூஸ்தான்.!

என் திமிர்..!

பெண்ணுரிமை..
பெண்சமத்துவம்..
பெண்விடுதலை..,
எப்போதும் பேசுகிறது மனம்.!
ஆனால்,
சாலையில் செல்லும்போது
முந்திச்செல்லும் பெண்ணை
ஜீரணிக்க மறுக்கிறது
இந்த ஆண்மனம்..!

வண்டியை முடுக்கி
அவளைக் கடந்து
செல்லும்போது,
துச்சமாய் ஒரு
பார்வை பார்த்து
ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்
அவளை அடக்கியே வைத்த
என் திமிரை மீண்டும்
ஒருமுறை நிரூபித்து
செல்கிறேன் “நான்.”

குழந்தை விளையாட்டு.!

“எப்பப் பாத்தாலும்
உன்னைப் படிக்கச்
சொல்ல மாட்டேன்.!

உனக்குத் தெரியாமே
உன் டிரஸ் அழுக்காயிட்டா
நான் உன்னை திட்டமாட்டேன்.

நீ ஸ்கூல்லேருந்து
வந்தவுடன் டெஸ்ட்
பேப்பரைக் காட்டுன்னு
கேக்கமாட்டேன்..!

இன்னும் என்னடி
விளையாட்டுன்னு.?
ஆறுமணிக்கே நான்
மிரட்டமாட்டேன்..!”

பொம்மைகளோடு விளையாடும்
என் குழந்தை.,
பெரியவர்கள் எப்படி
நடந்து கொள்ளவேண்டுமென
கற்றுக் கொடுக்கிறது.!

உனக்கான கவிதை.!

உனக்கான கவிதையாய்
ஒன்றை எழுதிவிட முடியுமென்று
எப்போதும் முயற்சிக்கிறேன்..!

இதுவரை எழுதியதெல்லாம்
உனக்கான கவிதையென்றே
தொடங்கியும் இருக்கிறேன்..!

எழுதியதையெல்லாம் திரும்ப
வாசிக்கும்போது..இது
உனக்கானது அல்ல
என்றே நான் தீர்மானிக்கிறேன்..!

எப்போதுதான்..
உனக்கான கவிதையிதுவென்று
எழுதப்போகிறேன்..?
ஆசையில் துடிக்கும் மனம்.
அது மட்டும்
நடந்துவிடவே கூடாதென
இன்னொருபுறம்
எச்சரிக்கையும் விடுக்கிறது.

காரணம்..,
உனக்காக எழுதப்பட்ட
கவிதையென ஒன்று
நிலைத்துவிடுமானால்..,

பின்னர்
கவிஞர்களுக்கென்ன வேலை..?

ஏணிகள் ஏறுவதில்லை..!

படிப்படியாய் இருந்து
படிப்படியாய் உன்னை
ஏற்றும் ஏணி..!

நீ
செருப்புடன்
செருக்குடன்
விருப்புடன்
வன்மத்துடன்
கோபத்துடன்

மிதிக்கலாம்.
ஏறலாம்..

அது மட்டுமல்ல
எப்போதும் உன்னை
இறக்கியும் விடாது
நீயாய்..
இறங்கும் வரை..,

ஆனாலும்
எல்லோரையும் ஏற்றிவிடும்
ஏணிகள் எப்போதும்
தன்னிடத்தை விட்டு
மேலே ஏறுவதில்லை..!
ஏன்..?
ஏணிகள் என்றும்
ஏணிகளாகவே இருப்பதுதானே அழகு.!

அதனால் அன்பே..,

படம் பார்த்து கவிதை சொல்
என்றாய்..!
புடம் போட்ட மனமாவென்ற
சோதனையா.?
இடம் பார்த்து உனைவென்ற
சாதனைக்கு மகிழ்வில்லை.
உன்னிடம் எனக்கெப்போதும்
தோல்வியுமில்லை.!

அழிந்துவிடும் அழகிலெனக்கு
நம்பிக்கையுமில்லை.
நலிந்துவிடும் இதனால் நமதன்பு
என்ற பயமுமுpல்லை..

உன்முகவரிகள் சுருக்கங்களென
நினைக்கவில்லை.
வாழ்க்கை அனுபவச் சுருக்கங்களின்
முகவரிகள் அதுவென்பேன்.

பிறந்தநாள் பிறக்கும்போதெல்லாம்
கடக்கிறேன் வயதையென
கவலையெதற்கு உனக்கு
அன்றெல்லாம் பதிதாய்நீ
பிறக்கிறாய் என்பேள்.

நட்பென்பது காதலைவிட
பெரிய ஆலமரம்.
அந்தக்காதலுடன் கிடைத்த
நட்பு நீ..பெரிய வரம்..!

ஊடலுடன் கூடுவது நமக்கு
வழக்கமல்ல..
கூடலற்ற ஊடல்கள் நமக்கு
புதியதுமல்ல…!
அதனால் அன்பே..,

நீயாக இருக்கும் என்னை
நிழலாக நினைக்கமாட்டாயா..?

இதுதான் உனக்கு பதில்.!

கடையில் வாங்கினாலும்
கிடைக்காது..!
எடையில் நிறுத்தினாலும்
அளவிடமுடியாது..!

உடையின் பகட்டில் அது
விளையாது..!
இடையைக் கண்டும் அது
மயங்காது..!

மடையை உடைத்துப்
பொங்கும் அது..!
நினைக்கும்போதே மயக்கம்
தரும் மது.!

படையை நிறுத்தினாலும்
பயக்காது..
தடையே விதித்தாலும்
செழிக்கும் அது..!



அதனை
நீ காதலென்பாய்..நான்
கவிதை என்பேன்.!

எனது முகமூடிகள்.!

அதிகாலைப் பனித்துளியில்
தாகம் தீர்த்துக்கொள்ள-தன்
கோடிக் கைகளை நீட்டிக்
கொண்டிருந்தான் கதிரவன்.

புள்ளினங்கள் மெதுவே
மெதுவே சோம்பல்முறித்தபடி
தம் இறக்கைகளை விரித்தபடி
சிக்கெடுத்துக் கொண்டிருந்தன.

அவற்றின் அமைதியைக்
கெடுக்க மனமில்லாமல்
ஆடாமல் பார்த்துக் கொண்டன
தம் கிளைகளை,மரங்கள்.

உடல்இளைப்பதற்காக
சர்க்கரையைக் குறைப்பதற்காக
நடப்பதும்,சிலர் ஓடுவதுமாக
பூங்காவில் நிறைந்தது சந்தடி.

செய்தித்தாள்கள்,இன்று
எங்கும்குண்டு வெடிக்கவில்லை
என்றபடி தரைக்கும்,மாடிக்குமாக
பறந்து கொண்டிருந்தன.

எல்லாம் இயல்பான வகையில்
இன்னொரு நாளும் விடிகிறது.
வழக்கம்போல் எனது
முகமூடிகளைக் காட்டி
ஏமாற்றவும்,ஏமாறவும்
நானும் கிளம்பிவிட்டேன்

என்னிடம்
சிரிப்பு,கோபம்,ஆற்றாமை
அங்கலாய்ப்பு,வருத்தம்
பாசம்,வலி,கேலி,என
பலவித முகமூடிகள் உண்டு..,
என்ன ஒரு சிரமம்
நினைத்தால் உடனே
அதைக் கழட்டமுடியாது.
அது எப்போதும்
என் முகத்தோடுதான்
ஒட்டிக்கொண்டிருக்கிறது.

பார்ப்பவர்கள் சொல்கிறார்கள்
அதுதான் என் முகமென்று..!

சொல்ல வார்த்தையில்லை.!

இசைகேட்டு மயங்கும் உன் செவிகேட்கவே
மயக்கம்தரும் இசையொன்றை நான் பாடவா..
எழுதும் உன் கவிதைக்கு கருவாகவே..
என்வாழ்க்கை அனுபவத்தை நான் சொல்லவா..!

உன்போல்தான் பிறந்தேன்.உன்போல்தான் வாழ்ந்தேன்
உறங்கியெழுந்த ஒருபொழுதில் அதுகனவானது
வானிலிருந்து பொழிவது மழை மட்டுமேயென்ற
என்நினைப்பு அன்றேதான் தவிடுபொடியானது..!

குண்டுகள் பொழிந்த என்வீடு குப்பைமேடானது
குழந்தைகளுடன் ஓடினோம் புதர்களைநோக்கி
விதியின்கையில் விதி விலக்கில்லாததுபோல்
எங்களை கொடூர விமானம் துரத்தியது.

பாதுகாப்பிடம்தேடி அரசுகாட்டிய இடத்தில்
அனைவரும் எம்போல் புகுந்தோம் தஞ்சம்
அங்குநாங்கள் பட்டதுன்பம்..நரகமே கொஞ்சம்
மருந்தும் உணவுமில்லை உயிருக்கு மதிப்புமில்லை

இரவில் வந்தது ராணுவம் அரக்கர்போல
என்னையொருபுறம் மனைவியை அந்தப்புரம்
இழுத்துச் சென்றனர் இம்சைப்படுத்தி
விசாரணை துவங்கியது முன்னரெழுதிய தீர்ப்பின்படி

இருகால்களுக்கும் இடைவெளிவிட்டுக் கட்டி
கைகளைக் கட்டி,கண்களை கட்டி
ஈரம் உறைக்கும் நதியின் ஓரம்
மந்தைகள்போல சென்றனர் விரட்டி

இரவின் வருகைக்காக காத்திருப்பென்றே
எண்ணியிருந்தோம் நாங்கள் அவர்முன்
அரக்கர் சிலபேர் வந்தனர் சீருடையுடன்
சற்றுமுன் களைந்த ஆடை கலைந்து

என்னநடந்தது என்றே தெரிந்தது
எம் மனைவியர்,எம் சோதரிகள்
உயிருடனில்லை அவரினி எமக்கில்லை,
தசைபொசுங்கும் வாசம் உணர்ந்ததுசுவாசம்

போர்க்களமாயிருந்தது கொலைக்களமாய்
துப்பாக்கி முனையின் திகிலூட்டும்
சில்லிப்பை உணர்ந்தோமந்த விநாடியில்
உயிரும் பறந்தது வான்வெளியில்..

மூதாதையர் நாடென்ற பாசத்தில் முந்தி
வந்தோம் தமிழகத்திற்கு..வானில் வெளியில்
காற்றில் உலவும் எமதுயிர் கண்டதே
உம் செயல்களை அதைச்சொல்ல வார்த்தையில்லை

இங்கு புண்ணாக்குகள் விற்கப்படும்

எனது கடையில் ஏராளமான வகைப்
புண்ணாக்குகள் விற்பனைக்கு உண்டு.

சில உயர்ந்த பளபளப்பிலும்
சில கரடுமுரடாயும்..
சில உடைத்தால் பொடியாவதும்
சில உடைக்கமுடியாமல் போவதும்
இன்னும் சில புண்ணாக்குதானா..?
என்ற சந்தேகத்தைக் கிளப்பும் வகையிலும்
இப்படி எத்தனையெத்தனை வகையோ உண்டு.
வீதிக்குப் பொதுவான இடத்தில்
வைத்திருக்கும் இந்தக் கடையில்
வேறுவேறு மொத்த வியாபாரிகள்
கொண்டுவந்துபோடும் சரக்கு..
வாடிக்கையாளரின் வசதிகருதி
வாங்கி விற்கவேண்டியதாயிருக்கிறது.
வருத்தம்தான் அதிலெனக்கு..!
என்ன செய்ய..சுதந்திரமென்பது
பொதுவாய்ப் போயிற்றே..!

இது என்ன கவிதைப்புண்ணாக்கு என்று
கேட்டீர்களானால்…
அதற்கு நான் பதில் சொல்லமாட்டேன்.!

மாமா..என்னைப்பாரு மாமா..!

உன் குழந்தைபோல எனக்கும்
ஓடிவிளையாட ஆசைதான்..
அப்பா வீட்டுக்கு வந்தவுடன்
ஆசையாய் அணைக்க ஆசைதான்..
அம்மாவின் மடிசாய்ந்து
அற்புதக் கனவுகாண ஆசைதான்
என்வயதொத்த பிள்ளைகளோடு
கைகோர்த்து விளையாட ஆசைதான்..
மீண்டும் பள்ளிக்கு செல்ல ஆசைதான்..

ஆனால் என் ஆசை மாமா..
அப்பாவை இழுத்துச் சென்ற
இராணுவம் அவரையெங்கே
சுட்டுப் பொசுக்குச்சோ..
அம்மாவை தூக்கிச்சென்ற
அரக்கக்கூட்டம் அவளை
எந்தத் தீயில் வீசுச்சோ..
தம்பியையும் தங்கையையும்
எந்த ஈ,எறும்பு அரிச்சுச்சோ
குண்டுமழையிலே நனைஞ்ச
எங்கவீடு எங்கே கரைஞ்சுச்சோ
மாமா..பதுங்கு குழியைக் காண்பிச்சு
இதுதான் உங்கவீடுன்னு சொன்னாங்க..
எனக்கு இங்கேயிருக்க முடியலே மாமா..
உங்க ஊருக்கு என்னை
அழைச்சுட்டுப்போ மாமா..!
உன்குழந்தை போல
என்னையும் நினைச்சுப்பாரு மாமா..!
மாமா..மாமா..என் பசிமயக்கத்திலே
கத்திக்கூப்பிட முடியலே மாமா..!

இரண்டொரு நாள் மட்டும்.!

அன்புள்ள கவிஞனே..! இதுவரை
நீ எதை எழுதியிருந்தாலும்
அது யாருக்கான கவிதையோ..
எதற்கான கவிதையோ..
எதுவாய்வேண்டுமானாலும்
இருந்துவிட்டுப்போகட்டும்..!

இத்தனைநாளும் உன்னை..
உன் உணர்ச்சிகளை
உள்ளத்துக் கிளர்ச்சிகளை
விதவிதமாய் உன் எழுத்துக்கள்
வெளிப்படுத்தியிருக்கும்..!

வாசலில் வந்துநிற்கும்
பிச்சைக்காரனுக்குக்கூட
நீ மறுத்துவிட்டால் மற்ற வீடுண்டு.
உன் தாயும் தந்தையும்
இரத்த சொந்தங்களையும்
அடுத்தவீட்டு வாசலில்
நிற்பதாக உன் கற்பனை நீளுமா..?

ஆனால்..
உண்ணஉணவின்றி
உறங்க உறைவிடமின்றி
உறவுகளின்றி,இனி
உயிரிருக்குமாவென்ற நம்பிக்கையுமின்றி
ஒரு கூட்டம் இருப்பது
உனக்கும் தெரிந்திருக்கும்..!

அப்படியொரு நிலை
அதைவிட ஆயிரம்மடங்கு
நிதர்சனத்தில் இன்றுண்டு..
அதை மாற்றிட உனக்கும்
சக்தியுண்டு..!
இலங்கையில் நிகழ்த்தப்பட்ட
இனப் படுகொலைக்கு
காரணமான ராட்ஷசர்களை
தண்டிக்க உனக்கின்று
அதிகாரமுண்டு..!

இன்று ஒரு நாள் அல்ல
இன்னும் இரண்டுநாள்..மட்டும்
அந்த அதிகாரத்தை உனது
எழுத்தின் மூலம் வெளிப்படுத்து..
எங்கெல்லாம் எதிரொலிக்கமுடியுமோ
அங்கெல்லாம் எடுத்துச் செல்..
நமது காதலும்,காதல் தோல்வியும்
இன்னும்பல சங்கதிகளும்
அடுத்தவாரமும் நம்மோடுதானிருக்கும்
அடுத்து இந்த சந்தர்ப்பம்
எப்போதும் கிடைக்காது.

மத்தியஅரசே,இலங்கையில்
நிகழ்ந்தது போர்க்குற்றமே..என
அமெரிக்கா கொண்டுவந்த
தீர்மானத்தை ஆதரி என்று..!
ஒருவரி ஒரேயொருவரி எழுது
இத்தளத்தில் உன் எழுத்தால்
எழுதவும் தூண்டு...

இதிலாவது நாம் நிரூபிப்போம்..!

தமிழன் என்றொரு இனமுண்டு
தனியே அவர்க்கொரு குணமுண்டு..!

உணர்வாய்த் தமிழைப் பேசிடுவார்
செயலி லென்றால் மறந்திடுவார்.
கருவில் வீரம் இருக்குதென்பார்.
உருவில் அதுவும் தெரியுதென்பார்.

இரவில் மதுவின் மயக்கத்திலே
இடையில் கொறிப்பது தமிழன்றோ..
ஈழம் ஈழம் என்றே முழங்கும்
வேழம்போலே வேசம்நாளும்

நேசம்கொண்ட மனிதரைப்போலே
நாட்கள் முழுதும் பேசுகின்றார்.
அரசியலுக்கான வழியாய் அதனை
ஆர்த்தே எங்கும் பொழிகின்றார்.

இன்னுயிர் இழந்த தமிழன் வாழ்வை
பார் முழுதும் சொல்லிப் பிதற்றுகிறார்.
பதவிகள் கிடைத்தே அமர்ந்திட்டால்
ஆரெவர் தமிழரென்றே கேட்கின்றார்..!

தமிழனென்றோ,இந்தியனென்றோ
நினைக்க மாட்டீர் நீரென்றால்
மனிதனென்றாவது நினைக்கிலையோ
தானாடாவிட்டாலும் சதையாடுதல் வழக்கமன்றோ..?

மறத்தமிழன் என்பதற்கு உதாரணமாய்
அனைத்தும் மறந்து வாழ்கின்றீரோ..?
இதுவே தமிழனின் தனிக்குணமென்று
உலகிற்கு எடுத்துக் காட்டுவீரோ.?

உலகம் முழுதும் கலகம் விளைக்கும்
பெரியண்ணன்..பெரிய போலீஸென்று
பிம்பம் பெற்றவன் அமெரிக்கன்
அவனே மனம்புழுங்குமொரு நிலை

இராஜபக்ஷே எனுமொரு இராட்ஷசன்
போர்க்குற்றவாளியென ஐநாவில் தீர்மானம்
அதனை ஆதரிக்கவேண்டுமென இந்தியாவை
ஆட்டிவைக்கவேண்டாமா நமதெழுத்துக்கள்..?

ஆங்கிலப் புலமை மிக்கோராய் நீரிருந்தால்
ஆளுக்கொரு கடிதம் மத்தியஅரசுக்கு
நீங்;கள் எழுதலாமே இ மெயிலில்
அதனைத் தடுக்க ஆருமில்லை

பாசம்மிக்க தமிழுணர்வைக் காட்டவொரு
துரும்பையாவது நீர் அசைத்தீரென
வரலாறு உங்களை நினைவு கூரட்டுமே..
வாருங்கள்,உணர்வுமிக்க தமிழெரென்று
இதிலாவது நாம் நிரூபிப்போம்..!

நீதான் நீதிபதி.!

இதுவரை நீ எழுதியதில்லை
எதற்காகவும் அசைந்ததில்லை.
அனுபவமுனக்கு வாய்க்கவில்லை
அதனால் நீ மனிதனில்லையா.?

அடுத்த தெருவில் பிடித்த தீ
அணைக்காமல் விட்டால் அது
தொடர்ந்து அண்டும் உன்வீட்டை
அதையும்நீ கேட்டதில்லையா.?

எட்டு மணிநேர வேலைக்காக சிக்காகோவில்
யாரோ சிலபேர் இரத்தம்சிந்திப் போராட
அதன்பயனை உரிமையென்று நீ
அனுபவிக்கவில்லையா..?

எத்தனையெத்தனை போராட்டம்
எங்கெங்கோ நடைபெற்றதில்
உலகம் தழுவிய உரிமைகளாய்
உன்வரை அதுவந்து சேரவில்லையா.?

ஆனால் தமிழா நீயும்தான் போராடி
எதையாவது எந்தநாட்டுக்காவது
பெற்றுத் தந்தேன் என்றே நீயும்
தோளுயர்த்தத் தயாரா.?

உனக்கொரு நல்ல சந்தர்ப்பம்
மடியில் வந்து வீழ்ந்தது பார்..
மனிதம்கொன்று,மனிதரைத் தின்ற
மரணவியாபாரி ராஜபக்ஷே..

மன்னிக்க முடியாத குற்றவாளியென
நீயும் இன்றே தீர்ப்பு எழுது..!
அதை மத்தியஅரசுக்கு அனுப்பிவிடு..
அது மகத்தான போராட்டம் கையிலெடு..!


-அன்புள்ள தோழர்களே..! வீதிக்கு சென்று போராட உங்களுக்கு நேரமில்லாமல் இருக்கலாம்.
எல்லோர் முன்பும் கையுயர்த்த உங்களுக்கு வெட்கமாகக்கூட இருக்கலாம்.இதற்காக செலவழிக்க உங்களிடம் பணம் இல்லாமலிருக்கலாம்..இப்படி எதுவேண்டுமானாலும் இல்லாமல் போகட்டும்.
ஆனால்.இங்கு தொடர்பிலிருப்பவர்கள் எல்லாரும் எழுதும் திறமையை வைத்திருக்கிறீர்கள்.
இன்னும் ஆங்கிலப்புலமை பெற்றவராகவும் இருக்கிறீர்கள்..அதை நீங்கள் இல்லையென்று சொல்லிவிடமுடியாது.
இந்த நேரத்தில எனது வேண்டுகோள்..உலகப் பெரியண்ணன் என்றும்,மிகப்பெரும் போலீஸ் எனறும்,உலக அளவில் மிகப்பெரிய ரவுடியென்றும்,பெயர்பெற்ற அமெரிக்காவே இன்று இலங்கை அரசின் ராஜபக்ஷே போர்க்குற்றவாளி என்று ஐநா அவையில் தீர்மானம் கொண்டுவருகிறது.அதனை இந்தியா ஆதரிக்கவேண்டும் என,தெருவில் இறங்கி பல்வேறு இயக்கங்கள் போராடி வருகின்றன.
ஈழத்தில் என்னவெல்லாம் நடந்ததென்று உங்களுக்கும் தெரியும்.அந்த ரத்த சொந்தங்களுக்கு,நமது மூதாதையரின் வழித்தோன்றல்களுக்கு இன்னும் எத்தனையோ நல்லது நடக்கவேண்டியதிருக்கிறது.
அதற்காக நாம் இந்த தீர்மானத்தை ஆதரிக்கவேண்டியதிருக்கிறது.
அதனால்தான் தோழர்களே..குடியரசுத்தலைவர்,பிரதமர்,இன்னும் மத்தியஅரசின் அதிகாரப்பூர்வ இமெயில்களுக்கு,நீ;ங்கள் உங்கள் கோரிக்கையாக-ஐநாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும்-என ஒற்றைவரி..ஒரே வரி…எழுதுங்கள்.இதன் மூலம் நீங்களும் தங்கள் சொந்த நாட்டின் அடையாளத்தை இழக்கப்போகும் அச்சத்திலிருக்கும் நமது சொந்தங்களுக்கான போராட்டத்தில் பங்கேற்றவர்களாகி விடுவீர்கள்.அவர்களுக்கு எதிர்காலத்தில் அமையப்;போகும் நல்வாழ்வில் உங்கள் பங்கும் இருக்கிறது என்பது மிகப்பெருமையான விஷயம் அல்லவா..?.வாருங்கள் தோழர்களே..!-அன்புடன் பொள்ளாச்சி அபி-

சுடலைமாடா..

பத்துத் தலை ராவணணைப்
பார்த்தில்லை இங்கே யாரும்..
ஒத்தத்தலை ராஜபக்ஷேவை
பாத்துக்கோடா சுடலை மாடா..

சித்தம் எல்லாம் கலங்கவொரு
காரணமா ஆசையைத்தான்
சொல்லிப்போன புத்தனையே
பாத்ததில்லை இங்கே யாரும்..

புத்தன் வழி வந்தவன்னு
சொல்லி ரத்தம் கேட்குமொரு
பித்தனாத்தான் திரியுறானே
சுடலை மாடா..

கத்தும்குயிலா திரிஞ்ச பல
குழந்தைகளை கொத்துக்குண்டு
போட்டு ஒரு குத்தம் செஞ்சான்
சுடலை மாடா..

யுத்தமெனும் நெறிகளெல்லாம்
மனிதக்குழுவுக்குள்ளே
ரத்தம் சிந்தும் போர்களுக்கே
சுடலைமாடா..

இலங்கையில் எதிர்பார்க்காதே
இது மனிதனுக்கெதிராய்
அரக்கர்கள் செய்த போரடா
சுடலைமாடா..

பிஞ்சுக்குழந்தையாய் இருந்தாலும்
அதைப்பெற்ற பெண்ணாயிருந்தாலும்
கண்ணைநோண்டி வீசுவது
மட்டுமில்லேடா சுடலைமாடா..
தீயில் சுட்டுப் பொசுக்கி
மோந்துபார்த்தாண்டா சுடலைமாடா..

எண்ணிப்பார்த்தா நெஞ்சு வெடிக்குதடா
சுடலைமாடா..இந்தக் கேடுகெட்ட
அரசியல்வாதிகளெல்லாம்
அவங்க சாவு மேலே
லாபம் பாக்குறாங்கடா சுடலைமாடா..

கண்ணிருந்தும் பாக்கமுடியாமே
காலிருந்தும் நடக்கமுடியாமே
மனசிருந்தும் செய்ய முடியாமே
தவிக்கிறோமே சுடலைமாடா..

எனக்கு ஒருநாள்,ஒரேநாள்
இந்த நாட்டுக்கு பிரதம மந்திரியாகும்
வழியொன்னும் தெரியலையேடா
சுடலைமாடா..
அதுமட்டும் நடந்துச்சுன்னா
ஒரு மணிநேரம் எனக்குப்
போதுண்டா சுடலைமாடா..

ராஜபக்ஷேன்னு ஒருத்தன்
மட்டுமில்லேடா..
அவன் வம்சம்னு எவனுமே
இருக்கமாட்டாண்டா சுடலைமாடா..!

இந்தியனாப் பொறந்துட்டேன்னு
ஆத்திரமா வருதுடா சுடலைமாடா
இன்னும் எத்தனையோ
சொல்லத்துடிக்குதடா சுடலைமாடா

காட்டுப்பூ.!

கன்னியர் சூட,தெய்வக்
கருவறை சூட,
விழாநாயகன் சூட,
விண்ணேற தரையில்
வீழ்ந்தவனும் சூட,
மங்கல மங்கை சூட,
மலர்கிறது ஆயிரம் பூ

பிறப்பு முதல் இறப்பு வரை
மனிதனோடு இணைந்ததினால்
மதிப்பைத் தேடிக்கிடக்கிறது
சிலபோது அவர் தலையிலும்
மற்றபோது அவர் காலிலும்

ஆனால்,
யார் பறித்தாலென்ன.?
பறிக்காவிட்டாலென்ன.?
மதிப்பு தந்தால் என்ன.?
மறுத்தால் என்ன.?.

யாருக்காகவும் காத்திருக்காமல்
மலர்வதென் கடமையென
மணக்கிறது ஆயிரம் பூ.
வண்ண வண்ணமாய்
வனப்புக் காட்டும் காட்டுப்பூ.!

உன் நினைப்பு..!

உன்னைப் பார்த்த
முதல் நாளிலிருந்து
சில நாட்கள் வரை
மின்னல் வெட்டினைப்போல
உன் நினைப்பு..!

இப்போதெல்லாம்
எப்போதும் உன் நினைப்புத்தான்
மின் வெட்டினைப் போல..!

கண்டுபிடித்திருக்கிறோம்.

எத்தனை காலமாக சிந்தித்தாய்
என்னென்னவோ கண்டுபிடித்தாய்
மாற்றங்களைக் கொண்டுவந்தாய்
மகத்தான சாதனைகள் தந்தாய்

கம்பியில்லா தந்தி தந்தாய்
கம்பியில்லா தொலைபேசி தந்தாய்
ஆனால்..
மின்சாரமில்லாத கம்பி தந்தாயா.?
அதைத் கண்டுபிடித்திருக்கிறோம்.

இதனால் சில நன்மைகளும்
நடந்திருக்கின்றன..
சொன்னால் ஆச்சரியப்படுவாய்.
தொலைக்காட்சி தொல்லையின்றி,
பக்கத்துவீடுகளில் இப்போது
யார் இருக்கிறார்கள்
என்ன செய்கிறார்கள்
என்று பேசிக்கொள்ள முடிகிறது.!

இதோ பார் நிலா என்று
குழந்தைக்கு சோறூட்டமுடிகிறது.
மறந்துபோன கிராமியவிளையாட்டுகள்
மாலைநேர வீதிகளில்
குழந்தைகளால்
மறுஉருவாக்கம் பெறுகின்றன.

ஒரு விளக்கைச் சுற்றி அமர்ந்து
குடும்ப உறுப்பினர்களெல்லாம்
ஒன்றாய் சாப்பிடக்கூட முடிகிறது.
உறவுகள் புதுப்பிக்கப்படுகிறது.

மின்விசிறியில்,மின் குளிரில்
உறங்கிப்பழகிய வீட்டுமனிதர்கள்
உறக்கமின்றி விழித்திருப்பதால்
திருட்டுபயமும் அறவேயில்லை.!

ஆகா..எல்லாவற்றிலும்
ஏதொவொரு நன்மையிருக்கும்
என்பது இதுதானோ..?

தலைமுறைகள். சிறுகதை.!

சுப்ரமணியசாமிகோவில் வாசலில் நின்று,வேடிக்கைபார்த்துக் கொண்டிருந்தான் ஈஸ்வர்.கோவிலுக்குள்ளிருந்து,பட்டுப்புடவை,ஜரிகைவேட்டி,வைரஅட்டிகை, இரட்டை வடச்சங்கிலி சகிதம் வந்து கொண்டேயிருப்பவர்களை நோக்கி,அய்யா சாமி,ஆண்டவரே என்று பலஜோடிக் கைகள் இடைவிடாது நீண்டு கொண்டேயிருந்தன.அவற்றைக் கண்டுகொண்டதாகவே காட்டிக்கொள்ளாத பலரும்,செருப்புவைக்கும் இடத்தில் தங்கள் ஜோடி பத்திரமாக இருக்கிறதா.? என்று சென்றுபார்ப்பதிலேயே குறியாக இருந்தனர்.
ஈஸ்வருக்கு இவற்றைப் பார்க்கும்போது,
“நடமாடும் ஆசாமிகளை,
சாமிகளாகப் பாவித்து
கைநீட்டுவோரிடம்,
தாங்கள் கடவுளாகமாறும்
சந்தர்ப்பத்தை
மறுதலித்து விட்டுப்போகும்
மனிதர்களைப்பார்த்து
சிரிப்புவருகிறது...!” என்று கவிதையாய் மனதுக்குள் ஓடியது.ஆனால் கோவிலுக்குள் சென்றுள்ள தனது தாத்தா சங்கரன்அய்யா அப்படியல்ல. அதுவும் அவனுக்குத் தெரியும்.
அவனது காத்திருப்பை அதிகப்படுத்தக்கூடாது என்று நினைத்தாரோ,என்னவோ வழக்கத்தைவிட,முன்னதாகவே வந்து கொண்டிருந்தார் சங்கரன்அய்யா.தன்னை நோக்கி நீண்ட கைகளில் சில்லறைகளை அவர் கொடுத்தபோது,அவரை நோக்கி கும்பிட்ட கைகளுக்கு,பதிலாக இவரும் கும்பிட்டுக் கொண்டே வந்தார்.
கொடுப்பதால் மட்டுமே தாங்கள் மிக உயர்ந்தவர்கள் என்று நினைத்துக் கொண்டு,தங்களுக்கு கும்பிடு போட்ட கைகளையோ,முகங்களையோ ஏறெடுத்தும் பார்க்கப் பிடிக்காதவர்களைப்போல அமர்த்தலாகத் தலையை ஆட்டிக் கொண்டு போகும் சிலரையும் இந்த இடைவெளியில் ஈஸ்வர் பார்த்துக் கொண்டுதான் இருந்தான்.
நெடுநெடுவென்று அண்ணாந்து பார்க்கும் உயரம்.எழுபத்தாறு வயது கடந்தும் ஆகிருதியான தேகம்.இன்னும் விடாப்பிடியாய்,ஜிப்பாவகை சட்டைகளையே போட்டுக்கொள்ளும் அவரது விருப்பம்.நெற்றியின் அகலத்தை நிறைத்துநின்ற சந்தனம்,விபூதியுடன்,அவர் கோவிலை விட்டு வெளியே வரும்போது, இந்தக்கோவிலைக் கட்டிவைத்த அரசன்,ஏதோ நவீனகாலத்து மனுசனாய் மாறி வெளியே வருவதுபோல தோன்றியது,ஈஸ்வருக்கு.
“ஏம்ப்பா..உனக்கு சாமி கும்பிடத்தான் பிடிக்காதுன்னாலும்,எனக்காக உள்ளே வந்திருக்கலாமில்லையா..? வெயில்லே இங்கியே இத்தனைநேரம் நின்னுகிட்டு இருக்கியே..?”தாத்தாவின் குரலில் பாசம் இழையோடியது.

ஈஸ்வருக்குத் தெரியும்.உள்ளேசென்று சாமி கும்பிடாமல்,சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தால்,கோவில் குருக்கள் உட்பட தாத்தாவிற்கு தெரிந்தவர்களாக வருபவர்கள், தன்னை ஒருமாதிரிப் பார்க்கக்கூடும்.அது தாத்தாவிற்கு எவ்வித தர்ம சங்கடத்தையும் உண்டுபண்ணிவிடக்கூடாது என்பதால்,அந்த சந்தர்ப்பங்களை அவன் பெரும்பாலும் தவிர்த்துவிடுவதுண்டு.

ஆனால்,தனியாக வரும் சிலநேரங்களில்,கோவிலுக்குள் அவன் சுவாதீனமாகச் சென்று,கோவிலின் ஒவ்வொரு பகுதியிலும் இருக்கும் கல்சங்கிலி,யாழி,ராசிச்சக்கரம்,இறைவனுக்கு கண்இடந்து அப்பிய கண்ணப்பர், துவாரபாலகர்கள் என சிற்பவேலைப்பாடுகளை மணிக்கணக்கில் ரசிப்பதுண்டு.
“இல்லே தாத்தா..என்னைப்பத்தி உங்களுக்கு தெரியும்தானே.?”
“எனக்கு இது மட்டுமா தெரியும்.?.இன்னும் உன்னைப் பத்தி நிறையவே தெரியும்.அதுவுமில்லாம இப்ப இங்கே எதுக்கு வந்திருக்கேன்னும் தெரியும்..” சங்கரன்அய்யா சொல்லிக்கொண்டே செல்ல,ஈஸ்வருக்கு வெட்கம் கலந்த சிரிப்பு, “சும்மாயிருங்க தாத்தா..” என்றான்.
இவனைப்பற்றித் தெரியும் என்று சங்கரன்அய்யா சொன்னதிலும் விஷயம் இருக்கிறது.
“சரி.நீ வந்த விஷயத்தை இங்கியே பேசுறஅளவுக்கு ஒண்ணும் அவசரமில்லையே..நம்ம தோட்டத்துக்கு போயிடலாமில்லையா..?”
“ஒண்ணும் அவசரமில்லே,அங்கியே போயிடலாம் தாத்தா..”
சரி உன்னோட வண்டியை எடுத்துட்டு நீ பின்னாடியே வந்துடு”என்றபடி அவர் சென்று அவரது காரில் உட்கார்ந்ததும்,தயாராக இருந்த டிரைவர் வண்டியை எடுத்துக் கொண்டுபோனார்.
ஈஸ்வர் தனது பல்சரைக் கிளப்பினான்.தாத்தாவைப்பற்றி எப்போது நினைத்தாலும்,மனதுக்குள் பெருமையும்,பெருமிதமும் மிகும். கோட்டாம்பட்டியைப் பொறுத்தவரை,அந்த ஊர்மக்களுக்கு நல்லது கெட்டது எதுவென்றாலும் தாத்தாதான் எல்லாம்.அது திருமணமென்றாலும்,இழவு என்றாலும் தாத்தாவிற்குத்தான் முதல் தாக்கீது பறக்கும்.தாத்தாவின் ஆலோசனைகளைக் கேட்டு மோசம்போனவர்கள் இதுவரையில்லை என்பதே ஊரின் நம்பிக்கை.அதை ஒவ்வொரு விஷயத்திலும் தாத்தா நிரூபித்துக் கொண்டுதான் இருந்தார்.
அப்படித்தான் ஒருநாள்,தங்கராசுவின் வீட்டுக்குத் திருட வந்த,இளம்விதவைப் பெண் ஒருத்தியை ஊரின் நடுவில் உள்ள புளியமரத்தில் கட்டிவைத்துவிட்டு, சங்கரன்அய்யாவிடம் வந்து சொன்னார்கள் ஊர்மக்கள்.அய்யா சொன்னால் அப்புறமாகப் போலீசில் சொல்வதாகவும் ஏற்பாடு.
“பெண்ணை புளியமரத்தில் கட்டிவைத்து அடிப்பதா..? என்னடா இது அநியாயம்.யாருடா உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது.?” என்று கொந்தளித்துப் போனார் சங்கரன்அய்யா. “தம்பி வண்டியை எடுப்பா..” என்று,காருக்குள் பாய்ந்தவரின் வேகத்திற்கு ஈடாய் விரைந்து சென்றது கார்.
கல்லூரி விடுமுறைக்காக வந்திருந்த ஈஸ்வர் இந்தக்காட்சிகளைப் பார்த்துவிட்டு,அங்கிருந்த மோட்டர் சைக்கிளை எடுத்துக்கொண்டு,தாத்தா சென்ற காரினை அவனும் விரட்டிச் சென்றான்.
அந்தப் புளியமரத்தின் அருகில் சென்ற கார் கிரீச்சிட்டு நின்றதும்,இறங்கிய தாத்தாவை,ஓடிவந்து மொத்த ஜனமும் சுற்றிக் கொண்டது.
“விலகுங்க..முதல்லே கயிறெல்லாம் அவுத்துவிடுங்கப்பா..” கூட்டம் பதறிச்சென்று ஓடிப்போய்,நிமிடத்தில் கட்டுகளிலிருந்து அந்தப்பெண்ணை விடுவித்து,சங்கரன் அய்யா முன்கொண்டுவந்து நிறுத்தியது. “யாரும்மா நீ..?”
ஊர்மக்கள் அவருக்கு கொடுத்த மரியாதையைப் பார்த்து மிரண்டுபோய், நின்றிருந்த அந்தப்பெண்,பேசுவதற்கு தைரியமில்லாதவள்போல சுற்றும்முற்றும் பார்த்தாள்.அவமானத்தால் சிறுத்திருந்த முகமும்,விழிகளில் வழியும் கண்ணீருமாக இருந்தாள்.
நேர்த்தியாய் அவள் உடை அணிந்திருந்த விதமும்,கட்டுகளை அவிழ்த்துவிட்டபின்,உடனடியாக முந்தானையால்,தனது உடலை அவள் போர்த்திக்கொண்ட வேகமும்,இவள் திருடுவதற்காய் வந்த பெண்ணல்ல என்று சங்கரன்அய்யாவிற்கு விநாடிகளில் புரிந்துபோனது.
“சொல்லும்மா.. என்னவிஷயமா இங்கே வந்தே..? திருட்டு,பெரட்டு பண்றதுக்கு நீ இங்கே வரலைன்னு தெரியுது.ஆனா எதுக்கு வந்தேங்கற உண்மையைச் சொன்னாத்தானே எங்களுக்குத் தெரியும்” சங்கரன்அய்யாவின் குரலில் இருந்த பரிவும்,தன்மீது கொண்ட நம்பிக்கையுமாக வார்த்தைகள் வந்து விழுந்ததில், அவள் தைரியம் பெற்றாள்போலும்.சங்கரன் அய்யாவை நோக்கிக் கும்பிட்ட அவள், “அய்யா உங்ககிட்டே,கொஞ்சம் தனியா பேசணும்..”என்று தயக்கமும்,பணிவுமாக தெரிவித்தாள்.
“ஊம்,இந்தாப்பா எல்லாரையும் கொஞ்சம் தள்ளி நிற்கச்சொல்லு.கூட்டம் சிதறி ஒதுங்கியது.சில நிமிடங்கள் அவள் பேசியபின்,சங்கரன் அய்யா,ஆழ்ந்த யோசனையில் இறங்கிவிட்டதாகத் தோன்றியது.

எல்லாரும் எம் பக்கத்திலே வாங்க,இந்தப் பொண்ணு,என்னோட மகள் முறையாகுது.இவளை எங்கவீட்டுக்கு இப்பநான் கூட்டிட்டுப்போறேன்.யாருக்காவது எதாவது சொல்லணுமா..?” தனக்கு முன் திரண்டிருந்த கூட்டத்தை,மையமாக நோக்கிக் கேட்டார் சங்கரன் அய்யா.
திருடவந்ததாய்,தங்கராசுவின் வீட்டிலிருந்து ஆட்கள் கொண்டுவந்து கட்டிவைத்த பெண்,சங்கரன் அய்யாவிற்கு மகள் முறையா..?.கூட்டம் ஆச்சரியத்தில் வாய் பிளந்தது.ஆனால்,சங்கரன் அய்யா சொன்னால்,அதில் ஏதோ நல்லவிஷயம் இருக்கும்.
“அய்யா,தெரியாம நடந்துருச்சுங்கய்யா.மன்னிச்சுக்குங்கய்யா”.ஜனங்களின் குரலில் நிஜமான வருத்தம்.
“வண்டியிலே ஏறும்மா..”என்று அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார் சங்கரன் அய்யா.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஈஸ்வருக்கு,சங்கரன் அய்யா என்னபேசினார்.? இங்கே என்ன நடக்கிறது.? என்று தலைகால் புரியவில்லை.
ஆனால் ஊர்மக்களின் முன்பாக,இதுகுறித்து தாத்தாவிடம் பேசுவதற்கும் தயக்கமாக இருந்தது.யோசித்தபடியே,வீடு வந்து சேர்ந்தான்.

இரு தினங்கள் கழித்து,தங்கராசுவின் அப்பா,அம்மா,தங்கராசு மூவர் மட்டும் வந்து தாத்தாவை சந்தித்து,சில மணிநேரம் ரகசியம் பேசிக்கொண்டிருந்துவிட்டுப் போனார்கள்.அதற்கு மூன்றாம் நாள்,சுப்ரமணியசாமி கோவிலில்,மிகவும் எளிதாக,தாத்தாவின் தலைமையில்,தங்கராசுவுக்கும்,அந்தப்பெண்ணுக்கும் கல்யாணம் நடந்தது.ஆசிர்வாதம் வாங்கிய அந்தப்பெண்,தாத்தாவின் கால்களில் வெகுநீண்ட நேரம் விழுந்து சேவித்து,தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டாள்.
ஈஸ்வருக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை.திருடி என்று,ஊர்மக்களால் கட்டிவைத்து அடிக்கப்பட்ட பெண்,தங்கராசுவுக்கே எப்படி மனைவியானாள்..?
அன்று மதியம் அடக்கமுடியாமல்,தாத்தாவிடம் கேட்டே விட்டான்.தாத்தா அமர்த்தலாகச் சிரித்துக்கொண்டே சொன்னார். “ராஜா..” தாத்தா மிகுந்த செல்லமாகக் கூப்பிடுவதென்றால் அவனை அப்படித்தான் கூப்பிடுவார்.தனது தந்தையின் பெயரான தனிக்காட்டு ராஜா என்ற பெயரை,ஈஸ்வருக்கு வைத்திருந்தாலும்,அவ்வாறு முழுப்பெயரை உச்சரித்து விளிப்பது தாத்தாவிற்கு எப்போதும் சம்மதமில்லை.
“சொல்லுங்க தாத்தா..”சுவாரஸ்யமான கதை கேட்பதற்கு,ஆர்வம் மின்ன தாத்தாவின் முன்வந்து அமர்ந்து கொண்டான் ஈஸ்வர்.
நீ இப்ப காலேஜிலே படிக்கிறே.இந்தக் கதையைப் பத்தி இன்னொரு நாளைக்கு சொல்றேன்.என்று தாத்தா சொன்னதும்,பொசுக்கென்றாகி விட்டது ஈஸ்வருக்கு.
அதற்குப்பின்,மீண்டும் ஒருமுறை அதைப்பற்றி தாத்தாவிடம் கேட்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.சில மாதங்கள் கழித்து,அந்த மர்மத்தைப் பற்றி ஊரார் மூலம் தெரிந்தபின்,அவன் தாத்தாவிடம் கேட்கவுமில்லை.அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொள்ளவுமில்லை.ஆனால் தாத்தாவின் மீது வைத்திருந்த மதிப்பு,பல மடங்கு கூடிவிட்டது.


முன்னால் சென்று கொண்டிருந்த காரிலிருந்து,ஈஸ்வரைத் திரும்பிப் பார்த்தார் சங்கரன் அய்யா.சீரான வேகத்தில்,அலட்டல் இல்லாமல் தன்னைப் பின்தொடர்ந்து வருவது தெரிந்தது.
தனது அப்பாவைப்போலவே முகஜாடை கொண்டிருந்த ஈஸ்வரைப் பார்க்கும்போதெல்லாம்,அவரது அப்பாவைப் பார்த்ததுபோலவே மதிப்பு மிகும் சங்கரன் அய்யாவிற்கு.அப்பாவைப் போலவே,ஈஸ்வரும் தன்மீது பிரியமும்,மரியாதையும் வைத்திருப்பதை நினைக்கும்போதெல்லாம் சங்கரன் அய்யாவிற்கு,ஏதோ பூர்வஜென்ம புண்ணியம் நிறைவேறியது போல மகிழ்ந்துபோவார்.
தான் வாலிபனாய் இருந்தபோது,தனது விருப்பம் ஒன்றை அப்பாவிற்காக விட்டுக்கொடுக்க வேண்டிதிருந்தது என்ற ஒரேயொரு நெருடலைத்தவிர,வேறு எந்தக்குறையுமே இல்லை சங்கரன் அய்யாவிற்கு.






“ராஜா..இந்த உலகத்துலே நாம கண்ணுலே பாக்கறது,காதாலே கேட்கறது எல்லாவிஷயத்துக்கும் பின்னாடி,ஏதோ ஒரு உண்மை இருக்கும்.அதோட முழு உருவமும் நமக்கு உடனே தெரியாது.அதனாலே எதையும் சந்தேகப்படு.ஆராய்ச்சி பண்ணு.அதுலே கெடைக்கிற முடிவையும் பாரு.அப்புறம் அதுதான் இறுதியான முடிவுன்னும் நெனச்சுக்காதே..அந்த முடிவிலேயும் மாற்றம் ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலை எப்போ வேணும்னாலும் வரலாம்.நாம எந்த ஒரு விஷயத்தை செஞ்சாலும்,அதுலே தேர்ச்சியானதை,முடிந்தவரை உண்மைக்குப் பக்கத்திலே நின்னு செய்யணும்.தெரியுதா..?”
தாத்தா ஏன் நீண்ட பீடிகை போடுகிறார்.? என்று ஈஸ்வருக்கு விளங்கவில்லை.
அவரே மற்றதையும் சொல்வாரென்று,அவன் மௌனமாய்க் காத்திருந்தான்.
இப்ப நடந்து முடிஞ்ச இந்தக் கல்யாணத்தைப் பத்தி தெரிஞ்சுக்கணும்தானே நீ ஆசைப்படறே..?.
ஆமாம்..தலையாட்டினான்.
ஒரு சுவாரஸ்யமான கதையை கேட்பதற்காக,அவன் விழிகளில் மின்னிய ஆர்வத்தைக் கண்டார்,சங்கரன் அய்யா.
தங்கராசுவும்,அந்தப் பெண்ணும் சிறு வயதிலேயே,காதலிச்சு,அது கைகூடாமே, அந்தப் பெண்ணுக்கு வேற இடத்திலே கல்யாணமாகி,அதோட புருஷன் அல்பாயுசுலே போய்ச் சேந்துட்டான்.பின்னாடி அவளை எங்கியோ பாத்த தங்கராசு நடந்ததையெல்லாம் கேட்டு,பரிதாபப்பட்டு,அவளை திரும்பியும் காதலிக்க ஆரம்பிச்சு,கணவன் மனைவியாகவே வாழ்ந்துட்டாங்க.

நாங்களே குற்றவாளி.!

அன்புள்ள மாணவனே.!
ஏனடா உன் நெஞ்சில்
இத்தனை ஆத்திரம்.?

கத்தியால் ஆசிரியரை
குத்திக் கொல்வதை-இதுவரை
கேட்டதில்லையடா தம்பி.!

நீ பிறந்ததிலிருந்து
ஐந்து வருடம்
மட்டுமே உனக்கு
பெற்றோரடா கண்ணே.!

பிறகெல்லாம் உனது
பெற்றோரெனப்படுவது
உனது ஆசிரியர்தானடா.!

கத்தியால் அவரைக்
குத்திக் கொல்லும்போது
நீ அவரது கண்களைப்
பார்த்தாயா தம்பி..?

அதிலுன்னை மன்னிக்கும்
அம்மாவின் கருணை
விழிகளைக் கண்டிருப்பாய்.!

அவர் சிந்திய இரத்தம்
தரையில் வழிந்தபோது
உன்மீது வைத்திருந்த
பாசமும்,அக்கறையும்
பரவிப் படர்ந்திருக்குமே..!

தான் அலறினால்கூட
அடுத்தவர் வந்துன்னை
அடித்திடுவாரென
மௌனமாய் வலிதாங்கி
மயங்கி விழுந்திருப்பாரே.
கண்ணே..!

குற்றம் புரிந்தது நீ
குற்றவாளியாக நீ
ஒரு நல்லவனாக
நீ உருவாவதற்கு
என் ஆசிரியப் பணி
உதவவில்லையே
என்று மறுகியிருப்பாரே..

தான் இறக்கும்போதும்
உன்னிடமுள்ள தவறை
இனி திருத்த உயிரில்லையே
என்று மனதில் கதறியிருப்பாரே..
அய்யோ கண்ணா..
என் நெஞ்சு வெடிக்கிறதே.!

சிறுவர் சிறையிலிட்டுன்னை
சித்திரவதை செய்வாரேயென
அவரது சித்தம் கலங்கி
அழுதிருப்பாரே..!

ஏனடா உனக்குப்
புரியவில்லை.?
மானிடனாய் வாழ
உனக்குத்தெரியவில்லை..!

எங்களுக்கு பணமும்
பங்களாவும்,
பகட்டான வாழ்க்கையுமே
லட்சியமாக இருக்கிறது..!

குழந்தைகளை,
குழந்தைகளாய் வளர்க்க
எங்களுக்கு தெரியவில்லை..!

சட்டத்தின் முன் நீ
குற்றவாளி..
சமூகத்தின் முன்
நாங்களே குற்றவாளி..!

-பொள்ளாச்சி அபி -

கொள்ளிக்கூடம்.!

இந்திப்பாடத்தில்
மதிப்பெண் குறைவாம்..!
குறைகூறிய ஆசிரியைமீது
குற்றம் கண்டான் மாணவன்.

குற்றம்தந்த அழுத்தத்திலிருந்து
விடுபடயோசித்த மனது..
புதுவழியொன்றை கண்டது.
புத்தியால் யோசித்தவன்-பின்
கத்தியை வாங்கினான்.
சக்தியெலாம் திரட்டி
குத்தினான்...!
ஒரு தலைமுறையின்
ஆல விருட்சம்
மண்ணில் ரத்தம் சிந்தி
மரித்ததே..கேட்டபோது
கண்ணீர் உதட்டைக் கரித்ததே..!

பள்ளியில் பிஞ்சு-அதன்
மனதில் என்ன நஞ்சு..?
கொஞ்சும் பெற்றோர்
முதல் ஆசிரியர்.

ஆசிரியரோ இரண்டாவது
பெற்றோர்..இப்படித்தான்
நாம் கற்றதும்,
கல்விபெற்றதும்...!

இதில் எங்கே வந்தது
குழப்பம்.?
பள்ளிக்கூடம் இன்று-தீக்
கொள்ளிக்கூடம் ஆனதேன்.?

புரிதல் இல்லாத
மண்ணாய் வருபவனை
பொன்னாய் மாற்றி,
பொன்னுலகம் படைக்கவொரு
போர்வீரனாய் அனுப்பும்
இடமல்லவா அது.

கல்விக்கூடம் வெறும்
மாணவர்களின்
காட்சிக்கூடமானதா..?
ஆசிரியர்களுக்கான
அட்சய பாத்திரமானதா..?

ஆசிரியப்பணி
அறப்பணியென்றுதான்
இருந்தது..-அது
அரைப்பணியாயிற்றோ..?

கேள்விக்கு விடையை
அந்த மாணவனே
சொன்னான்..
புதிய திரைப்படம்
பார்த்தேன்.அதில்
வந்த காட்சி
என்னை திட்டம்
தீட்ட வைத்ததென்று.

நெஞ்சம் பகீரென்கிறது.
நம்மைத் தொடரும்
இளம் தலைமுறைக்கு
நாம் கற்றுக் கொடுப்பது
இதைத்தானா..?

புதிதாய் படைக்கும்
இடத்திலிருப்பவரெல்லாம்
வெட்கப்பட வேண்டாமா.?.

இறந்தது ஒரு உயிர்
என்பதில் சுரந்தது
கண்ணீர்-ஆனால்
இதற்கு என்ன காரணம்.?
வளரும் தலைமுறைக்கு
வழிகாட்டும் பொறுப்பு
நமக்கில்லையா..?

நமது கலாச்சாரம்
பிரதிபலிப்பதே நம்
படைப்புகளின் சூத்திரம்.
நம் சூழ்நிலையே
சிந்தனைகளின் தாய்..!

உயிர்ச்சூழ்நிலையை
மாற்றுவோம்..!
உயர் சூழலை
உருவாக்குவோம்.!

-பொள்ளாச்சி அபி-

பெண்களே..ஓ..பெண்களே..!

குனிஞ்ச தலையை நிமிருங்க
விரிஞ்ச உலகைப் பாருங்க
உலகம் உருவம் பெற்றிட
உங்க பங்கு பாதிங்க..
பெண்களே..ஓ.பெண்களே..!

சீதையென்னும் தெய்வப்பெண்ணை
கதையினிலே சொல்வாங்க..
கற்பு என்னும் ஒருகோட்டை
கவனமாகப் போடுவாங்க..!
காலமெல்லாம் பெண்குலத்தை
அடிமையாக்கி வெச்சாங்க...
சாரமில்லா மதத்தைக் காட்டி
கட்டிப்போட்டு வெச்சாங்க..! -குனிஞ்ச

முறத்தாலே புலிவிரட்டும்
தமிழ்ப்பெண்ணின் வரலாறு
படிக்கமட்டுமில்லேம்மா
பயத்தை உதறித்தள்ளம்மா..!
தாய்நாட்டு விடுதலைக்கு
வெடிகுண்டு ஏந்தின..
கல்பனாவைப் பாரம்மா..
காதல்கொள்ளு கண்ணம்மா..!-குனிஞ்ச

அண்டமெல்லாம் சுத்திப்பாக்க
அனுப்பி வெச்சான் ராக்கெட்டு
அதுலேகூட பொண்ணுகளை
ஏத்திவுட்டான் சோவியத்து.!
ஆணுக்குப் பெண்ணிங்கே
இளைப்பில்லே கண்ணம்மா..
பாடிவெச்ச பாரதியின்
வழிநீயும் நில்லம்மா..! -குனிஞ்ச

இன்னும் அதிகம்தேவை.!

வாகனங்களின் வழிதோறும்
வரன்முறைப்படுத்த சிக்னல்கள்.!
வாகனங்களுக்குள் இருக்கும்
வசதிபடைத்தவர்களுக்கு சலிப்பு.!

வாழவகை அற்றவர்களுக்கோ
அவ்விடமே வாழ்வாதாரம்.!
இவர்களே நாட்டில் அதிகம்
என்பதால்..,
இன்னும் நிறைய சிக்னல்கள்
வேண்டுமென்றே நான் கேட்பேன்.!

நாம் மனிதர்களாம்.!

மனதால் சிந்திப்பதால்
நாம் மனிதர்களாம்..!

அடுத்தவனைக் கவிழ்த்து
சொத்து சேர்ப்பது
அம்மாவாயிருந்தாலும்
முதியோர் இல்லத்தில்
அடைத்து வைப்பது.
உறவுகளென்றாலும்
பணத்தால் அளவிடுவது
இன்னும் எத்தனைவிதமாய்
எத்தர்களாய் இருக்கிறோம்.?

..மனதால் சிந்திப்பதால்
நாம் மனிதர்களாம்..!..
ஆனால்..,
சொத்துக்களுக்கு ஆசையில்லை
சொந்தத்துக்கும் அளவீடில்லை.
அம்மாவெனிலும்,அப்பாவெனிலும்
ஆணெனிலும்,பெண்ணெனிலும்
இருபால் வித்தியாசமில்லை.
ஒருவரை ஒருவர்,
ஒருவருடையதை ஒருவர்,
கவர்ந்து கொள்ளும்
முயற்சிகள் இல்லை.
நாகரீகம்,இது நாகரீகமில்லை
என்ற பண்பாட்டுப் பேத்தல்களும்
இங்கே இல்லை..
இப்படியொரு உலகமும்
இங்கே உண்டு
அவர்கள்..
மனதால் சிந்திப்பதில்லை.
உடலின் தேவையை மட்டுமே
உணர்த்துக்கிறார்கள்..!

ஆனால் இங்கே
அவர்களுக்கும் பெயரிட்டு
ஒதுக்கி வைத்திருக்கிறோம்..
பைத்தியங்கள் என்று...!

“மனதால் சிந்திப்பதால்
நாம் மனிதர்களாம்.”

பிறையாய் தெரிவதால்..!

பிறையாய் தெரிவதால்
நிலவில் குறையிருக்காது.!
மனதில் மெய்யில்லாவிடில்
எழுத்தில் சத்தியம் மிளிராது..

கயமை மிக்க மனதில்
கவிதை பிறக்காது..!
காலத்தை கிரகிக்காமல்
சரித்திரம் பிறக்காது.!

நீ போகும் பாதையில்
பதிந்துகிடக்கும் முட்களை
பரிசுத்தமாக்கிவிட்டுப்போ..
பின்வருபவர்கள் உன்னைத்
தொடர்கிறார்களாவென பார்க்காதே..!

கனியை உண்பவர்கள் குறித்த
கணக்கெதெற்கு.?
உனது பணியாய்
மரத்தை நட்டுவிட்டுப்போ.

உனதுதேவை எங்கோ
ஒரு இடத்தில் இருக்கிறது.
முடங்கிவிட நீ சாக்கடையல்ல,
காட்டாற்று வெள்ளம்.
இணைந்து வருவதை நீ
உருட்டிக் கொண்டு போ..
எதிர்ப்பதையும்..சேர்த்து.!

11 மார்ச் 2012

எனது வலையை விரிக்கிறேன்.!-- பொள்ளாச்சி அபி

எனது வலையை விரிக்கிறேன்.!

எனக்கு விருப்பமானதும்
விருப்பமல்லாததும்
தானாய் வந்தது வலையில்

பிடித்ததை சேகரிப்பதும்
பிடிக்காதவற்றை விலக்குவதும்
வாடிக்கையாய் கழிகிறது.

நல்ல வண்ணத்துடன் சில
வந்தெனைப் பிடித்துக்கொள்ளென
ஆசை காட்டுகிறது.
வலையை அங்கு விரித்தால்
அது மோசம் செய்யும்
வகையாயிருக்கிறது.

என் குழந்தைகளுக்குப்
பிடிக்குமேயென்று,
எதிர்பார்த்தேன் சிலதை
அங்கோ பெரியவர்களுக்கும்
பிடிக்காததே நிறைந்திருந்தது.

பிறகு தேடித்தேடி
வலைவீசுவதை
தவிர்த்துக் கொண்டேன்.
மீண்டும் இல்லம் திரும்பினேன்.

அலைகளின் இடையே
வலை வீசுவதும்
கணிணியின் இடையே
வலைவீசுவதும்,


இப்போது
ஒன்றெனவே புரிந்தது.!

ரூபா நோட்டு.. !

புதுசு,புதுசா கள்ளநோட்டு அச்சடிச்சு,அதை மாத்தி சம்பாரிக்கறதே பொழப்பா வெச்சிருந்த ஒருத்தன்,ஒரு தடவை கள்ள நோட்டு அடிக்கும்போது பதினைஞ்சு ரூபா நோட்டை தெரியாம அடிச்சுட்டான்.
நகரத்துக்குள்ள இதை மாத்தினா,சீக்கிரம் சிக்கிடுவோம்னு நெனச்சு,கிராமத்துலே ஒரு பெட்டிக்கடைக்கு போனான்.ஒரு ரூபாய்க்கு ஏதோ வாங்கிட்டு,அவங்கிட்டே இருந்த பதினைஞ்சு ரூபா நோட்டுலே ஒன்னைக் கொடுத்துட்டு,மீதி சில்லறையைக் கேட்டான்.
அவனையும்,அவன் குடுத்த பதினைஞ்சு ரூபா நோட்டையும்,நல்லா நோட்டம் விட்ட கடைக்காரன்,யோவ்,என்னா இது.?,பதினைஞ்சு ரூபா நோட்டைக் குடுக்கிறே.? ன்னு கேட்டான்.
நம்ம ஆளுக்கு கொஞ்சம் பேஜாராயிடுச்சு,என்னடா இது,சுலபமா ஏமாத்தலாம்னு பாத்தா,உஷாராக் கேள்விகேட்கறானே.., சரி,துணிஞ்சு சமாளிக்கலாம்னு நெனச்சுகிட்டு,கடைக்காரனைப் பாத்து,யோவ்,பதினைஞ்சு ரூபா நோட்டை,சென்ட்ரல் கவர்ன்மெண்ட் புதுசா அடிச்சு விட்டுருக்குதுன்னு கூட,உங்களுக்கெல்லாம் தெரியலையே..சே..சே..,உனக்கு நம்பிக்கையில்லேன்னா நோட்டைத் திருப்பிக்குடுத்துரு.நான் வேற கடைக்கு போயிக்கிறேன்னு சொன்னான்.
கடைக்காரன் லேசா குழம்புவது மாதிரி நம்ம ஆளுக்கு தெரிஞ்சதும் குஜாலாகிட்டான்.
சரி.சரி,கோவிச்சுக்காதீங்கண்ணே..இதா இப்ப மீதியைத்தந்துடுறேன்னு சொல்லிட்டு,கல்லாப் பெட்டியை கடைக்காரன் திறக்க,நம்ம ஆளுக்கு சக்கையா சந்தோசம்.அப்பாடா,நல்லா ஏமாந்துட்டான்டா கிராமத்தான்னு மனசுக்குள்ள குதியாட்டம் போட்டுட்டு,மீதி சில்லறை வாங்க,ஸ்டைலா கையை நீட்டினான்.

கடைக்காரனும்,மீதி பதினாலு ரூபாய் சில்லறைக்காக..ரெண்டு ஏழு ரூபா நோட்டை எடுத்து,அவன் கையிலே வெக்க,அடுத்த செகண்டுலே,தொபுக்கடீர்னு ஒரு சத்தம் கேட்டுச்சு..
சில்லறையை வாங்கிப்பாத்தவன் கீழே உழுந்த சத்தம்தான் அதுன்னு தனியா வேற சொல்லணுமாக்கும்..!

20 ஜனவரி 2012

மனசு..!

ரிலீசாகி சிலவாரங்கள் கழிந்த,புதிய திரைப்படம் ஒன்று நன்றாக இருக்கிறது என்றும்,நாளை மாற்றப்போகிறார்கள் என்றும் கேள்விப்பட்டு.திரையரங்கிற்கு சென்றேன்.
நான் உள்ளே நுழைந்தபோது,அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் அமர்ந்திருந்தனர்.மின்விசிறியின் காற்றோட்டத்திற்கு வாகாய் இருந்த ஒரு இருக்கையை தேர்ந்தெடுத்து அமர்ந்து கொண்டேன்.எனக்கு நேராக, பின்வரிசையில் ஒரு தம்பதி,அமர்ந்திருந்தனர்.இருவருக்கும் ஐம்பத்தைந்து வயதுக்குமேல் இருக்கலாம். அவர்களிருவரும் மிகநெருக்கமாக தலை குனிந்தபடி,யாரையும் லட்சியப்படுத்தாமல் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர்.
லேசான இருட்டில் அவர்கள்,மற்றவர்களைவிட்டு ஒதுங்கி அமர்ந்திருந்ததும் சற்றுவித்தியாசமாகத்தான் இருந்தது. ‘இந்த வயதில் ஜோடி போட்டுக்கொண்டு சினிமா பார்க்க வந்திருக்குதுக..பாரேன்.’எனக்கு தோன்றியது போலவே,அவர்களைக் கடந்த,பலருடைய பார்வையிலும் அந்த விமர்சனம் இருந்தது நன்றாகவே தெரிந்தது.
இடத்தைவிட்டு மாற்றி அமர்ந்து கொள்ளலாமா..? யோசித்தபடியே,சுற்றும் முற்றும் பார்த்தேன்.ஊஹ{ம்..எனக்கு முன்பே பலரும் மின்விசிறிக்காக ஆங்காங்கே சீட்டுக்களை ஆக்ரமித்திருந்தனர்.
“சரி..போகட்டும்..நம்ம பாட்டுக்கு சினிமா பார்த்துட்டுப் போகப்போறோம்.மத்தவங்க எப்படியிருந்தா நமக்கென்ன.?” எனக்கு நானே ஆறுதல் சொல்லிக் கொண்டு
அங்கேயே அமர்ந்து கொண்டேன்.
சில நிமிடங்களில்,விளக்குகள் அணைக்கப்பட்டு,படம் தொடங்கிவிட்டது.ஆனால் பின்பக்கமிருந்து எனக்கு புதுவிதமான தொல்லையொன்று ஏற்பட்டது.
ஏய்..இங்க பாரு.இப்பத்தான் பேரெல்லாம் போடறான்.விஜய் ஸ்டைலா, காரைவிட்டு இறங்குறாரு.அவர் போட்டிருக்கிற,பு@ டிரெஸ் சூப்பரா இருக்கு..” என்று ஒவ்வொரு சீனிலும் நடைபெறுவதை கணவன்,அந்தப்பெண்ணுக்கு கமெண்ட்ரியாக ஓட்டிக் கொண்டிருந்தார்.
எனக்கு செம கடுப்பாகிவிட்டது.இரண்டு,மூன்று முறை திரும்பிப் பாhத்து,உஷ் என்றேன்.ஆனால் அவர்கள் சிலவிநாடிகள் மட்டுமே மௌனமாயிருந்துவிட்டு, பின்பு எனது எச்சரிக்கையை,கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.
‘தூ..கருமம்..என்ன ஜென்மங்கடா இது..,இண்டர்வெல்லில் ஏதாவதொரு சீட்டுக்கு மாறிவிடவேண்டும்’ என்று சபதம் செய்துகொண்டேன். ‘அது வரை இந்தத் தொல்லையைப் பொறுத்துத்தானாக வேண்டும்.வேறு வழி.?’
அப்பாடா ஒருவழியாக இடைவேளையும் வந்தது.நான் எழும் முன்பாகவே, அந்த நபர் எழுந்துகொண்டு வெளியேறியிருப்பது தெரிந்தது.‘மனைவிக்கு ஏதாவது வாங்கிக் கொடுப்பதற்கு என்ன அவசரம் பார்.அதிலிருக்கும் அக்கறை மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்கக்கூடாது என்பதிலும் இருக்க வேண்டாமா..?’ எண்ணமிட்டபடியே,வெளியேறினேன்.

இரண்டு கப் காபிகளுடன் அந்த மனிதர் எதிரே வந்து கொண்டிருந்தார்.ஒரு விநாடி என்னைப்பார்த்து தயங்கி நின்றதுபோலத் தெரிந்தது.அவரைக் கடக்க முயற்சிக்கையில், “தம்பி ஒருநிமிஷம் நில்லுங்க..,” என்னைப்பார்த்தா அவர் கூப்பிடுகிறார்.? சந்தேகத்துடன் நான் எனக்குப் பின்.யாரையாவது கூப்பிடுகிறாரோ என்று திரும்பிப்பார்த்தேன், “தம்பி உங்களைத்தான் கூப்பிட்டேன்.”என்று எனக்கு மிகஅருகே வந்துவிட்டார். ‘என்ன.?’என்பதுபோல அவரைப் பார்க்க,எனது கண்ணில் மின்னிய எரிச்சல் வெளிப்பட்டிருக்க வேண்டும். “தம்பி நீங்க படம்ஓடும்போது,சிலதடவை உஷ்..உஷ்.னு சொன்னீங்க..எங்களைத்தான் சொல்றீங்க..ன்னு நல்லாவே தெரிஞ்சாலும்,என்னாலே,அவளுக்கு சொல்றதை நிறுத்தமுடியாது..என்னடா இவன் இப்படி பேசறானேன்னு நினைக்காதீங்க..என்மனைவிக்கு இரண்டு கண்ணுமே தெரியாது.அதான்..!.அவர் குரல் லேசாகக் கலங்கியிருந்தது “உங்களுக்கு அது இடைஞ்சலா இருந்தா தயவுசெய்து என்னை மன்னிச்சு,வேற சீட்டுலே போய் உட்கார்ந்துக்குங்க.!”

எனக்கு திக் கென்று இருந்தது.அவருக்கு பதிலாக எதைச்சொல்வது என்றே,சிலவிநாடிகள் எனக்குப் புரியவில்லை. “பரவாயில்லைங்க.. ஒண்ணும் பிரச்சினையில்லே..”என்று அவசரமாக சொல்லிவிட்டு,அங்கிருந்து நகர்ந்தேன்.
குடும்பம் நடத்தற ஆம்பளைங்க,நல்லா இருக்கற பொம்பளையவே ஆயிரம் குற்றம் சொல்லி,அவமானப்படுத்தறதும்,அதிகாரம் செய்யறதுமா இருக்கிற இந்தக் காலத்திலே,இப்படி ஒரு ஜோடியா..? எனக்கு வியப்பு அதிகமாகி,அவர்மேல் மரியாதை வந்துவிட்டது.

இப்போது,இடைவேளை முடிந்து படம் தொடங்கியவுடன்,அவரும்,மனைவிக்கு கதை சொல்லிக் கொண்டிருந்தார். ‘ஆனால்,இவர் இன்னும் அழகாக இதை விளக்கிச் சொல்லியிருக்கலாமே..!’என்று என் மனசுக்குள் ஓடிக்கொண்டிருந்தது.

16 ஜனவரி 2012

நீ இல்லாவிடில்..!








மரம் எனும் பெண்
மண்ணுக்கு அணிகலன்

விண்ணிலிருக்கும் மாசுகளை
விரட்டிவிடும் காவலன்

மழையைக் கொண்டுவரும்
மாபெரும் மந்திரவாதி.

மின்னிணைப்பு தேவைப்படாத
இராட்ஷச விசிறி

மண்அரிப்பை தவிர்த்திடும்
மாயநூற் கண்டு.

அமிலவாயுவை உள்வாங்கி
உயிர்தரும் மந்திரக்கோல்.

மூச்சிருக்கும்வரை மரத்தை
நினைக்க வேண்டும்.

இதில்லாவிடில் மூச்சிருக்குமா..?
யோசிக்க வேண்டும்..!

12 ஜனவரி 2012

ஆராய்ச்சி..!

விண்ணில் ஏவும் ராக்கெட்டின்
வேகத்தை அதிகப்படுத்த
விஞ்ஞானிகள் ஆலோசனை..,
அதனால்
விலைவாசியின் வேகத்தைக்
குறித்து ஆராய்ச்சி..!

வாழ்க்கை சூத்திரம்.!

நடக்கவும்,பேசவும்
பெற்றோர் கற்றுத்தந்தபின்
தொடரும் வாழ்க்கை..

வாழும் வகையறிய
மற்றவை கற்க..
கற்றுக்கொடுப்பார் யாருமில்லை..

பின்...
வாழ்க்கை எனும் சூத்திரம்
கற்றுக்கொடுத்து வரப்போவதில்லை

வாழ்பவர்களே பாடம்
அனுபவங்களே குறிப்புகள்.
இதில் கற்பவை கற்கவும்,
அல்லது வெறுக்கவும்
ஆயிரமுண்டு..
அதுவே உனக்குத் தேர்வு..

வரலாற்றைக் கடந்து-நீ
வரலாறு படைத்துவிட்டால்
அதுவே உனது வெற்றி..!
----------------

யார் பெரியவன்..?

கல்லையும் மண்ணையும்
விண்ணையும்,ஒளியையும்
காற்றையும்,நீரையும்
கதிரவனையும்,நிலவையும்
அண்டமுடியாத அண்ட சராசரங்களையும்
படைத்த ஆண்டவன்தான் பெரியவன்..
எனில்..,
அந்த ஆண்டவனையும் படைத்த
மனிதன் அவனிலும் பெரியவனே..!
------------

நான் கடவுளாயிருந்தேன்..!

இதற்கு முன்பு நான்
கடவுளாயிருந்தேன்.!

சூன்யவெளியில்
நிகழ்வதனைத்தும்
சூன்யமாகவே இருந்தது.
சூரியனைப் படைத்தேன்.
கோள்களைப் படைத்தேன்
அதன் இயக்கங்களையும்
படைத்தேன்!
பலகோடி ஆண்டுகள்
கழிந்தது.!

ஓரறிவுமுதல் ஐந்தறிவு வரை
உயிர்களைப் படைத்தேன்..!
உள்ளத்தில் அப்போதும்
முழுமையில்லை..!

ஆறறிவுள்ள மனிதரைப்
படைத்தேன்-அவர்களுக்கு
குடும்பம் என்ற அமைப்பையும்
படைத்தேன்..!

உணவுக்கான உழைப்பைக்
கொண்டுவிடப் பணித்தேன்.
அவனோ..செல்வத்தைப்
படைத்துக் கொண்டான்.

செல்வத்தைப் பாதுகாக்கவென
குழு,கணம்,ஆட்சி,சாதி,
எனப் படைத்துக் கொண்டான்.

பின்னர் அவனின் வரலாறுகள்
அனைத்தும் ரத்தம் சிந்தும்
போர்களாகவே மாறிப்போயிற்று.
அன்பை,அகிம்சையை
போதிக்கச் சொன்ன
என்கைகளிலும்-அவன்
ஆயதங்களைத் திணித்தான்.!

இன்றுவரை அதுவே
தொடர்கிறது..!

இதற்கு முன்புவரை நான்
கடவுளாக இருந்தேன்..!

ஆனால் இப்போது..
நான் கடவுளாக இல்லை
மனிதனின் வார்த்தையிலேயே
சொல்வதெனில்
NON கடவுளாகிவிட்டேன்..!

09 ஜனவரி 2012

மனசு துடிக்குது..!

டீக்கடையில் தனி டம்ளரு.
ஓட்டலிலும் வெளியேதான் சோறு.

பொறந்ததிலேருந்து வேலை
பண்ணாடியோட தோப்புலே
ஆனாஇதுவரை நொழைஞ்சதில்லே
அவரோட வீட்டுலே

கொத்தடிமையா பட்டுவர்ற
கொடுமையெல்லாம் சொல்லிப்புட
கோவிலுக்கும் போனேன்.
கோபுரத்தைத்தவிர ஒண்ணும்
பாக்கமுடியல்லே..!

எப்படியாவது மரியாதை
வேணும்னுங்கிறதுக்காக
சபரிமலை அய்யப்பசாமிக்கு
மாலை போட்டேன்.

மலைக்குபோய்ட்டு வந்தும்
மாற்றம் ஒண்ணும் நடக்கலே..
மரியாதைக்காக வருஷம்பூரா
மாலைபோட செலவு நமக்கு
கட்டுப்படியாகலே..!

மாதாக் கோயிலுக்குப்
போனவங்களுக்கு
மாற்றம் நடக்குதுன்னு
சொன்னாங்க..!

மாதம்பூரா ஜெபத்துக்கு
வரச்சொன்னா பொழப்பு
நடக்குமா..? புரியலே..!

யாரோ சொன்னாங்கன்னு
அப்துல்காதர் ஆகிப்புட்டேன்.
ஆடுதிருடிட்டான்னு கேசு
கொடுத்தது யாருன்னு
தெரியல்லே..

இப்ப அமாவாசையின் மகன்
அப்துல்காதர் ஜெயிலில்
இருக்குறேன்..!

இங்கே எல்லாருக்கும்
ஒரே துணிதான்
பேரே இல்ல-வெறும்
நம்பருதான்..!

வெளிய பாக்காத சமத்துவம்
இங்கேயிருக்குது..
உள்ளேயே இருந்துவிட
மனசு துடிக்குது..!

08 ஜனவரி 2012

அப்ப மட்டும் இனிச்சதா.? –சிறுகதை-பொள்ளாச்சி அபி

“இந்தா சுப்ரமணி,இந்த எல்லைக்கல்லுல இருந்துதான் நம்ம சைட்டு. இந்தப்புதரையெல்லாம் வெட்டிக் கிளீன் பண்ணிடு.அப்புறமா அஸ்திவாரத்துக்கு மார்க் பண்ணி,வேலையை ஆரம்பிச்சிடலாம்..”இஞ்சினீயர் சொன்னதற்கு, “சரிங்க” எனத்தலையாட்டிவிட்டு,புதர்களை சுத்தமாக்கத் தொடங்கினான் சுப்ரமணி.

சுப்ரமணிக்கு இதுதான் வேலை என்றில்லை.கூலிவேலை எதுவானாலும் செய்துகொண்டிருந்தவன்,கடந்த சில மாதங்களாக இந்த இஞ்சினீயரிடம் சேர்ந்ததிலிருந்து,தொடர்ந்து வேலை கிடைத்துக் கொண்டிருந்தது.வெறும் தரையாக இருக்கும் இடத்தை சுத்தப்படுத்துவதிலிருந்து தொடங்கி,அங்கு கட்டிடமாக நிமிரும்வரை,மம்பட்டியாள் வேலை,சித்தாள் வேலை என எதுவாக இருந்தாலும்,மறுபேச்சு இல்லாமல்,சுப்ரமணி சொல்லும் ஒரே வார்த்தை “சரிங்க”.

இதனால் இஞ்சினீயருக்கு சுப்ரமணியை மிகவும் பிடித்துவிட்டது.எப்போதும் அவனுக்கு மட்டும் வேலை இருக்கும்படியாக பார்த்துக் கொண்டார்.
மேலும்,சுப்ரமணியின் மனைவி லட்சுமியும்,கடுமையான உழைப்பாளி.எப்போதும் கணவனுக்கு ஒத்தாசையாக வேலைக்கு வந்துவிடுவதால்,கட்டிடத்தில் அவர்கள் இருவரும்தான் நம்பிக்கையான ஆட்கள்.கட்டுமானப் பொருட்கள் எல்லாம் அவர்களுடைய பொறுப்பிலேயேதான் இருக்கும்.இதுவரை திருட்டு பெரட்டு எதுவும் இல்லை.
சுப்ரமணி வெட்டிப்போட்ட புதர் குப்பைகளை அள்ளி,ஒதுக்குப்புறமான இடத்தில் கொட்டிவிட்டு வந்தாள் லட்சுமி.

அஸ்திவாரம் தோண்டப்பட்டு,மட்டம் பார்த்து,அடுக்கப்பட்ட செங்கற்களால் சுவர்கள் மெல்லமெல்ல மேலெழுந்து கட்டிடத்திற்கு உயிர் கொடுத்தன.
மூன்று பெட்ரூம்களுடன் கூடிய அந்த வீடு,அழகான முறையில் வடிவமைக்கப்பட்டிருந்தது.
வீட்டின் உரிமையாளரான சுந்தரம்,மிகுந்த அக்கறையோடு,கன்னிமூலை, ஜலமூலை,வாயுமூலை,அக்னி மூலை எனப்பார்த்து,பார்த்து,வாஸ்துப்படி அமையவேண்டும் என்பதில் மிகவும் அக்கறை கொண்டிருந்தார்.தினமும் காலையில் பூஜை செய்யாமல் மற்ற எந்த வெளிவேலைக்கும் போகமாட்டார் என்பதால்,பூஜை அறையின் உள்ளேயும்,வெளியேயும்,எந்தக்குறையும் இருக்கக் கூடாது என்று அடிக்கடி இஞ்சினீயரிடம் சொல்லிவந்தார்.

வீட்டைப்பொறுத்தவரை,சுந்தரம் எந்தவிதமான அபிப்ராயத்தை சொன்னாலும், இஞ்சினீயர்,சுப்ரமணியை உடனே கூப்பிட்டுக் கொள்வார்.ஏனெனில் இஞ்சினீயரே,சிலபோது வேலை மும்முரத்தில் ஏதேனும் கவனிக்காமல் விட்டுவிட்டால்,அவ்வாறு நடக்க சுப்ரமணி விடமாட்டான்.வெகு அக்கறையாய் கவனித்துக் கொள்வதில் சமர்த்தன்.
வீடு ஏறக்குறைய முடியும் நிலைக்கு வந்துவிட்டிருந்தது.இப்போதெல்லாம் சுந்தரமும் இங்குநிறைய நேரத்தை செலவிட்டுப் பார்வையிட்டு வருகிறார்.

இதனிடையில் தங்களுடன் வேலை செய்துவரும்,பாக்கியம் அடிக்கடி லீவு எடுத்துக்கொள்கிறாள்.அந்த நாட்களில் சுந்தரமும் வருவதில்லை.அவ்வப்போது சுந்தரமும்.பாக்கியமும் சிரித்தபடி கிசுகிசுப்பாக பேசிக் கொள்வதும்,இஞ்சினீயர் வந்துவிட்டால்,அவர் போகும் வரை,இருவரும் ஏதும் பேசிக் கொள்வதில்லை என்பதையும் அடிக்கடி லட்சுமி கவனித்துவந்தாள்,அதைப்பற்றி பாக்கியத்திடம் அவள் கேட்பதில்லை.திருமணம் முடித்து,இரு பெண் குழந்தைகளையும் அளித்துவிட்டு,டைபாய்டு காய்ச்சலில் இறந்துபோனான் கணவன்.பாவம் அவள்.!

மேலும் சிலநாட்கள் கழிந்தது.
அந்த வீட்டின் பதினொரு அறைகளிலும்,சுப்ரமணி,லட்சுமியின் கால்கள் படாத இடமில்லை.ஒவ்வொரு அடியிலும் அவர்களின் உழைப்பு இருந்தது. இவர்களைப் போலவே,மேஸ்திரி,மம்பட்டியாள்.சித்தாள் என ஆண்களும் பெண்களுமாக, பத்துக்கும் மேற்பட்டவர்கள்,தொடர்ந்து வேலை செய்ததால், இன்னதேதியில் முடித்துதருகிறோம் என்று,சுந்தரத்திடம்,இஞ்சினீயர் சொன்ன வார்த்தையைக் காப்பாற்ற முடிந்தது.
இங்கு வேலைசெய்த ஆண்களுக்கு வேட்டி,துண்டு,பெண்களுக்கு சேலை ஆகியவற்றை பணத்தோடு வைத்து,வீட்டுஉரிமையாளரான சுந்தரம் வழங்கவேண்டும் என்றும் இஞ்சினீயர் சொன்னதற்கு சுந்தரமும் சரியென்று சொல்லியிருக்கிறார்.
புதுமனைபுகு விழாவிற்கு குறிக்கப்பட்ட நாளும் வந்தது.வீடு அங்கங்கே தீட்டப்பட்ட அழகான வண்ணங்களில்,கம்பீரமாக நின்றிருந்தது.சுப்ரமணிக்கு அந்த வீட்டைப்பார்க்கப் பார்க்க பெருமையாக இருந்தது.பின்னே,அக்கட்டிடத்தின் ஒவ்வொரு செங்கல்லிலும் அவனது உழைப்பு இருக்கிறதல்லவா..?.

சுந்தரத்தின் வீட்டுவழக்கப்படி எல்லாவிசேஷங்களும் முடிவுற்றதையடுத்து, ஏறக்குறைய வந்திருந்த உறவினர்கள் எல்லாம் கிளம்பிச் சென்றபின் வேலையாட்கள் அழைக்கப்பட்டனர்.
சுந்தரம்,அவரது மனைவி,உறவினர்கள் என இருந்த அந்தப்பெரிய ஹாலுக்குள் நுழைவதற்காக,சுப்ரமணி,லட்சுமி,பாக்கியம் என அனைவரும் சென்றபோது, இவர்களைக் கவனித்த சுந்தரம் திடுதிடுவென்று எழுந்து ஓடிவந்தார்.
“எல்லாரும் ஒரு நிமிஷம் இங்கியே நில்லுங்க..,”என்று கூறிவிட்டு,மீண்டும் உள்ளே ஓடினார்.அந்த இடைவெளியில் யாரோ ஒரு பெருசு,எல்லாம் என்ன ஜாதியோ..கொலமோ..? இதுகளையெல்லாம் எப்படி வீட்டுக்குள்ளே வுடறது..? என்று,இன்னொரு பெருசிடம் சொல்வதும் கேட்டது.

சிலவிநாடிகளில் ஒரு டேபிள் வெளியே தூக்கிவந்து போடப்பட்டு
அதன்மீது வேட்டி,சேலைகள் கொண்டுவந்து வைக்கப்பட்டது.ஒவ்வெருவராக அழைத்து,உடைகளின் மீது நூறுரூபாய் வைத்துக் கொடுத்தார் சுந்தரம்.
லட்சுமியின் கையில் உடைகளைக் கொடுத்தபோது,அவளது கையை சிலவிநாடிகள் வேண்டுமென்றே சுந்தரம் தீண்டியது தெரிந்தது.நெருப்புப் பட்டாற்போல கையை வெடுக்கென பிடுங்கிக் கொண்டாள் லட்சுமி.
இன்னும் சிலர் உடைகளை வாங்கவேண்டியிருந்த நிலையில்,பாக்கியம் அவ்விடத்திலிருந்து சற்று தள்ளி,தனியே நின்று கலங்கியபடி இருப்பதைக் கண்டாள் லட்சுமி.
“ஏய்.ஏண்டி இங்க நின்னு தனியா அழுதுட்டிருக்கிறே..?.”
பாக்கியம் பதில் சொல்லத் தயங்குவது தெரிந்தது.
“சும்மா சொல்லுடீன்னா..,”
“வேலைக்கு வந்த கொஞ்ச நாள்லேயே,இந்த வீட்டு ஓனர்,அடிக்கடி என்னை வெளியே கூட்டிட்டு போவாருக்கா..,அப்புறம் உடுமலை,பழனின்னு அடிக்கடி நிறையதடவை ரூம் போட்டு எல்லாம் தங்கியிருக்கோம்.ஆனா இப்ப நம்மளை வீட்டுக்குள்ளே விடறதுக்குகூட அவருக்கு மனசில்லாமே..,சாதியைச் சொல்லி,வெளியவே நிக்கவெச்சு, பிச்சைக்காரங்க மாதிரி துiணியைக் கொடுக்கிறாரு.அத நினைச்சேன்.அதுதான் அழுகை வந்திடுச்சு.!

விபத்து..! - சிறுகதை-பொள்ளாச்சி அபி

“ஆக்சிடென்ட் ஆனதிலேருந்து,இந்த ஒருவாரமா மேட்டுத்தோப்பு பன்னாடிக்கு கண்ணு தெரியறதில்லையாமா..?”
“யாரு சொன்னா..? முந்தாநேத்து அவரு காட்டுலே டிராக்டரு ஓட்டிக்கிட்டு இருந்தாரே..?”

“ஆக்சிடென்ட் ஆனதிலேருந்து,இந்த ஒரு வாரமா மேட்டுத்தோப்பு பன்னாடிக்கு பைத்தியம் புடிச்சிச்ருச்சுன்னு சொல்றாங்க அப்படியா..?”

“ஆமாமா..வீட்லேயும் எப்பப் பார்த்தாலும் பொண்டாட்டி,புள்ளைகளோட மல்லுக்கட்டிகிட்டே திரியறாராம்..”

“ஆக்சிடென்ட் ஆனதிலேருந்து,இந்த ஒரு வாரமா மேட்டுத்தோப்பு பன்னாடி,ஊருக்குள்ளே வந்தாலும் முக்காடு போட்டுகிட்டுதான் போறாராமா..?

“இல்லையே,நம்ம ஊரைத் தாண்டி,நான் பாக்கும்போது,முக்காடு எதுவம் போடலியே..!”
கடந்த ஒருவாரமாக,அந்தச்சேரி முழுக்க இப்படித்தான் பரபரப்பான பேச்சு நிலவிக் கொண்டிருக்கிறது.நூறு ஏக்கராவிற்கு சொந்தக்காரரான மேட்டுத்தோப்பு பன்னாடியின்,திடீர் மாற்றத்திற்கான காரணம் குறித்து,அந்தச்சேரியில் யாருக்கும் .
உண்மையான தகவல் எதுவும் தெரியவில்லை.ஆளாளுக்கு தெரிந்த காரணங்களைச் சொல்லிக் கொண்டு,வியப்பிலாழ்ந்து கொண்டிருந்தார்கள். இவ்வாறான பேச்சுக்கள் மாரிமுத்துவின் காதுக்கும் வந்தது.
அப்போதெல்லாம்,மாரிமுத்து தனக்குள்ளும்,சில சமயம் தள்ளிப்போய் நின்று வாய்விட்டும் சிரித்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்துவிடுவான்.
இப்போதும் அப்படித்தான்,தன்னாசிக் கிழவனும்,முருகேசனும்,இந்த விஷயத்தைப் பற்றிப் பேசிக்கொண்டே,தன்னைக் கடந்ததில்,அன்றைய தினம் நடந்ததை மீண்டும் ஒரு முறை மனதுக்குள் அசைபோட்டான்.

அன்றைக்கு,உச்சி வெயில் மண்டையைப் பிளந்ததில்,மாரிமுத்துவிற்கு எரிச்சலாய் வந்தது.நிற்க நிழலில்லாத இந்த பஸ் ஸ்டாப்பிற்கு ஒரு கூரையைப் போட்டுக் கொடுக்கச் சொல்லி ஒவ்வொரு திங்கள் கிழமையும் சப்கலெக்டருக்கு மனு கொடுத்து ஓய்ந்ததுதான் மிச்சம்.இதுவே நகர்ப்புறமாய் இருந்தால் தனியார் கம்பெனிகளின் விளம்பரங்களோடு,இரவிலும் எரியும் விளக்குகளோடு எப்போதோ கூரை அமைக்கப்பட்டிருக்கும்.
வெறும் முப்பது குடிசைகள் மட்டுமே உள்ள இந்த ஊரில் வசிப்பவர்களும், எதையும் படிக்காத அன்றாடங்காய்ச்சிகள்..இவர்களை வைத்து,எதை விற்று லாபம் பார்க்கமுடியும்.?
அதனால்,இந்தப்பட்டிக்காட்டுக்கு தனியார் கம்பெனிகளும் வரத்தயாரில்லை.

மாரிமுத்துவின் செருப்பில்லாத கால்களில் சூடு ஏறியது.கால்களை சிலநிமிடங்கள் மாற்றிமாற்றிவைத்து,சமாளிக்கப் பார்த்தும்,வெப்பம் குறையவில்லை..,நல்லவேளை,பத்தாம் நம்பர் தனியார் பஸ், தூரத்தில் வருவது தெரிந்தது.மாரிமுத்து உடனே,தனது ஊருக்குச் செல்லும் அந்த எட்டடி இட்டேரிப் பாதையைத் திரும்பிப் பார்த்தான்.யாரேனும் ஊர்க்காரர்கள் வந்தால் சீக்கிரம் வரச்சொல்லிவிட்டு,பஸ்ஸை நிற்கச்சொல்லலாமே..! யாரும் வரவில்லை.

பேருந்து அவனுக்கு அருகாமையில் வந்தபோது,அதனை நிறுத்தச் சொல்லி கைகாட்ட,நிற்பதற்காக வேகத்தைக் குறைப்பதுபோல் வந்து,விர்..ரென்று, நிற்காமலேயே சென்றது. இத்தனைக்கும் அந்த பஸ்ஸின் கண்டக்டர் படிக்கு அருகாமையில் நின்று தன்னைக் கண்டிப்பாக பார்த்திருக்க முடியும்.ஆனாலும் அந்த பஸ் நிற்கவில்லை.அப்படிப்போகும்போது அந்த டிரைவரின் முகத்தில் ஏதோ கிண்டலான சிரிப்பு இருந்தது போல மாரிமுத்துவிற்கு தோன்றியது.

‘சனியன் பிடிச்சவங்க..ஒத்த மனுசன் நின்னா,பஸ்ஸை நிறுத்தறதுக்குக் கூட சங்கடமா..?.இதுக்கு டீசல் அதிகமாயிடுமா.?..இல்லை.., இவனுகளுக்கு நம்மை ஏத்திட்டுப்போறதுக்கு மனசு இல்ல..அதான்.இவனுகளை...’ எண்ணமிட்ட மாரிமுத்துவிற்கு,வேறு ஒன்றும் செய்ய இயலவில்லை.இது அவ்வப்போது வழக்கமாய் நடப்பதுதான் என்பதும் அவனுக்கு தெரிந்தே இருந்தது.

‘போச்சு..இந்த வெயில்ல இன்னும் கால்மணிநேரம் நிக்கணும்.பின்னாலே கவர்மெண்ட்டு வண்டி வந்தாதான் உண்டு.அந்த வண்டியில் ஏறினால் அதுபோடும் சப்தத்தில்,எது எப்ப கழண்டு உழுகுமோன்னு தெரியாது.போய்ச்சேர வேண்டிய இடத்திற்கு சரியான நேரத்திற்கு போக முடியுமான்னும் தெரியாது..
உக்கும்.. அந்த வண்டி மொதல்லே வருமான்னே சந்தேகம் அப்புறம்தானே போகுமான்னு பார்;க்கணும்’ மாரிமுத்துவிற்கு பல விதமாய் எண்ணங்கள் ஓடின.வெயிலின் கொடுமை தெரியாமலிருப்பதற்கு,இப்படி யோசித்துக் கொண்டு இருப்பதும் நல்லதாகவே பட்டது.
ஆனாலும்,வெயில் அவனை வறுத்து எடுத்ததில்,உடலெங்கும் வியர்வை பொங்கி,சட்டையின் பின்புறம் முதுகோடு ஒட்டிக்கொண்டது.நெற்றியிலும் முத்துமுத்தாக அரும்பி நின்றன வியர்வைத்துளிகள்.உழைப்பால் கறுத்துத் திரண்டிருந்த உடலில்,நல்ல சதைப்பிடிப்புடன் கூடிய கைகளும்.கால்களும் அவனது ஆரோக்கியத்தை உலகுக்கு அறிவிப்பதாகவே இருந்தன.
இந்த ஊரைச்சுற்றியுள்ள பன்னாடிகளின் காடுகள்,தோட்டங்களில்,அவசரம் கருதி,வெயிலின் உக்கிரத்தை பொருட்படுத்தாமல்,அவன் பலமுறை வேலை செய்திருக்கிறான்.அப்போதெல்லாம் வேலை செய்யும் வேகத்திற்கு,வெயிலின் சூடு உறைத்ததேயில்லை.இப்போது வெறுமனே வெயில் காய்வதுதான் கடுப்பாயிருக்கிறது.
அப்பாடா..மாரிமுத்துவின் நல்லநேரம்.தூரத்தில்,சாலையின் தார்க் கறுப்பில்,கானல்நீருடன் கலந்து உறவாடி ஓவியம்போல அசைந்து வந்துகொண்டிருந்தது கவர்ண்மென்ட் பஸ்.
அருகே வந்ததும் எதற்கும் இருக்கட்டுமே என்று முன்னெச்சரிக்கையாக கைகாட்டினான் மாரிமுத்து.நின்ற பேருந்தில் பின்கேட் வழியாக ஏறிக் கொண்டான்.கண்டக்டர் முன்கேட்டருகே நின்று கொண்டு டபுள் விசிலடித்ததும், திடீரென்று ஒரு தொழிற்சாலையின் கனரக எந்திரங்கள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக இயங்குவது போன்று சப்தம் எழும்பியது.டிரைவர் அந்தப்பேருந்தின் கியரைப் போடுகிறாரா..?,அதன்மீது தொங்குகிறாரா..? என்றே தெரியவில்லை.ஆனால் டிரைவர்,“தா..ளிக வேற வண்டியைக்கொடுங்கடான்னா..இந்த ரூட்டுக்கு இதுவே போதும்னு சொல்றானுக..தே…மகனுக” என்று கெட்டவார்த்தையில் திட்டுவதும் தெளிவாகத் தெரிந்தது.அதற்கப்புறமும் சிலவிநாடிகள் கழித்துதான் அந்தப்பேருந்து அங்கிருந்து மெதுவாக நகர்ந்தது.
பேருந்தில் ஏறியவுடன்,மேல் சட்டைப்பபையிலிருந்து,பொள்ளாச்சி போவதற்கான சரியான சில்லறையைப் பொறுக்கி கையில் வைத்துக்கொண்டான். இல்லாவிட்டால்,எரிச்சல் ஊட்டுவதற்காகவே,இந்த வெயிலில்,தான் வீட்டில் உட்காராமல் வந்ததுபோல கத்துவார் கண்டக்டர்.
டிக்கெட் வாங்குவதற்குள்,உட்காருவதற்கான இடத்தை,தேர்வு செய்துவிடலாம் என்று பேருந்தினுள் பார்வையை ஓடவிட்டான்.பேருந்தில் எக்கச்சக்கமாக கூட்டம் இருக்கும்போது,கிடைத்த இடத்தில் உட்கார்ந்து கொள்ளப் பறக்கும் ஜனங்கள், அதுகாலியாக இருக்கும்போது மட்டும்,எல்லா சீட்டுகளிலும் தனித்தனியாக உட்காருவதைத்தான் விரும்புகிறார்கள்.இப்போதும் அப்படித்தான்.எல்லா சீட்டுகளிலும் ஒவ்வொரு ஆளாக உட்கார்ந்து இருந்தார்கள்.
மிகவும் தாட்டியாக இல்லாமல்,நடுத்தர உடம்புடனிருந்த ஒருவர் அமர்ந்து இருந்த சீட்டினைத் தேர்வு செய்து அமர்ந்து கொண்டான்.பேருந்து நகரத் துவங்கி,சற்று வேகம் கூடியவுடன்,முகத்தின் மீது மோதிய காற்றில் சற்றே ஆசுவாசம் ஏற்பட்டது.இதுவரை வெயிலில் காய்ந்ததற்கு,இப்போது தன்மீது படும் லேசான வெப்பக்காற்று எவ்வளவோ பரவாயில்லை என்றிருந்தது மாரிமுத்துவிற்கு.
வலப்பக்கம் உட்காந்திருந்த ஆள் அதுநேரம் வரை,முன்சீட்டின் கம்பிகள் மீது கைகளைவைத்துக்கொண்டு,தலையை அதன்மீது சாய்த்துத் தூங்கிக் கொண்டிருந்தான்.பேருந்தின் சீரான ஓட்டத்தின் காரணமாக,மெதுவாக தன்பக்கம் சரிந்த அந்தஆளை சற்றே அவன்பக்கமாக நகர்த்திவிட்டான் மாரிமுத்து.அது அவனை விழிக்கவைத்துவிட்டது போலும்.சடக்கென்று விழித்த அவன் முதலில் தனது மேல்சட்டைப்பாக்கெட்டைத் தொட்டுக்கொண்டு,யாரோ அவனிடமிருந்து பணத்தை திருட வந்திருப்பது போன்று,அதன்மீதே தன் இடதுகையை வைத்துக் கொண்டுதான்,மாரிமுத்துவைப் பார்த்தான்.அப்போதுதான் மாரிமுத்துவிற்கும் தெரிந்தது.அது மேட்டுத் தோப்பு பன்னாடி என்பது.

உடனே மாரிமுத்துவின்,மயிர்க்கால்கள் எல்லாம் எச்சரிக்கை உணர்வால்,ஏற்பட்ட பயத்தால் நிமிர்ந்து கொண்டது. ‘இறங்க வேண்டிய இடத்தில் இறங்காமல், தூங்கிவிட்ட மனுசன் பக்கத்திலே நாம் உட்கார்ந்துவிட்டோமே..! இங்கேயே உட்காரலாமா..? வேண்டாம்,எழுந்து கொள்ளலாம்.’ மாரிமுத்துவின் மூளை செய்த முடிவின்வேகத்திற்கு உடல் கட்டுப்படும் முன்பே..,பளார் என்று விழுந்தது ஒருஅறை.மேட்டுத் தோப்பு பன்னாடிதான் கண்களில் ஆத்திரம் கொப்பளிக்க, “சின்னசாதி நாயி,என்ன தெகிரியமிருந்தா,எனக்கு சமதையா உக்காருவே..?.” எதிர்பாராத தாக்குதலில் நிலைகுலைந்து விட்டான் மாரிமுத்து.படக்கென்று சீட்டினை விட்டு எழுந்தவன், ‘இப்போது என்ன செய்வது.?’ என்று தெரியாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தான்.
பன்னாடிக்கு இன்னும் ஆத்திரம் தீரவில்லை. “வெள்ளையும்,சொள்ளையுமா எங்களை மாதிரி துணிபோட்டுகிட்டா,நீ எங்காளு ஆயிடுவியாக்கும்..இமருவாதை தெரியாத நாயி..” அவரது வார்த்தைகளில் பலநூற்றாண்டுக் கால, எஜமானத்தனம் தெரித்தது.மாரிமுத்துவின் உடல்வலுவிற்கு,ஓங்கி ஒரேயொரு அறைவிட்டால்கூட போதும்,பன்னாடியின் முகம் முதுகுப்புறமாகத் திரும்பிக் கொள்ளும்தான்.
ஆனால்,தனது தந்தையின் காலத்து அடிமைத்தனம்,அப்படியே ஊறிப் போனதிலும்,கடவுளுக்கு நிகரானவர்கள் எஜமானர்கள் என்று கற்பிக்கப்பட்டிருந்ததையும் விட்டு வெளிவர முடியாமல், அவரது ஏச்சுக்களை வாங்கிக்கொண்டு,மாரிமுத்து இன்னும் அங்கேயே நின்று கொண்டிருந்தான்.

பேருந்தில் உள்ளவர்களின் பார்வையெல்லாமே இவர்கள் இருவர் மீதே இருந்தது.மாரிமுத்துவிற்கு அவமானம் பிடுங்கித்தின்றாலும்,அங்கிருந்து நகர்ந்தால் அது எஜமானரை அசட்டை செய்வதுபோல..,அப்படி நடந்துகொள்ளக் கூடாது என்பதால் வேறுவழியின்றி,தாங்கிக் கொண்டான்.அப்போதுதான் ஓடிக்கொண்டிருந்த பேருந்தில்,வழக்கத்திற்கு மாறாக,“கட்ர,கட்ர”என்று விநோதமான,ஏதோ வலுவான ஒன்று உடைவதுபோல ஒரு சப்தம்.. அவ்வளவுதான்.பேருந்து,டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது,சாலையின் இருபுறமும் வேகமாக அலைபாய்ந்தத்pல் பயந்துபோய் பேருந்துக்குள் இருந்த ஆண்களும்,பெண்களும் அலறினர்.பெண்களின் குரலை மீறி பன்னாடியும் ஏதோ பயத்தில் கத்தினார்.
சிலவிநாடிகள் மட்டுமே நீண்ட இந்த களேபரம்,சாலையின் ஓரத்திலிருந்த புளியமரத்தின் மீது, “டொம்”;என்று மிகப்பெரிய சப்தத்துடன் மோதி நின்றதில்,முடிவுக்கு வந்தது.டிரைவர் ஸ்டியரிங்கின் மீதே கவிழ்ந்து விட்டார். முன்புறத்திலிருந்த கண்ணாடி சுக்குநூறாக உடைந்து தெறித்ததில்,ஏராளமான துண்டுகள் டிரைவரின் தலையில் மோதி,ரத்தத்தில் நனைந்து நின்றிருந்தது.
பேருந்துக்குள் இருந்த பலருக்கும் மண்டை உடைந்தது முதல் எலும்பு முறிவு வரை ஏற்பட்டதில்,கூச்சலும்,அழுகையும் மிகுந்தது.மாரிமுத்து ஏற்கனவே நின்று கொண்டிருந்ததால் பேருந்து நிலைதடுமாறத் துவங்கும்போதே,அனிச்சைச் செயலாக,இருபறத்திலுமிருந்த கம்பிகளைப் பிடித்துக்கொண்டு,காயம் படாமல் சமாளித்துக் கொள்ளமுடிந்தது.பன்னாடி,சீட்டின் முன்புறக் கம்பியில் மோதியதில், மண்டை பிளந்துவிட்டது போலிருக்கிறது.முகமெல்லாம் ரத்தம் வழிய மயக்கமாகிக் கிடந்தார்.

சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்களை நிறுத்திய சிலர்,பரபரப்புடன் உடனடியாக கையில் கிடைத்தவர்களை எடுத்து பேருந்துக்கு வெளியே படுக்கவைத்தனர். சிலர் போலீசுக்கும்,ஆம்புலன்சுக்கும் போன் செய்தனர்.சில நிமிடங்களில் அங்கு வந்த இரண்டு ஆம்புலன்ஸ்கள்,பன்னாடி உட்பட அனைவரையும் அள்ளிப் போட்டுக்கொண்டு,அரசுமருத்துவமனையை நோக்கி விரைந்தன.காயம் பட்டவர்களை ஆம்புலன்சில் ஏற்றிவிட்ட கையோடு, இறக்குவதற்கான உதவிகள் செய்வதற்காக மாரிமுத்துவும் அதில் ஏறியிருந்தான்.

கிடைத்த அறைகளில்,இருந்த பெட்டுகளில் அட்மிட் செய்யப்பட்ட பயணிகளுக்கு, பல டாக்டர்களும் இணைந்து அவசர சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தனர். பன்னாடிக்கு முன்மண்டையில் பிளவு ஏற்பட்டதில்,ஒன்பது தையல்கள் போட வேண்டியிருந்தது.கையில் பிராக்சர் வேறு.ஆபரேசனும் தேவையாயிருந்தது. மேலும் ஏராளமான இரத்தம் சேதமாகிவிட்டதால்,அவருக்கு உடனடியாக ஒருயூனிட் ரத்தமாவது ஏற்றவேண்டும் என்று டாக்டர் சொல்லிவிட, “இந்த ரூமிலே இருக்கறவரோட வந்தது யாருப்பா..?.”ஒரு குண்டு நர்ஸ் கூவிக்கொண்டே வெளியே வந்தாள்.
அறையின் வாசலருகே நின்றிருந்த மாரிமுத்துவை நோக்கி,யாரோ கைகாட்ட, “இங்க வாங்க..இவருக்கு ஓ.பாசிட்டிவ் ரத்தம் கொடுக்கணும்.இப்போதைக்கு ஸ்டாக் இல்லே.உங்களது என்ன குரூப்னு தெரியுமா..?.”
“தெரியாதுங்க..”
“சரி வாங்க டெஸ்ட் பண்ணிரலாம்..”என்று அவசரமாக மாரிமுத்துவை அழைத்துக் கொண்டு,மருத்துவமனையின் மற்றொரு அறைக்குச் சென்றாள்.
மாரிமுத்துவின் ரத்தம் எடுக்கப்பட்டு,சோதனை செய்யப்பட்டதில்..என்ன ஒரு அதிசயம்.ஓ.பாசிட்டிவ்.
“ஹோ..ஐயாம் லக்கி..”கூவிய நர்ஸ்,அடுத்தபடியாக ஒரு யூனிட் ரத்தம் எடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தாள்.அவள் கத்தியதைக் கேட்ட மாரிமுத்து, “ஏங்க,எனக்கு ரத்தம் எடுக்கப்போறீங்களா..? அதுசேருமா..?”

“ஆமாப்பா உன்னோடதும்,அவரோடதும் ஒரே ரத்தம்தான்..”
“நிசமாங்களா..?”
“உனக்கென்ன இப்ப அதிலே சந்தேகம்..?”
“சந்தேகமில்லீங்க..ஒரே ரத்தம்னு சொன்னீங்கல்ல,அத நெனச்சுக்கிட்டேன்.”
“ஏம்ப்பா நீயும் மனுசன்தானே..!” நர்ஸ் கேட்டபோது,பதில் எதுவும் சொல்லாமல் சிரித்துக் கொண்டான் மாரிமுத்து.

04 ஜனவரி 2012

சபலம்.! சிறுகதை

காலிங்பெல் அழுத்தப்பட்ட சப்தம் கேட்டு கதவைத் திறந்த,சபேசன்.தங்கள் அபார்ட்மெண்ட் வாட்ச்மேன் ராமகிருஷ்ணன் நிற்பதைக் கண்டு குழப்பமானான். முகத்தில் கேள்விக்குறியுடன், இன்றைக்கு என்ன.? என்பதுபோலப் பார்த்தான்.

தனது கையில் வைத்திருந்த ஒரு நூறு ரூபாய்த் தாளைக் காண்பித்த ராமகிருஷ்ணன்,சார்,மாடியிலேருந்து பறந்து கீழே விழுந்தது.யாருதுன்னு தெரியல்லே.அதான் உங்களைக் கேட்டுட்டு,மேல் வீட்டுக்குபோலாம்னு வந்தேன்.

அலுவலகத்திலிருந்து வீட்டுக்குள் நுழையும்போது,செல்போன் ஒலித்தது.அதை எடுத்துப் பேசும்போது,மேல் சட்டைப்பாக்கெட்டிலிருந்து கீழே விழுந்திருக்குமோ..?. அவன் தனது சட்டைப்பாக்கெட்டை சோதித்துக் கொண்டான்.பத்துரூபாயாக சில தாள்களும்,சில்லறை நாணயங்களும் கிடந்தன.அதில் நூறு ரூபாயாக வைத்த நினைவே இல்லை.

உதட்டைப்பிதுக்கியபடியே,என்னோடது இல்லையப்பா..என்றான் சபேசன்.
ராமகிருஷ்ணன் படியேறி மேலே சென்றார்.

கிரவுண்ட் ப்ளோரில் முதல் வீடு என்பதால்,எந்தப்பொருள் கையில் கிடைத்தாலும்,சபேசன் வீட்டுக்காலிங் பெல்லைத்தான் எப்போதும் முதலில் அமுக்குவார் ராமகிருஷ்ணன்.

ராமகிருஷ்ணன் இங்குவந்து ஆறுமாதங்களாயிற்று.இந்த அபார்ட்மெண்ட்டில் யார் என்னவேலை சொன்னாலும் சரி,கார் கழுவிவிடுவதாக இருந்தாலும், காய்கறி வாங்கிவருவதாக இருந்தாலும்,தட்டாமல் செய்துகொடுத்துவிட்டுத்தான் போவார்.பத்து வீடுகளிலும் சேர்த்து தரும் சம்பளம் போக, இந்த வேலைக்கெல்லாம் தனித்தனியே ஒவ்வொரு வீட்டிலும் பணம் கொடுத்து விடுவதால் அவருக்கும் வருமானம்.

காம்பவுண்ட் எல்லைக்குள் எந்தப் பொருள் கிடந்தாலும்,அது குழந்தை போட்டதாயிருந்தாலும்,பெரியவர்கள் தொலைத்ததாக இருந்தாலும் வீடுதேடி வந்துவிடும்.அதேபோல் குடியிருப்பவர்களிடம்,குறிப்பாக பெண்களிடம் மிகவும் மரியாதையாக நடந்து கொள்வார்.பத்துவீட்டிலும் ஒன்றும்,இரண்டுமாக உள்ள பத்துக்கும் மேற்பட்ட சிறுகுழந்தைகளும்,மாலையில் அவர் வேலைக்கென்று வந்துவிட்டால்,அவருடன் சென்று கொஞ்சநேரம் விளையாடி விட்டுத்தான் வரும்.அந்த வகையில் ராமகிருஷ்ணனை மிகவும் பாராட்டியே ஆகவேண்டும்.

இதற்கு முன்பு இருந்த ஒருவாட்ச்மேனிடம்,இந்தக்குடியிருப்புவாசிகள் பட்டபாடு பெரும்பாடு.பத்துமணிக்குமேல் வீட்டுக்கு யாராவது வந்தால்.மெயின்கேட்டை அவரின் தூக்கம் கலைந்து எழுந்துவந்து திறப்பதற்குள் வந்தவர்களுக்கு போதும்போதும் என்றாகிவிடும்.காரின் ஹாரன்கூட அவரை அசைக்கமுடியாது. அப்படியொரு கும்பகர்ணத்தூக்கம்.வாட்ச்மேன் வேலை என்பதற்கு சிறிதும் பொருத்தமில்லாத குணம்.மேலும் அவ்வப்போது சிறிதும் பெரிதுமாகப் பொருட்களும் திருடுபோனது.இதனால் சிலநாட்களிலேயே அவர் நிறுத்தப்பட்ட பின்னர்,ஒரு ஏஜென்சி மூலம் இங்கு வந்தார் ராமகிருஷ்ணன்.

எப்படியோ..ராமகிருஷ்ணன் இந்த அபார்ட்மெண்ட்டில்,சபேசனின் மனைவி காமாட்சியைத்தவிர,அனைவரிடமும் நல்ல பெயரையே எடுத்திருந்தார். காமாட்சிக்கு,ராமகிருஷ்ணனைப் பார்க்கும்போதெல்லாம்,சோடாபுட்டி கண்ணாடி வழியாக அவரது பார்வை பயமுறுத்துவது போல இருக்கிறது என்றும்,அவர் சேரிக்கு அருகாமையிலிருந்து வருவதால் ஒருவித அசூயை ஏற்படுவதாகவும், அந்தப் பகுதியில் இருப்பவர்களுக்கு திருட்டு,பெரட்டு அதிகம் என்று கேள்விப்பட்டிருப்பதாகவும் சபேசனிடம் காமாட்சி சொல்வதுண்டு.

சே..சே..ஒரு மனுசனிடம் வெறுப்பு காட்டுவதற்கு உனக்கு வேறு காரணம் எதுவும் சிக்கவில்லையா..?, என்று சபேசன் அவ்வப்போது கடிந்து கொண்டாலும்,காமாட்சி தன்னை மாற்றிக்கொள்ளவில்லை.

மனிதர்களிடம் உள்ள நல்லவிஷயங்களை மட்டுமே நாம் எடுத்துக் கொள்ளவேண்டும்.பிடிக்கவில்லையென்றால் ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.அதைவிடுத்து குற்றம் சொல்வது தவறு என்பது சபேசனின் கொள்கை.

இதற்கு முன்,குழந்தைகளின் கம்மல் தோடு,பைக்கின் சாவி,மணிபர்ஸ் என்று பலபொருட்களை அவரவர் வீடுதேடி வந்து கொடுத்துவிட்டுப் போவதை யெல்லாம் சொன்னபின்னும்,காமாட்சிக்கு ஏனோ ராமகிருஷ்ணனைப் பிடிக்கவில்லை.அவரிடம் ஏதாவது வேலை சொல்வதாயிருந்தாலும் குரலில் வெறுப்பு தொனிக்கத்தான் சொல்வாள்.அந்த வேலைக்காகப் பணம் கொடுப்பதாயிருந்தாலும் “அவர் வந்ததும் வாங்கிக்கோ..” என்று விட்டேத்தியாக வேண்டுமென்றே சொல்வதும்,சிலநேரம் அதை மறந்துவிடுவதும் காமாட்சிக்கு வாடிக்கைதான்.ஆனால் அதற்காக,ராமகிருஷ்ணன் இதுவரை சலித்துக் கொண்டதாகவோ,சபேசனிடம் சொல்லிப் பணம் கேட்டதாவோ, காமாட்சிக்கும் நினைவில்லை.ஆனாலும்,ராமகிருஷ்ணனின் மீதான வெறுப்பு மட்டும் தணியவில்லை.
சிலநேரம், ‘இதற்காக தன்னை வேறுவழியில் பழிவாங்கிவிடுவாரோ..?’ என்று கூட காமாட்சிக்கு அபத்தமாகத் தோன்றும்.ஆனால் இன்னொருபுறம் ‘தூ..அம்பது வயசுக்கு மேல இருக்கற கிழம்.சோடாபுட்டி கண்ணாடி கீழே விழுந்தா கண்ணுதெரியாத கபோதி..அசைஞ்சு,அசைஞ்சு கப்பல் மாலுமிமாதிரி நடக்கிற இந்த ஆளா நம்மை பழிவாங்கும்..? சந்தர்ப்பம் கிடைக்கும்போது நாம் பழிவாங்கிவிடமாட்டோமா..?’ தனக்குத்தானே தைரியமாக ஆறுதலும் சொல்லிக் கொள்வாள்.

அன்றைக்கும் வழக்கம்போல ஐந்துமணிக்கு பணிக்கு வந்துவிட்ட ராமகிருஷ்ணன், அபார்ட்மெண்ட்டிற்கு முன்னுள்ள புற்கள் படர்ந்த மைதானத்தில் பந்து விளையாடும் குழந்தைகளை வேடிக்கை பார்த்தபடி அவ்வப்போது தனக்கு அருகில் வந்துவிழுந்த பந்தை எடுத்து குழந்தைகளுக்கு வீசியபடியும் தனது ஸ்டூலில் உட்கார்ந்திருந்தார்.

வெளிச்சம் குறைந்து,லேசாக இருள் கவியத் தொடங்கியது.

குழந்தைகள் அனைவரும் படிக்கவேண்டும் என்றும்,அம்மா திட்டுவார்கள் என்றும் தாங்களே விளையாட்டை முடித்துக்கொண்டு,வீடு திரும்பினர்.

மெயின் கேட்டின் லைட்டுகளைப் போட்டுவிட்டு,மாடியிலிருக்கும் ஃபோகஸ் லைட்டையும் போடுவதற்காக திரும்பி,அபார்ட்மெண்டை நோக்கிச் செல்லும் போதுதான்,மினுமினுப்பாக தரையில் ஏதோ மின்னியது.அருகில் சென்று குனிந்து எடுத்தபோதுதான் தெரிந்தது.சிறிய டாலருடன் கூடிய தங்கச்சங்கிலி.எப்படியும் ஒன்றரைப் பவுன் தேறும்.இந்தச் செயின் எந்தக்குழந்தையினுடையது.யாருடைய கழுத்திலாவது பார்த்திருக்கிறோமா..?. ராமகிருஷ்ணனுக்கு நினைவுக்கு வரவில்லை.சில விநாடிகள் முயன்றும் அவரால் அனுமானிக்க முடியவில்லை.

மேலம் சிலவிநாடிகள் கழிந்தது.யாரேனும் தன்னைக் கவனிக்கிறார்களா..தேடி வருகிறார்களா..? என்று சுற்றும்,முற்றும் பார்த்தார்.சபேசன் வீட்டுச் சன்னலில், காமாட்சியின் உருவம்,நிழலாடியது போல இருந்தது.அதற்குப்பின் சந்தடி எதுவும் இல்லை.கையிலிருந்த செயினை பேண்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு,அபார்ட்மெண்டுக்குள் சென்றார்.

சிறிது நேரம் கழித்து ஃபோகஸ் லைட் எரிந்தது.

சரியாக ஒருமணிநேரம் கழிந்திருக்கும்.திடீரென்று மூன்றாவது ப்ளோரில் குடியிருக்கும் ரமேஷ் அவனது மனைவி ஹேமா,அவர்களது குழந்தையான ஆறு வயது ப்ரியாவை ஏறக்குறைய இழுத்துக்கொண்டு,கீழே வந்தனர்.
இவர்கள் வந்த வேகம் பார்த்து பின்னாலேயே இன்னும் சிலர், என்ன,என்ன என்று கேட்டபடியே துரத்திக் கொண்டுவந்தனர்.
பந்து விளையாடிக் கொண்டு இருந்த இடத்திற்கு வந்தபின்,இங்கேதாம்ப்பா நின்னு விளையாடிட்டு இருந்தேன்.என்று ப்ரியா காட்டிக் கொண்டிருந்தாள். பின்னாலேயே வந்த குடியிருப்புவாசிகளிடம் ஹேமா விளக்கிக் கொண்டிருந்தாள். ப்ரியாவின் கழுத்திலிருந்து ஒன்றரை பவுன் செயின் தவறிக் கீழே விழுந்து விட்டதாகவும்,இங்கே கிடக்கிறதா..? என்று தேடிவந்ததாகவும்
சொல்ல,அனைவரும் அவரவர் நின்றிருந்த இடத்தில் தேடிப்பார்த்தனர்.

ராமகிருஷ்ணன் நடப்பது அனைத்தையும் பார்த்துக் கொண்டு,என்ன செய்வதென்று தெரியாமல் சிலைபோல நின்றிருந்தார்.

“என்ன ராமகிருஷ்ணன்.இங்கே செயின் எதுவும் கிடக்குதான்னு கொஞ்சம் பாருங்களேன்..” செகண்ட் ப்ளோர் முரளி குரல் கொடுக்க,திடுக்கிட்ட ராமகிருஷ்ணனுக்கு, “பாவம் அவரை ஏங்க தேடச்சொல்லி கஷ்டப் படுத்தறீங்க..வெளிச்சம் இருக்கும்போது அவருடைய கண்ணில் பட்டிருந்தால் இன்னேரம் பொருள் வீடு வந்து சேர்ந்திருக்குமே..” மீண்டும் வந்த சபேசனின் குரல் மிகவும் ஆறுதலளிப்பதாய் இருந்தாலும்,ராமகிருஷ்ணனுக்கு அடிவயிற்றில் பிசைந்தது.நெஞ்சு திக்திக் கென்று அடித்துக்கொள்வது தெளிவாகக் கேட்டது.

அபார்ட்மெண்ட்வாசிகள் தம்மீது வைத்திருந்த மதிப்பை,நம்பிக்கையை நினைத்து வேறுஒரு சமயமாய் இருந்தால் பெருமைப் பட்டுக்கொள்ளலாம். ஆனால் இப்போது…அவருக்கு பயமாக இருந்தது.‘நடந்த தவறைச் சொல்லி மன்னிப்புக் கேட்டுக் கொள்ளலாமா.?.என்ன முடிவெடுப்பது.?.’
எப்படி முடிவெடுத்தாலும் அதன் பாதிப்புகளை நினைத்தால்..அதற்குமேல் அவரால் சிந்திக்கவே முடியவில்லை.
அப்போதுதான் அவருக்கு இன்னொரு அதிர்ச்சியும் தொடர்ந்தது.காமாட்சி மெதுவாக,அனைவரும் நகையைத் தேடிக்கொண்டிருக்கும் இடத்திற்கு வந்துகொண்டிருந்தாள்.சுமார் நூறுஅடி தூரத்தில் அவள் வந்து கொண்டிருந்தாலும்,தன்னையே பார்த்தபடி அவள் வருவதாக ராமகிருஷ்ணனுக்கு தோன்றியது.
அருகாமையில் அவள் வருவதற்குள்ளாகவே,சரி விடுங்க..இப்ப தேடுறதுக்கு போதுமான வெளிச்சம் பத்தாது.இவ இங்N;க தொலைச்சாளா..ஸ்கூல்லேயே தொலைச்சிட்டாளா இல்லே வீட்டுக்குள்ளே எங்கியாவது கிடக்குதோ.. தெரியலை.அங்கியும் போய் தேடிப்பாக்குறோம் என்றபடி ரமேஷ் சொல்ல,அனைவரும் நிமிர்ந்தனர்.
“சரிதான்,போய் தேடிப்பாருங்க..இங்கே எங்கியாவது பார்த்தா,எடுத்துக் குடுத்துரலாம்.அதுவுமில்லாம ராமகிருஷ்ணன் இருக்கும்போது உனக்கென்னப்பா கவலை..?,
“அப்படியும் கிடைக்கலேன்னா,முப்பத்தியஞ்சாயிரம் ரூபாயை திருப்பதி உண்டியல்ல போட்டதா நினைச்சுக்கோ..” என்று யாரோ சொல்ல,சூழ்நிலையின் இறுக்கத்தை மறந்து நிறையக்குரல்கள் சிரித்தாலும்,ஹேமாதான் பாவம், சிரிக்கிறாளா, அழுகிறாளா என்றே தெரியவில்லை. அனைவரும்,வீடுகளுக்கு செல்ல திரும்பினர்.அந்தக் கூட்டத்தில் காமாட்சி மட்டும் ராமகிருஷ்ணனை மீண்டும்,மீண்டும் திரும்பிப் பார்த்துக் கொண்டே செல்வது தெரிந்தது.

அவள் ஏதாவது சபேசனிடம் சொல்லி..அதற்குப்பின் என்னவெல்லாம் நடக்கும்..? போலீஸ் நடவடிக்கை வரை போகுமா..? போலீஸ் வந்து விசாரித்தால் என்ன சொல்வது எப்படி சொல்வது..தீராத குழப்பம் ராமகிருஷ்ணனைப் பிடித்து ஆட்டியது.திடீரென்று உடலில் உள்ள சக்தியை எல்லாம்,யாரோ உருவிக்கொண்டதைப்போல உடல் தளர்ந்துபோய்,தனக்கான ஸ்டூலில் தொப்பென்று உட்காந்தார் ராமகிருஷ்ணன்.லேசாக நெஞ்சு வலிப்பதுபோல இருந்தது.
அன்று இரவு,விடிந்தபின்னும்,ராமகிருஷ்ணன் லைட்டுகளை அணைக்கவில்லை.தான் எப்போதும் தூங்கும் இடத்தில் அசையாமல் கிடப்பதைக் கண்டு,சந்தேகமுற்ற அபார்ட்மெண்ட்வாசி ஒருவர்தான் முதலில் கத்தினார். “ராமகிருஷ்ணன் செத்துப்போயிட்டாரு.”

அதற்குப் பிறகு போலீசும்,டாக்டரும் சம்பவஇடத்திற்கே வந்து பார்த்து,அவர் ஹார்ட் அட்டாக்கில் இறந்ததை உறுதிப்படுத்திவிட்டு சென்றனர். பின்னர் அவர் வீட்டுக்கு தகவல் சொல்லப்பட்டு வந்த அவருடைய மனைவியும்,இன்னும் திருமணம் முடிக்காமல் இருந்த பெண்பிள்ளையும் கதறி அழுததைக்கண்ட அபார்ட்மெண்டவாசிகள் அனைவருக்கும் கண்கள் கலங்கியது.

“ஏங்க முடிஞ்சவரைக்கும் இவங்க குடும்பத்துக்கு ஏதாவது உதவி செய்யலாங்க..” காமாட்சியும் அழுதுகொண்டே சொன்னபோது,என்னதான் கரித்துக்கொட்டினாலும்,இவ்வளவு இரக்ககுணம் அவளுக்கு இருப்பது,சபேசனுக்கு இப்போதுதான் தெரிந்தது.

வழக்கம்போல தன்வீட்டுக் காலிங்பெல்லை முதலில் அழுத்திய ராமகிருஷ்ணன் காட்டிய நகை தன் பிள்ளையுடையதுதான் என்று கூறி ஒரு சபலத்தில் வாங்கியதும். அபார்ட்மெண்ட்வாசிகளிடம் அதைச் சொல்ல வாய்ப்பிருந்தும், சொல்லாமல் தனது கௌரவத்தைக் காப்பாற்றிய ராமகிருஷ்ணன்,தன்னுடனே அந்த ரகசியத்தைப் புதைத்துக்கொண்டதும்,காமாட்சிக்கு மட்டும்தானே தெரியும்.!

02 ஜனவரி 2012

அவன்,அவள்,அது..!

தனது தூக்கத்தை கலைக்கமாட்டானா..என்ற ஏக்கத்தில் அவள்.அவளது தூக்கம் கலைந்துவிடுமே.., என்று அவன்..,நாட்கள் ஓடுகின்றன.

ஓரே வீட்டிலிருந்தாலும்,ஒவ்வொரு இரவும்,அவர்கள் நிலை இப்படியே தொடர்ந்தது.

ஒரு ஆவேசத்தில் தொடுத்த வழக்கிற்காக. கோர்ட்டிலிருந்து விவாகரத்து என்று தீர்ப்பு வரும்வரை..!.


அவ்வளவுதான் கதை..,இதைப்படிக்கும் உங்களுக்கு நேரமிருந்தால்.கடைசி வரியின் தொடர்ச்சியாக,மீண்டும் முதல் வரியிலிருந்து படித்துப்பாருங்கள்.