இரவின் அமைதியில்
நிலவின் ஒளியில்
நட்சத்திரங்களின் சிமிட்டலில்
மனம் பறிகொடுத்தொரு
வலசை வந்தால்
கவிதை தானாய் வரும்
என்றுதான் என்னைநான்
பழக்கிவைத்திருந்தேன்
நடைக்காக கூட்டிச் செல்லும்
நாய்க் குட்டிபோல..,
நிலவும் மலரும்
காற்றும் வானவில்லும்
இன்னபிற சங்கதிகளும்
இன்பமென்றே,கவிதையென்றே
எழுதியும் வந்தேன்
கற்பனையாக எழுதியதெல்லாம்
பிச்சைக்காக சாமிவேடம்
போட்டவன்போல
பல்லிளித்தது..!
அப்போதெல்லாம் கவிதை
தன்னை எழுதச்சொல்லி
என்னிடம் கேட்டதேயில்லை..!
அடிமை மனைவிபோல
எழும்பிய குரலையும்
அடக்கியே வைத்திருந்தேன்
ஆணவக் கணவன் உருவில்.!
எனது திமிர்க்குதிரையினோடு
ஒருநாள் மதியம்
நகர்ப்புறப் பகுதியில்
உலா வந்தபோது..,
குடியிருப்புக்கு குடிநீர்
வேண்டுமென..
தெறிக்கும் வெயிலில்
சாலையில் நூறுபெண்கள்
எழுப்பிய முழக்கமெலாம்
கவிதையாகவே இருந்தது.
ஒரு நூறு பெண்கள்
ஒரே சமயத்தில்
வாழ்வியல் உண்மைசொல்லும்
கவிஞர்களாக முடியுமெனில்
இதுவரை கவிதையென
எழுதிய பொய்களுக்காக
வெட்கப்படுகிறேன்.!
அடிமை மனைவியாய்
இருந்த கவிதைப்பெண்
சுதந்திரமான தன்சொந்தக்
குரலிலெனக்கு கட்டளையிட்டாள்
இனியாவது எழுதுவது
கவிதையாக இருக்கட்டும்..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக