01 ஜூன் 2012

ஒரு மனக்குமுறல்.!

இயற்கையின் உந்துதல்களுக்கேற்ற
வடிகால்கள் எத்தனைவிதமாய்..

செல்வத்தின் மதிப்பைக் காட்டும்
பளிங்குக் கற்கள்..
சென்றவுடன் இயங்கும் தானியங்கி
தண்ணீர்க்குழாய்..
நின்ற இடம் தெரியும்
பரந்த கண்ணாடி..
ஈரக்கைகளை உலர்த்த
வெப்ப யந்திரம்..
அங்கும் மேனி வியர்க்காமல்
மையக் குளிரூட்டியென..

இயற்கையின் உந்துதல்களுக்கேற்ற
வடிகால்கள் எத்தனைவிதமாய்..,
அரசு அலுவலகங்கள்..
தனியார் அலுவலகங்கள்..
திரையரங்கங்கள்,
பேருந்து நிலையங்கள் என
எல்லா இடங்களிலும்
உங்களுக்கான வகையில்
எல்லாம் அமைத்தீர்கள்..நன்று.!

ஆனால்..,
தவழ்ந்தநிலையில் படியேறும்..
படிகளிலேறத் தடுமாறும்..,
சக்கரநாற்காலிகளில் உலாவரும்
நாங்கள் உங்கள் கணக்கில்
மனிதராய் இல்லையோ..?

உமது உடை
உமது உணவு
உமது இருப்பிடமும் கூட
எங்களுக்குப் பொருந்தும்.
ஆனால்..உமது கழிப்பிடம்
எமக்குப் பொருந்துமா.?

கழிப்பிடம் என்றால்
முகம் சுளிக்காதீர்கள்..!
அந்தரங்கங்களை
வெளியே சொல்வது
அசிங்கமென எமக்கும் தெரியும்..
இது அந்தரங்கமல்ல..
எம்வாழ்வின் ஜீவாதாரப் பிரச்சினை..!
நீ இதில் அசூயைப்பட
எதுவும் இல்லை..!
எல்லோரும் மலக்குடலை
உடலில் சுமந்தே திரிகிறோம்
என்பதே யதார்த்தம்.!

மொண்டிக்கு முந்நூறு குறும்பு
முடவன் கொம்புத்தேனுக்கு
ஆசைப்பட்டது போல
என்று பழமொழிகளையடுக்கி
எதுகையும் மோனையுமாய் எழுதி
உங்கள் மனவக்கிரங்களை
நிறைவேற்றிக் கொண்டவர்களே..!

மாற்றுத் ‘திறன்’ உடையவர்களென
பெயரால் எங்களை
உயர்த்தி வைத்தீர்கள்..!

ஆனால்
உங்கள் கழிப்பிடங்களை
உபயோகப்படுத்தும் திறன்
எங்களுக்கில்லை என்பதை
எப்போதுதான் உணர்வீர்கள்..?

எங்களிடமும் கெஞ்சி
ஓட்டுவாங்கிப் போனவர்களே..!
எங்களின் உழைப்பையும்
லாபமாக்கிப் பார்த்தவர்களே..!

நீங்கள் எங்களை
குடும்பஅட்டைக்கு
அடையாள அட்டைக்கு
ஓட்டுரிமை அட்டைக்கு
அரசு உதவித் தொகைக்கு
என எதற்கெடுத்தாலும்
பொறுக்கச் சொன்னீர்கள்..!
இயற்கை உபாதைக்கும்
எப்படி அய்யா பொறுப்பது.?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக