15 நவம்பர் 2023

கவிஞர் கே.எஸ்.அம்பிகா வர்ஷினி பார்வையில் பாட்டையா

 பொள்ளாச்சி அபி அவர்களின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பிது.முதல் கதைத் தொகுப்பு "எங்கேயும் எப்போதும்" வாசித்த நினைவுகளுண்டு.ஆதலினால் காதலித்தேன் நாவலின் மூலம் அறிமுகமாகியவர்.மிகச்சிறந்த நட்பாளர்.கிட்டத்தட்ட பதினோரு வருடங்கள் மரியாதைக்குரிய நட்பை பரஸ்பரம் உணர்ந்துகொள்ளும்படி அவ்வப்போதான உரையாடல்கள் இலக்கியச் சந்திப்புகள் என்று தொடர்கிறோம்.


எனக்கென சின்னப்பெருமை கூட தனது "ஆதலினால் காதலித்தேன் " நூலின் மூலம் அளித்தவரும் கூட.அந்நாவலுக்கு திறனாய்வின் அடிப்படையில் அணிந்துரை எழுதியிருக்கிறேன்.எழுதவந்த காலத்திலேயே அதற்கு வாய்ப்பளித்த அகன் அவர்களையும் இவ்விடம் நினைவுகூர்கிறேன்.


இன்னும் பொள்ளாசி அபி அவர்கள் கவிஞரும் கூட.தொகுப்பு எதிர்பார்க்கப்படுகிறது.


*******


பாட்டையா


மொத்தம் ஆறு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு.ஒவ்வொரு கதையும் ஒரு கருத்தைப் பாவித்துச் சொல்லிவிடுகிறது.பாவித்தென்றால் வேடமணிவதோ அல்லது இல்லாத ஒன்றையோ சொல்லவில்லை.பாவித்தல் என்பது நளினம் சார்ந்தும் இயங்கக்கூடிய நுட்பம் வாய்ந்தது.அது ஒரு பாணி.ஆசிரியர் முன்னுரையில் அழகாக ஒரு விசயத்தை எடுத்தியம்பி அடிக்கோடிடுகிறார்.


"உரைநடையின் அற்புதமான வடிவங்களில் ஒன்று சிறுகதை. கதையின் மையக்கருத்துகள்,வாசிப்பவரின் ஏற்புக்கும் மறுப்புக்கும் உரியது என்றாலும் கதாசிரியனின் சுதந்திரமான கண்ணோட்டத்திற்கு சிறுகதை எவ்வளவு பெரிய இடமானாலும் தருகிறது."


முதல் கதை பாட்டையாவில் தொடங்கி கடைசியாக வினைப்பயன் வரையிலும் ஒவ்வொன்றும் இடறிக் கீழே தள்ளிவிடாத தன்னகத்தே கொண்டுள்ள கருத்தை விவரிப்பு மூலமாகவும் சிறிது பூடகங்களையும் தெளித்துக் காட்டுகிறது.


பாட்டையாவில் பறையிசை குறித்த விவரிப்புகள் இருந்தாலும் கூட பறையிசையின் தாளகதிகளுக்கு ஆடும் அனுபவசாலி பாட்டையாவின் வல்லமையைச் சுட்டுவதாக எடுத்துக்கொள்கிறேன்.


சஹாபியில் புதிய சொற்களைக் காணமுடிந்தது.சொல்லப்போனால் தொகுப்பு முழுக்க கதைகள் சொற்களை ஆர்ப்பாட்டமில்லாமல் கடத்திவிடும் சகஜமனநிலையைத் தோற்றுவிக்கின்றன.அதாவது இதுவரை நம் அன்றாட வாழ்வில் புழங்காத சொற்கள் கூட இக்கதைகளின் மூலம் அவை எடுத்தியம்பும் வாழ்வியல் சித்திரங்களின் மூலம் சாதாரணமாக வழக்கம்போல புழங்கக்கூடிய சொற்களாக கதைகளுக்குள் நம்மை இட்டுச் செல்கின்றன.உதாரணமாக இந்த வாழ்வில் சிலர் எவ்விதத் தொடர்புகளும் அன்றி உறவுகளாக அமைந்துவிடுவார்கள்

.பல உறவுகள் இதுபோன்ற தொடர்புகளிலிருந்து பிரிவினையை வெகுசீக்கிரமாகத் தந்துவிட்டுப்போகிறதுண்டு.ஆனால் சிலர் அப்படியில்லை.தான் ஏற்படுத்திக்கொள்ளும் உறவுகளையும் கண்ணியமாகக் கொண்டுசெல்லக்கூடிய பக்குவத்தை அடைந்திருப்பார்கள்.எந்த உறவுநிலைகளுக்கும் வேண்டிய உன்னதமிது.அப்படிக் கிடைக்கப்பெறுகிற யாரோ ஒரு தம்பி யாரோ ஒரு அண்ணன் போல அவர்கள் அக்கம்பக்கம் நட்புகள் ரீதியில் கிடைத்துவிடுகிற பந்தமாக இந்தச் சொற்களை எடுத்துக்கொள்கிறேன்.


சஹாபி இருப்பதிலேயே பெண்மனதை நுட்பமாக எடுத்துச்சொல்லும் தனித்துவமான கதைகளில் ஒன்றாகயிருக்கும்.


அரவாணிகள் குறித்துப் பொதுவாக அதிகம் வாசித்ததில்லை.ஆனால் அவர்களை எங்கும் காணநேரும் அனுபவங்கள் காட்சிகள் எனக்குள் உண்டு.அப்படி ஒரு கதாப்பாத்திரத்தை "ஒப்பனைக்காரன்" கதையில் கொண்டுவந்து முடிவை எதிர்பாராதவிதமாக அமைத்திருக்கிறார்.


மகிழம்பூ கதையில் ஆண்பெண் நட்பின் பல ஆண்டுகள் நீட்டிப்பைக் கௌரவப்படுத்தினாலும் ,இன்னொருவருக்காக ஜாமீன் கையெழுத்திடும் கதாப்பாத்திரமொன்றின் மனோநிலையைத் தொட்டு ஆட்டம் காட்டுகிறார்.


இடக்கைப் பழக்கத்தை எதிலிருந்து எதற்கென்று பூடகமாக ஒரு கருத்தைச் சொல்லி "வினைப்பயன்" சிறுகதையோடு முடிப்பதில் இத்தொகுப்பு வாசிப்பவரை இலகுவாக்கக்கூடிய பன்முகங்களைப் பெற்றிருப்பதாகவே உணர்கிறேன்.


இஸ்லாமியப் பின்புலமுள்ள கதைகளை வாசித்திருக்கிறேன்.இத்தொகுப்பில் இரண்டு கதைகள் அவ்விதம் வருவதாகயிருந்தாலும் அவர்கள் புழங்கக்கூடிய சொற்கள் சில பழக்கவழக்கங்கள் எல்லாமும் நாம் அருகிலிருந்து பார்த்தால்கூட அவர்களது வாழ்வியலின் சுகானுபவம் முற்றும் முழுதும் கிடைக்கப்பெறுமா தெரியாது.அல்லது அதுவும் நேரடியாகக் கிடைக்கப்பெறின் ஈடியணையற்ற போதை.கதைகள் மூலம் சொல்லப்படுகிற நாம் தெரிந்துகொள்ள முடியாத கட்டுடைப்புகள் வாழமுடியாத அல்லது வாழ அனுமதிப்பில்லாத சில வெளிகளை தரிசிக்க முடிகிறதென்றால் அவை எழுதிக்கொள்ளப்படுகிறது.


வாசித்துப் பாருங்கள்.ஆறே கதைகள் .ஒவ்வொன்றுக்குள்ளும் மென்னழுத்தம் சுழன்றபடியே நிற்கும்.


#பாட்டையா #பொள்ளாச்சி_அபி 


வெளியீடு:ஒருதுளிக் கவிதை

தொடர்புக்கு :9894602948


09 நவம்பர் 2023

பொள்ளாச்சி அபி அவர்களுடன் கலந்துரையாடல் ஜமுனா

கவிஞர் கவிஜியின் பார்வையில் பாட்டையா

 பாட்டையா - சிறுகதை தொகுப்பு ஒரு பார்வை- கவிஜி

***************************************************************************

"பாட்டையா"வில் ஆறு சிறு கதைகள். ஒவ்வொன்றும் ஆறு போல ஓடும் கதைக் களங்கள். 


கூட்டத்தோடு கூட்டமாக நிற்கும் ஆசிரியரின் பலமே அது தான். தனித்து தெரியாத நிழல் போல கதை நெடுக வழி நடத்திக் கொண்டே வருகிறார். ஒரே மூச்சில் படித்து விட முடிகின்ற சின்ன நூல் தான். ஆனால் தாக்கம் பெரியது. தர்க்கம் பேசும் ஒவ்வொரு கதையும் தினமும் நடக்கும் வாழ்வின் தீவிரம். 


எளிய மனிதர்களின் சுலப வழிகளின் பாரம் பெரியது. அது பற்றி பேசும் ஒவ்வொரு கதையும் அபாரம். அபி சாரின் மொழி இலகு மொழி. நேரடியாக பேசிவிடும் வீறு நடை. பேருந்தில் காதும் காதும் வைத்தது போல பேசிக்கொண்டே சென்று விடும் தூரம்.


"பாட்டையா" என்ற முதல் கதை பறையைப் பற்றி பறை சாற்றுகிறது. பறை அடிப்பதில் இருக்கும் நுட்பம்... அது கொண்ட உப கருவிகளின் பெயர்கள்... அதன் நீட்சி...சதங்கையோடு கொண்ட ஆட்டம் என்று போகிற போக்கில் பறை பற்றிய எல்லாவற்றையும் வகுப்பெடுத்து விடுகிறார். பாட்டையா எனும் பெரும் மனிதனின் கலை  எப்பேற்பட்டது... அனுபவமில்லாத நாயகனின் வஞ்சமும் அதன் மூலம் அவன் பயிலும் கலையின் உயரமும்... இறுதியில் என்னவாகிறது என்று இலை மிதக்கும் நதி போல காட்டி விடுகிறார். அதில் ஒரு காதல்... காதலின் வழியே அரங்கேறும் அன்பின் பிடிப்பு. காதலை கூட சூசகமாக சூட்சுமாக வெளிப்படுத்தும் நாயகி.. அவள் யார் என்ற கதையின் முடிச்சு.. என்று கதை எங்குமே தடைபடவில்லை. 


தாகம் கொண்ட தேடலுக்கு பாட்டையாவின் ஆட்டமும் விடாப் பிடியும் பெரும் தீனி. 


பறை எதற்கெல்லாம் அடிக்கப்படுகிறது.. அதை எப்படி அடிப்பது.. அதன் நெளிவு சுழிவு என்ன... என்று அந்த சத்தத்தை கூட எழுத்துக்கு மாற்றி இருக்கும் வலிமை.. அபி சாரின் எழுத்தனுபவம். கையில் துண்டை பிடித்துக் கொண்டு முன்னும் பின்னும் கால்களை அசைத்தபடியே பாட்டையா ஆடும் ஆட்டம்.. கலை நேர்மை. எந்த காரியத்துக்கு எந்த சத்தம் தர வேண்டும் என்ற லயத்தின் லாடம் பற்றிய விவரிப்பு அட்டகாசம். தாள கதி... இதற்கு இது தான் என்பது தான் வித்தைக்காரன் சித்து. வேகம் கூட விவேகமும் கூட வேண்டும் கலைக்கு. அடித்துக் கொண்டிருக்கும் கூட்டத்தில் ஒருவர் இன்னொருவரை கண்களாலே... உடல் மொழியாலே... சூசகமாக புரிந்து கொண்டு அதற்கு தகுந்தாற் போல அடியின் போக்கை கொண்டு போக வேண்டும் என்கிற நுட்பம் அலாதி. எடுத்துரைத்த பாங்கு சிலாகிப்பு.


அடுத்த கதை  பெண்ணுரிமை பற்றியது. இஸ்லாம் சமூகத்தில் பெண்களுக்கு  எதிராக கால காலமாக நடக்கும் சில சம்பிரதாயங்களை முன் நிறுத்தி அதை திருத்தும் வேலையை ஒரு பெண்ணே செய்வதாக இருக்கிறது. வெகு அற்புதம். மாமியார் மருமகள் என்றாலே கண்றாவிகளாக சண்டையிட்டுக் கொண்டும் பனிப்போரில் சிக்கி சின்னாபின்னாமாகிக் கொண்டும் தான் இருக்க வேண்டுமா. மருமகளுக்காக நிற்கும் மாமியார். மாமியாருக்கு மகுடம் சூட்டும் மருமகள் என்று பெரும்பாடம்... கூடவே இஸ்லாம் சமூகத்தில் நிலவும் ஆணாதிக்கம் குறித்த கேள்வியும் இந்த  "சஹாபி" 


"ஒப்பனைக்காரன்" திருநங்கை உலகத்தை பேசுகிறது. மிக மெல்லிய கோட்டில் எழுத பட்ட கதை இது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே அர்த்தநாரியாக இருக்கும் நாயக பாத்திரப்படைப்பு வெகு நேர்த்தி. படபடவென கதைக்குள் இறங்கி விடும் மொழிக்கு அலங்காரம் தேவை இல்லை. இது அரிதாரம் பூசிய சிறுகதை வனப்பு. இறுதிக்காட்சியில் ஒரு சினிமா ஷாட். மறுநாளில் இருந்து ஊர்மக்கள் என்னாவாகிறார்கள் என்பது இயல்பென்றாலும்... இயல்பை சொல்லியும் எம் போன்ற வாசகனை திருப்தி படுத்தும் கலை அபிசாரின் கதை வளம்.


இந்தா... இப்ப வந்தரென் என்று சொல்லி ஓடி காணாமலே போன நண்பனை அறிவேன். எங்கும் எதிலும் உன்னை ஜெயிக்காமல் விட மாட்டேன் என்று சொல்லும் நண்பனை அறிவேன். சொல்வது ஒன்றுமாக செய்வது ஒன்றுமாக இருக்கும் நண்பனை அறிவேன். "மகிழம்பூ"வில் நட்புக்கு மாலையிடம் பாத்திரங்கள். நட்பாகவே வாழ்வை சூடிக்கொண்ட சித்திரங்கள். மனம் நெகிழ செய்த மகிழம்பூ ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான உறவு. நட்பு பாராட்டும் இந்த கதையில்... மெல்ல மெல்ல விடுபடும் திரை விலகும் காட்சிகள் அடுத்தடுத்து அட போட வைக்கும்.


யார் எங்கு போனாலும் அவரவர் மனம் தான் அவர். யார் எங்கு இருந்தாலும் அவரவர் குணம் தான் அவர்.... என்று "நெருப்புக்கு திசை இல்லை" போட்டு வாட்டி விட்டது. நேர்மையின் வீரியம் யாஸ்மினிடம். சாமியின் குளறுபடி அவன் அண்ணனிடம். மற்றபடி மீண்டும் ஒரு காதல் கதையும் உள்ளே இருக்கிறது.


"வினைப்பயன்" கதை... இந்த நூலில் சற்று வித்தியாசமானது. கதைக்களமே வேறு. படிக்க படிக்கவே யூகித்து விட்டாலும்... உன் கை ஒருவர் மீது படிக்கிறது என்றால் இன்னொரு கை உன் மீது படியும் என்று சுற்றி வளைத்து வாழ்வின் ஸ்திரத்தை சித்திரமாக்கி காட்டி விட்டார். இன்றைய குடும்ப வாழ்வின் பெரிய பிரச்சனை பற்றிய அறிவியல் தீர்வு அலசப்பட்டிருக்கிறது. அவசியம் தான்.


எப்படி பார்த்தாலும் "பாட்டையா" தான் எனக்கு இந்த நூலில் ஆகச் சிறந்த கதையாக தெரிகிறது. 


முத்து வீரனின் ஓரடி இரண்டடி மூன்றடி....பறை அடிக்கேற்ப ஆடிக் கொண்டிருப்பது பாட்டையா மட்டுமா என்ன..  படித்துக் கொண்டிருக்கும் இந்த ஏட்டய்யாவும் தான். இந்த நாளை இனிய நாளாக்கிய "பாட்டையா"வுக்கு நன்றிகள். நூலை அனுப்பி வைத்து இந்த கொண்டாட்டத்தை எனக்களித்த எங்கள் அபி சாருக்கு வாழ்த்துகள்.


பேரன்புகள் சார்.


கவிஜி


நூல் :  பாட்டையா

ஆசிரியர் : பொள்ளாச்சி அபி 

வெளியீடு : ஒரு துளிக் கவிதை - புதுவை 

நூலுக்கு : 98946 02948