15 நவம்பர் 2023

கவிஞர் கே.எஸ்.அம்பிகா வர்ஷினி பார்வையில் பாட்டையா

 பொள்ளாச்சி அபி அவர்களின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பிது.முதல் கதைத் தொகுப்பு "எங்கேயும் எப்போதும்" வாசித்த நினைவுகளுண்டு.ஆதலினால் காதலித்தேன் நாவலின் மூலம் அறிமுகமாகியவர்.மிகச்சிறந்த நட்பாளர்.கிட்டத்தட்ட பதினோரு வருடங்கள் மரியாதைக்குரிய நட்பை பரஸ்பரம் உணர்ந்துகொள்ளும்படி அவ்வப்போதான உரையாடல்கள் இலக்கியச் சந்திப்புகள் என்று தொடர்கிறோம்.


எனக்கென சின்னப்பெருமை கூட தனது "ஆதலினால் காதலித்தேன் " நூலின் மூலம் அளித்தவரும் கூட.அந்நாவலுக்கு திறனாய்வின் அடிப்படையில் அணிந்துரை எழுதியிருக்கிறேன்.எழுதவந்த காலத்திலேயே அதற்கு வாய்ப்பளித்த அகன் அவர்களையும் இவ்விடம் நினைவுகூர்கிறேன்.


இன்னும் பொள்ளாசி அபி அவர்கள் கவிஞரும் கூட.தொகுப்பு எதிர்பார்க்கப்படுகிறது.


*******


பாட்டையா


மொத்தம் ஆறு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு.ஒவ்வொரு கதையும் ஒரு கருத்தைப் பாவித்துச் சொல்லிவிடுகிறது.பாவித்தென்றால் வேடமணிவதோ அல்லது இல்லாத ஒன்றையோ சொல்லவில்லை.பாவித்தல் என்பது நளினம் சார்ந்தும் இயங்கக்கூடிய நுட்பம் வாய்ந்தது.அது ஒரு பாணி.ஆசிரியர் முன்னுரையில் அழகாக ஒரு விசயத்தை எடுத்தியம்பி அடிக்கோடிடுகிறார்.


"உரைநடையின் அற்புதமான வடிவங்களில் ஒன்று சிறுகதை. கதையின் மையக்கருத்துகள்,வாசிப்பவரின் ஏற்புக்கும் மறுப்புக்கும் உரியது என்றாலும் கதாசிரியனின் சுதந்திரமான கண்ணோட்டத்திற்கு சிறுகதை எவ்வளவு பெரிய இடமானாலும் தருகிறது."


முதல் கதை பாட்டையாவில் தொடங்கி கடைசியாக வினைப்பயன் வரையிலும் ஒவ்வொன்றும் இடறிக் கீழே தள்ளிவிடாத தன்னகத்தே கொண்டுள்ள கருத்தை விவரிப்பு மூலமாகவும் சிறிது பூடகங்களையும் தெளித்துக் காட்டுகிறது.


பாட்டையாவில் பறையிசை குறித்த விவரிப்புகள் இருந்தாலும் கூட பறையிசையின் தாளகதிகளுக்கு ஆடும் அனுபவசாலி பாட்டையாவின் வல்லமையைச் சுட்டுவதாக எடுத்துக்கொள்கிறேன்.


சஹாபியில் புதிய சொற்களைக் காணமுடிந்தது.சொல்லப்போனால் தொகுப்பு முழுக்க கதைகள் சொற்களை ஆர்ப்பாட்டமில்லாமல் கடத்திவிடும் சகஜமனநிலையைத் தோற்றுவிக்கின்றன.அதாவது இதுவரை நம் அன்றாட வாழ்வில் புழங்காத சொற்கள் கூட இக்கதைகளின் மூலம் அவை எடுத்தியம்பும் வாழ்வியல் சித்திரங்களின் மூலம் சாதாரணமாக வழக்கம்போல புழங்கக்கூடிய சொற்களாக கதைகளுக்குள் நம்மை இட்டுச் செல்கின்றன.உதாரணமாக இந்த வாழ்வில் சிலர் எவ்விதத் தொடர்புகளும் அன்றி உறவுகளாக அமைந்துவிடுவார்கள்

.பல உறவுகள் இதுபோன்ற தொடர்புகளிலிருந்து பிரிவினையை வெகுசீக்கிரமாகத் தந்துவிட்டுப்போகிறதுண்டு.ஆனால் சிலர் அப்படியில்லை.தான் ஏற்படுத்திக்கொள்ளும் உறவுகளையும் கண்ணியமாகக் கொண்டுசெல்லக்கூடிய பக்குவத்தை அடைந்திருப்பார்கள்.எந்த உறவுநிலைகளுக்கும் வேண்டிய உன்னதமிது.அப்படிக் கிடைக்கப்பெறுகிற யாரோ ஒரு தம்பி யாரோ ஒரு அண்ணன் போல அவர்கள் அக்கம்பக்கம் நட்புகள் ரீதியில் கிடைத்துவிடுகிற பந்தமாக இந்தச் சொற்களை எடுத்துக்கொள்கிறேன்.


சஹாபி இருப்பதிலேயே பெண்மனதை நுட்பமாக எடுத்துச்சொல்லும் தனித்துவமான கதைகளில் ஒன்றாகயிருக்கும்.


அரவாணிகள் குறித்துப் பொதுவாக அதிகம் வாசித்ததில்லை.ஆனால் அவர்களை எங்கும் காணநேரும் அனுபவங்கள் காட்சிகள் எனக்குள் உண்டு.அப்படி ஒரு கதாப்பாத்திரத்தை "ஒப்பனைக்காரன்" கதையில் கொண்டுவந்து முடிவை எதிர்பாராதவிதமாக அமைத்திருக்கிறார்.


மகிழம்பூ கதையில் ஆண்பெண் நட்பின் பல ஆண்டுகள் நீட்டிப்பைக் கௌரவப்படுத்தினாலும் ,இன்னொருவருக்காக ஜாமீன் கையெழுத்திடும் கதாப்பாத்திரமொன்றின் மனோநிலையைத் தொட்டு ஆட்டம் காட்டுகிறார்.


இடக்கைப் பழக்கத்தை எதிலிருந்து எதற்கென்று பூடகமாக ஒரு கருத்தைச் சொல்லி "வினைப்பயன்" சிறுகதையோடு முடிப்பதில் இத்தொகுப்பு வாசிப்பவரை இலகுவாக்கக்கூடிய பன்முகங்களைப் பெற்றிருப்பதாகவே உணர்கிறேன்.


இஸ்லாமியப் பின்புலமுள்ள கதைகளை வாசித்திருக்கிறேன்.இத்தொகுப்பில் இரண்டு கதைகள் அவ்விதம் வருவதாகயிருந்தாலும் அவர்கள் புழங்கக்கூடிய சொற்கள் சில பழக்கவழக்கங்கள் எல்லாமும் நாம் அருகிலிருந்து பார்த்தால்கூட அவர்களது வாழ்வியலின் சுகானுபவம் முற்றும் முழுதும் கிடைக்கப்பெறுமா தெரியாது.அல்லது அதுவும் நேரடியாகக் கிடைக்கப்பெறின் ஈடியணையற்ற போதை.கதைகள் மூலம் சொல்லப்படுகிற நாம் தெரிந்துகொள்ள முடியாத கட்டுடைப்புகள் வாழமுடியாத அல்லது வாழ அனுமதிப்பில்லாத சில வெளிகளை தரிசிக்க முடிகிறதென்றால் அவை எழுதிக்கொள்ளப்படுகிறது.


வாசித்துப் பாருங்கள்.ஆறே கதைகள் .ஒவ்வொன்றுக்குள்ளும் மென்னழுத்தம் சுழன்றபடியே நிற்கும்.


#பாட்டையா #பொள்ளாச்சி_அபி 


வெளியீடு:ஒருதுளிக் கவிதை

தொடர்புக்கு :9894602948


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக