29 ஆகஸ்ட் 2023

பாட்டையா நூல் அறிமுகம்- முகில்நிலா தமிழ்

 பாட்டையா சிறுகதை தொகுப்பு வாசிப்பனுபவம்.. 


பொள்ளாச்சி அபி அவர்கள் எழுதிய மூன்றாவது நூல் இது.. "ஆதலினால் காதலித்தேன்" என்னும் நாவலையும், "எங்கேயும் எப்போதும்" என்னும் சிறுகதை தொகுப்பையும் அடுத்து இது மூன்றாவது சிறுகதை தொகுப்பு.. 


அயர்ச்சி தராத கதைத் தேர்வு, சொற்கள், சாமானியர்களை கதை நாயகர்களாக தேர்வு செய்த முறை என பாராட்டுக்களை முன்பே ஆசிரியரிடம் தெரிவித்து விடுகிறேன்.. 


இந்தத் தொகுப்பில் நான் வாசித்து உணர்ந்த வாசிப்பனுபவம் மட்டும் தான் இது.. மற்றபடி இது விமர்சனம் அல்ல.. என் உள்வாங்கும் திறனை மட்டும் கருத்தில் கொண்டு நான் எழுதும் வாசிப்பனுபவம் என்பதை வாசிப்போருக்கு முன்பே தெரிவித்து விடுகிறேன்.. 


இந்தத் தொகுப்பின் 

பாட்டையா தலைப்பில் உள்ள முதல் கதை... அவமானம் குறித்தும் அதிலிருந்து எப்படி மீள்வது என்றும், அவமானப் படுத்தியவரின் பிண்ணனி ,அனுபவம், அவர் பக்க நியாயம் என இரண்டு தரப்பையும் குறித்து எழுதியிருப்பது ஆசிரியரின் பக்குவ மனநிலை என்று நினைக்கிறேன்.. 


இளையராஜா ஒரு மேடையில் பார்த்திபனை அவமானப் படுத்துவார்... இளையராஜாவை பொறுத்தவரை அவர் இசையின் மேலான காதலில்.. அதன் நுட்பம் அறிந்தவர் என்ற விதத்தில், இன்னும் சொல்லப் போனால் தான் அவருக்குச் செய்வது அவமானம் என்ற எண்ணம் கூட இல்லாது செய்துவிடுவார்..


இங்கே பார்த்திபனின் இசை அனுபவம் குறித்த ஒரு கேள்வியும் இருக்கிறது.. என்றாலும் எனக்கென்னவோ இளையராஜா அவர்களின் செயலை ஏற்க முடியவில்லை. கலை மீதான காதலை விட சக மனிதனை காயப் படுத்தி விடக்கூடாதென்ற மனிதம் இருக்க வேண்டுமென கருதுகிறேன்.


அப்படி அவமானப் பட்டவன் அதை தன் வெற்றிக்கான மூலதனமாக இந்தக் கதையில் மாற்றிக் கொள்வது அவமானத்தை எதிர்கொள்ளும் யுக்தி இப்படி இருக்க வேண்டுமென்று ஆசிரியர் சொல்வதாகப் பட்டது.. 


"சஹாபி "

இது மதங்களின் மூலம் பெண் எப்படி அடிமைப் படுத்தப் படுகிறாள் என்பதையும், பெண்ணுக்கான கெளரவம் எதுவாக இருக்க முடியும் என்பதையும், திருமணத்தில் நடக்கும் சடங்குகள் சம்பிரதாயங்களை வரையறை செய்யும் ஆணாதிக்க மனோபாவம் பெண்களை எந்த அளவு மட்டம் தட்டுவதாக  இருக்கிறது என்பதையும் மிக அழுத்தமாக பேசுகிறது.. 


"ஒப்பனைக்காரன்" கதை இந்தத் தொகுப்பில் மிக முக்கியமான கதை, சமூகத்தின் மன வக்கிரங்களை, இயற்கைக்கு புறம்பான செயற்கை தனங்களை, பெற்றவர்கள் பிள்ளையின் மீது காட்டும் கொடூரமுகத்தை, மூன்றாம் பாலினத்தவரின் கண்ணீரை  சிறப்பாக எடுத்துப்பேசும் கதை, அதன் முடிவு தான் இந்தக்கதையின் ஹைலைட்... வாசிச்சு பாருங்க.


"மகிழம்பூ"  ஆண், பெண் நட்பு ஆண்டுகள் கடந்தும் நட்பாகவே நீடிக்கும் கதை.. இந்த காலகட்டத்தில் மிக அவசியமாய் அனைவருமே வாசிக்க வேண்டிய கதை, ஆண் பெண் நட்பில் சலனமின்றி கடக்கவும் அவரவர் ஒத்துழைப்போடு காலம் கடந்து நிலைப்பதும் நடைமுறை சாத்தியமென உண்மையில் நடந்ததை கதையாக எழுதியிருக்கிறார் ஆசிரியர்.


வினைப்பயன் கதை மிக முக்கியமான கதை, சமூகத்தின் சாதி வெறி இன்னும் எப்படி ஊறிக்கிடக்கிறது என்பதையும், விஞ்ஞான வளர்ச்சியில் எல்லாமும் சாத்தியமாகும் போது இந்த சாதியும் ஒருநாள் ஒன்றும் இல்லாது அழிந்து போகும் என்பதையும் மையக் கருத்தாய் வைத்து எழுதப்பட்ட கதை.. 


இந்த நூல் வாசிப்பனுபவம் என்பது ஆரம்பிக்கும் போது எப்படியோ முடிவுவரை அப்படியே எந்தத் தொய்வும் இன்றி வாசிக்க கூடியதாக இருக்கிறது.. எளிய மனிதர்களை எளிய சொற்களோடு  தேவையற்ற கற்பனைகளோ, வர்ணணைகளோ இன்றி நம் எண்ணவோட்டத்தில் காட்சிப் படுத்தும் விதமாக எழுதியிருக்கிறார் அதற்கு என் பாராட்டுக்கள்.. 


சிறுகதை எழுத பழகுவோருக்கு இவரது எழுத்துநடை கதை நகர்த்தும் யுக்தி கதைக்கு அவசியமான காதாப் பாத்திரங்கள் தேர்வு என கற்றுக் கொள்ள வசதியாய்  இருக்கும்.. வாங்கி வாசித்து கருத்துக்களை பகிருங்கள்.. 


அன்புடன் முகில் நிலா தமிழ் .


பாட்டையா நூல் அறிமுகம்- பொள்ளாச்சி இலக்கியவட்டம்














 

பாட்டையா நூல் அறிமுகம் அசரப் அலி


 அன்புத்தோழன் அசரப் அலி Asraf Ali யின் பார்வையில் "பாட்டையா'' சிறுகதை தொகுப்பு குறித்து...

+++++++++


இலக்கிய வட்டத்தில் பொள்ளாச்சி அபி என்று அறியப்படும் அன்பிற்குரிய தோழர் அக்பர் அவர்கள் தனது முதல் படைப்பான ஆதலினால் காதலித்தேன், எங்கேயும் எப்போதும் தொடர்ந்து மூன்றாவது படைப்பாக  #பாட்டையா என்ற 'சிறுகதை தொகுப்பை படைத்துள்ளார்.


புத்தகத்தின் பெயரை தாங்கி நிற்கும் #பாட்டையாசிறுகதை ஒடுக்கப்பட்ட மக்களின் இசைக்கருவியான பறை குறித்தும், விசேஷ நாட்களில் திருவிழாக்களில், இல்லங்களில் இசைக்கப்படுகிற கருவியும் அந்த இசைக்கு ஏற்ப தங்கள் நளினமான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய நபர்களின் திறன் குறித்தும், பாட்டையா என்கிற ஒரு பாத்திரத்தின் மூலமாகவும், முத்து வீரன் என்ற பாத்திரத்தின் வழியாகவும் நம்முள் கடத்தி விடுகிறார்.

அதை படிக்கும்போது அந்த இசையோடு, அந்த ஆட்டத்தோடு நாமும் கலந்து விடுகிற நிலையை ஏற்படுத்துகிறது.


ஆண்கள் பெண்களை அடக்கி ஆள்கிற ஆணாதிக்க மனப்போக்குகள் குறித்தும், இஸ்லாத்தில் திருமணம் ஆகக்கூடிய பெண்களுக்கு மணமகன் சார்பில் கொடுக்கக்கூடிய மகற் குறித்தும் #சஹாபி என்ற சிறுகதை மூலம் விரிவாக பேசியிருக்கிறார்.


திருநங்கைகளாக,திருநம்பிகளாக நம் மத்தியில் வாழ்ந்து வரக்கூடிய மூன்றாம் பாலினத்தவர்களின் வலிகள், வேதனைகள், அவமானங்கள் குறித்து பேசக்கூடிய #ஒப்பனைக்காரன் சிறுகதை அப்படிப்பட்டவர்கள் வழிபாட்டுக்கு உரியவர்களாக மாறக்கூடிய சமுதாயப் போக்குகளையும் சுட்டிக்காட்டியுள்ளது. 


ஆணும்-பெண்ணும் நண்பர்களாய் இருப்பதை, திருமணத்திற்கு பின்பு நண்பர்களாக நீடிப்பதை இச்சமூகம் ஏற்றுக்கொள்வதில்லை. 

ஆனால் , ஆணும் - பெண்ணும் 40 ஆண்டுகளாக நண்பர்களாக நீடிப்பதை  தன் சொந்த வாழ்க்கை அனுபவத்தினுாடே அக்பர் பதிவு செய்திருந்த #மகிழம்பூ.


இன்றைய சூழலில்,  பெண்கள் அதிக அளவில் படித்து வேலைக்கு செல்லக்கூடிய நிலையில் வாழ்க்கை முறையில் ஏற்பட்டிருக்கக் கூடிய மாற்றங்கள், வெவ்வேறு மதங்களை பின்பற்றுகிற குடும்பங்களில் திருமணங்கள ஏற்படுத்துகிற தாக்கங்கள், ஆனாலும் உண்மைநிலை என்ன என்பது குறித்து #நெருப்புக்குதிசையில்லை என்ற கதை மூலம் வெளிப்படுத்துகிறார்.


நவீன உலகில் ஏற்பட்டு வரக்கூடிய விஞ்ஞான மாற்றங்கள் அதனால் விளையும் நன்மைகள் குறித்து, 

குறிப்பாக இன்றைய இளைஞர்கள் எதிர்கொள்ளக்கூடிய குழந்தையின்மை பிரச்சனையை மையப்படுத்தி, அதோடு போகிற போக்கில் சாதிய பெருமிதம், சாதிய வெறி, சாதிய பாகுபாடு பேசுகிறவர்கள் முகத்தில் ஓங்கி அறைந்தார் போல் சொல்லப்படுகிறது #வினைப்பயன் என்கின்ற சிறுகதை, 


வேறு வேறு பரிமாணத்தில் ஒவ்வொரு சிறுகதைக்கான கதைக்களத்தை அமைத்து இத்தொகுப்பை தோழர் பொள்ளாச்சி அபி  தந்துள்ளார். 


தோழர் பொள்ளாச்சி அபிக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.

பாட்டையா நூல் அறிமுக உரை-ஜி.சிவக்குமார்

 பொள்ளாச்சி இலக்கியவட்டத்தின் சார்பில் பொள்ளாச்சி அபி எழுதிய பாட்டையா சிறுகதைத் தொகுப்பு 20-8-23 அன்று நூல் வெளியீடும் அறிமுகமும் நடைபெற்றது.

நூலை அறிமுகப் படுத்தி எழுத்தாளர்  ஜி.சிவக்குமார் உரையாற்றினார்.இதனையடுத்து எழுத்தாளர். பொள்ளாச்சி அபி ஏற்புரையாற்றினார். சிறப்பாக நடைபெற்ற விழாவின் காணொலி தொகுப்பு..


https://youtu.be/Ni6gAvjTIpw

பாட்டையா நூல் அறிமுகம்-முனைவர்.வா.நேரு

 மதிப்பிற்குரிய தோழர் முனைவர் வா.நேரு அவர்களுக்கு எனது நன்றியும்,அன்பும்..!

+++±+++

MONDAY, 28 AUGUST 2023

அண்மையில் படித்த புத்தகம் : பாட்டையா (சிறுகதைத் தொகுப்பு)...பொள்ளாச்சி அபி

 


அண்மையில் படித்த புத்தகம் : பாட்டையா (சிறுகதைத் தொகுப்பு)


நூல் ஆசிரியர்               : பொள்ளாச்சி அபி


வெளியீடு                   : ஒரு துளிக்கவிதை,புதுச்சேரி,7810098433


முதற்பதிப்பு                 : 2023, பக்கங்கள் : 76,விலை ரூ 125


தோழர் பொள்ளாச்சி அபி அவர்களின் அண்மையில் வெளிவந்த சிறுகதைத் தொகுப்பு பாட்டையா. ஆறு சிறுகதைகள் மட்டுமே உள்ள தொகுப்பு.ஒரே மூச்சில் படித்து முடிக்க முடிந்த தொகுப்பு.


கதைத் தலைப்பாக இருக்கும் பாட்டையா, இறப்பு வீட்டில் பறை அடிப்பவருக்கும்,அந்தப் பறை இசைக்கு ஏற்ப நடனமாடும் பாட்டையாவுக்கும் ஏற்படும் போட்டியைப் பற்றி விவரிக்கும் கதை.தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் நடிகை பத்மினி நாட்டியம் ஆட,நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் நாதஸ்வரம் வாசிக்கும் அந்தக் காட்சியை எத்தனை முறை பார்த்து பார்த்து நாம்  ரசித்து இருப்போம். திரைப்படத்தில் பார்க்கும் காட்சியைப் போலவே சொற்களால் காட்சியைக் கட்டி நமது கண் முன்னே பார்க்கவிடுகிறார் எழுத்தாளர் பொள்ளாச்சி அபி. பறை இசை இசைக்கும் முத்துவீரனுக்கு ஏற்படும் அவமானம்,அந்த அவமானத்தினால் அவர் மிகத் தெளிவாக பறை இசையைக் கற்றுக்கொள்ள எடுக்கும் முயற்சிகள்,அதற்காக அவர் எடுத்துக்கொள்ளும் பயிற்சிகள் என மிக விரிவாக இந்தக் கதை விவரிப்பதும்,முடிவில் தன்னுடைய அத்தனை இசைக்கும் ஏற்ப நடனமாடும் பாட்டையாவை,அவரது பெருந்தன்மையை வியந்து பாராட்டுபவராக முத்துவீரன் மாறுவதாகவும் முடித்திருப்பது மிகச்சிறப்பு.வெகு நுட்பமான விவரிப்புகள் அடங்கிய கதை இது. இந்தத் தொகுப்பிற்கே மிகப்பெரும் மெருகூட்டும் கதை இந்தப் ‘பாட்டையா ‘ என்னும் சிறுகதை.

இஸ்லாமிய குடும்பங்களில் திருமணத்தின்போது கொடுக்கப்படும் ‘மஹர்’ என்னும் தொகையைக் கருவாகக் கொண்ட ‘சஹாபி ‘ என்னும் சிறுகதை எனக்கு முற்றிலும் வேறுபட்ட வாசிப்பு அனுபவத்தைக் கொடுத்தது. இந்தச்சிறுகதையில் இருக்கும் பல சொற்கள் இஸ்லாமியக் குடும்பங்களில் புழங்கும் சொற்கள், எந்தவிதமான அருஞ்சொற்பொருள் விளக்கமும் இல்லாமல் கதை ஓட்டத்தின் மூலமாக அந்தச்சொற்களின் பொருளை நாம் புரிந்து கொள்வதுபோல அமைத்திருப்பது இந்தக் கதையின் பலம்.’பாத்திமா’’ன்னுதான் பெயர் வைக்கவேண்டுமென்று ,மருமகள் கூறுவதாக இந்தக் கதை முடிவது வாசிப்பவருக்கு ஒரு நிம்மதியைத் தருகின்ற முடிவு.


அதைப்போலவே ‘நெருப்புக்கு திசையில்லை ‘ என்னும் கதை ,நுட்பமாக அண்ணன் தங்கைக்கு இடையே நடக்கும் சொத்துப் பிரச்சனையை அடிப்படையாக வைத்துப் பேசுகிறது. இந்தக் கதையில் ஒரு இஸ்லாமியப்பெண், அசோக் என்பவரை ,வீட்டினரை எதிர்த்து திருமணம் செய்து வாழ்வதாகவும்,அதே போல மகிழும்பூ கதையில் அக்பர் என்பவர் பிரேமா என்பவரைத் திருமணம் செய்து வாழ்வதாகவும் அமைத்து. இரண்டு கதைகளிலும் பெருந்தன்மையையும் விட்டுக்கொடுத்தலும் மணவாழ்க்கையை எவ்வளவு செம்மைப்படுத்தும் என்பதைச்சொல்வதாக இருக்கிறது.


வினைப்பயன் என்னும் கதை இன்றைய கால கட்டத்திற்குத் தேவையான கதை.சந்திரயான் 3 நிலாவில் இறங்கி ஆராய்ச்சி செய்யும் செய்தியை வெளியிட்டிருக்கும் செய்தித்தாளிலேயே திருப்பூரில் பட்டியலினப்பெண் சமைக்கிறார் என்று சொல்லி தங்கள் குழந்தைகளை திருப்பி அழைத்துச்சென்ற பெற்றோர்களைப் பற்றியும் செய்தி வெளியிட்டிருக்கிறது. இந்த ‘வினைப்பயன் ‘ கதை அறிவியலுக்கும் ,நடைமுறைக்கும் உள்ள முரணை மிக நன்றாகக் காட்டியிருக்கிறது. நவீன மருத்துவவசதிகள் எப்படிக் குழந்தை பெறுவதற்கு உதவுகிறது என்பதையும் அதில் சாதி எப்படி அழிகிறது என்பதையும் இயல்பான மொழியில் வெளிப்படுத்தி இருக்கிறார் அபி.


இந்தக் கதைத் தொகுப்பில் எனக்கு கொஞ்சம் நெருடலைக் கொடுத்த கதை ஒப்பனைக்காரன்.மூன்றாம் பாலினத்தைச்சார்ந்தவராக மாறும் ராதாகிருஷ்ணன் என்பவரைப் பற்றிய கதை. குடும்பமே எப்படி மாறுகிறது,அதிலும் அம்மாவின் பாத்திரம் எவ்வளவு கொடூரமாக மாறுகிறது என்பதை வாசிப்பவர்கள் மனம் பதறும் அளவிற்குக் கதையைப் படைத்திருக்கிறார். ராதாகிருஷ்ணன் கடவுள் போல வேடமிட்டு தற்கொலை செய்வதாகவும்,அதன் மூலம் எல்லோராலும்  வெறுக்கப்பட்ட  அவர்,எல்லோரும் வணங்கக்தக்கவராக மாறுவதாகவும் கதையை முடித்திருக்கிறார்.மூன்றாம் பாலினத்தவரிடம் நாம் நிறையப் பேசவேண்டும். அவர்களுக்கு உளவியல்ரீதியாக நிறைய ஆலோசனைகளைக் கொடுக்கவேண்டும்.ஆண் பெண்போல உடை உடுத்துவதோ அல்லது பெண் ஆண்போல உடை உடுத்துவதோ அவரவர் விருப்பம்.மூன்றாம் பாலினத்தவர் உடைகள் மூலம் தங்களை ஆணாகவோ பெண்ணாகவோ மாற்றிக்கொள்வது அவரவர் விருப்பம். இன்றைய  நவீன உலகத்தில் மாற்றியே ஆகவேண்டும் என்னும் கட்டாயம் இல்லை என்பதையும் நாம் சொல்லவேண்டும். தற்கொலை எந்த நிலையிலும் தீர்வல்ல என்பதை ஒரு கதை சொல்லவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.ஆனால் இந்தக் கதை படித்து முடித்த பின்பும் நிறைய  நேரம் இதைப் பற்றி யோசிக்க வைத்தது.


“உரைநடையின் அற்புதமான வடிவங்களில் ஒன்று சிறுகதை.இதில் நாம் எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசமுடிகிறது.கதையின் மையக்கருத்துகள்,வாசிப்பவரின் ஏற்புக்கும் மறுப்புக்கும் உரியது என்றாலும் கதாசிரியனின் சுதந்திரமான கண்ணோட்டத்திற்கு சிறுகதை எவ்வளவு பெரிய இடமானாலும் தருகிறது.அதனையொட்டியே எனது கருத்துகளுக்கு வடிவம் தந்திருக்கிறேன் ‘ என்று என்னுரையில் தோழர் பொள்ளாச்சி அபி குறிப்பிட்டிருக்கிறார். உண்மை.அவரது கருத்துகளை சிறுகதைகளாக ஆக்குவதில் பொள்ளாச்சி அபி வெற்றி பெற்றிருக்கிறார்.


நண்பர்களை நாம் எந்த வயதிலும் சம்பாதிக்கலாம். அப்படி தோழர் பொள்ளாச்சி அபிக்கும் எனக்கும் நாற்பது வயதுக்குப்பிறகு நண்பராக கிடைத்தவர் தோழர் அகன் என்ற அமிர்தகணேசன் அவர்கள். “ நீண்ட இடைவெளிக்குப்பின் எழுதப்பட்ட இச்சிறுகதைகள் தோழர் அகன்(எ) அமிர்தகணேசன் அவர்களின் ஓயாத அன்பின் விளைவாக முகிழ்த்தவை” என்று என்னுரையில் தோழர் பொள்ளாச்சி அபி குறிப்பிட்டிருக்கிறார். வாழ்த்துகள் தோழர்களே இருவருக்கும். நட்பு எப்போதும் வெற்றி பெற வைக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த ‘பாட்டையா ‘நூலின்  ஆசிரியர் பொள்ளாச்சி அபி அவர்களும்,பதிப்பாளர் தோழர் அகன் அவர்களும்.

இந்த நூலை வாங்கி வாசித்துப்பாருங்கள்.உங்களுக்கும் பிடிக்கும். ‘பாட்டையா’ சிறுகதையைப் பள்ளிகளில்,கல்லூரிகளில் பாடமாக வைக்கலாம்.அவ்வளவு ஈர்ப்பாக இருக்கிறது.இதனை ஆங்கிலத்திலோ அல்லது நமக்குத் தெரிந்த வேறு மொழிகளிலோ மொழி பெயர்த்துக்கொடுத்தும் கூட தோழர் பொள்ளாச்சி அபி அவர்களைப் பாராட்டலாம்.


முனைவர்.வா.நேரு,


பாட்டையா நூல்அறிமுகம் -மீ.மணிகண்டன்

 அன்பு நண்பர்..

Mee Manikandan பார்வையில் பாட்டையா -!

மகிழ்ச்சி மிக்க நன்றியும் அன்பும் தோழரே.!

+++++

நீண்ட நாட்களுக்குப்பிறகு பொள்ளாச்சி அபி அவர்களின் எழுத்து வாசிக்கக் கிடைத்தது. தொகுப்பின் தலைப்பு பாட்டையா. தலைப்புக் கதையை முதலில் வாசிக்க ஆவல் எழுந்தது. வாசித்தபொழுது புரிந்தது வழக்கம்போல மானுட வாழ்க்கையின் ஒரு அங்கத்தை அதில் வரைந்திருக்கிறார் என்பது. ஆட்டம் தாளம் என்ற களத்தில், கோபம், பழிவாங்குதல், அறியாமை, அன்பு, காதல் என்ற உணர்ச்சிகளை அடுக்கி வைத்திருக்கிறார் அபி.


தில்லானா மோகனாம்பாள், கரகாட்டக்காரன் போன்ற திரைக்கதைகளில் ஆணுக்கும் பெண்ணுக்கும் போட்டி என்று பார்த்திருக்கிறோம் ஆனால் பாட்டையாவில் ஒரு ஆணுக்கும் இன்னொரு ஆணுக்கும் போட்டி. இருவரையும் அனுபவம் மற்றும் அவசரம் என்று வேறுபடுத்திப்பார்க்க முடிகிறது. 


பறை இசையையும் ஆட்டத்தையும் கதையின் முக்கியப்பங்காகக் கையாண்டிருக்கிறார் அபி. ஒண்ணாம் அடி, இரண்டானடி என்று துல்லியமாக இசையையும், இசைப்பதற்குத் தேவையான கருவிகளையும், கருவிகளின் அமைப்பு அவற்றின் தேவை, ஓசையெழுப்ப உதவும் உபகரணங்களாக சிம்புக்குச்சி, உருட்டுக்குச்சி என்று மிக நுணுக்கமாகவும், அவை எந்த விதமான மரத்தில் அமைந்திருக்கவேண்டும் என்பது முதற்கொண்டு நுட்பமாகவும் கையாண்டிருக்கிறார். 


முத்துவீரனின் அனுபவம் குறைந்த தொடக்கமும், பின்னர் பல இடங்களுக்கு சென்று இசையைக் கற்றுவருவதும், தீவிர முயற்சியும் தொடர் பயிற்சியும், நிறைவாகப் பாராட்டத்தக்க நிகழ்வும், கற்றல் மற்றும் பயிற்சியினால் விளையும் பயன் என்ன என்பதனைக் கோடிட்டுக்காட்டுகிறது.


ஆட்டத்தையும் இசையையும் ஒளிப்படமாகப் பதிவு செய்வது எளிது ஆனால் அவற்றை எழுத்தில் வடிப்பது ஒரு சவால்.  அபி அந்தச் சவாலில் வென்றிருக்கிறார்.


பாட்டையாவின் நடனத் தொடக்கத்தை கோவில் தேர் கிளம்புவதையும் ஆட்டத்தின் நிறைவை தேர் நிலைக்கு வருவதாகவும் தொடர்நிலையாக உவமைப்படுத்தியிருப்பது அழகு.


செல்வி மற்றும் முத்துவீரனின் உரையாடலில்  காதலும் இருக்கிறது வீரமும் இருக்கிறது. ஆங்காங்கே கதை கொங்கு வழக்குச்சொற்களில் மணக்கிறது, உதாரணம் 'இட்டேரியில் ஆடுகள் மேய்ப்பது'.


வாழ்த்துகள் அபி சார், அடுத்தொரு கதையை வாசித்துவிட்டு மீண்டும் வருகிறேன்.


பாட்டையா நூல் அறிமுகம்-அசரப் அலி

 அன்புத்தோழன் அசரப் அலி Asraf Ali யின் பார்வையில் "பாட்டையா'' சிறுகதை தொகுப்பு குறித்து...

+++++++++


இலக்கிய வட்டத்தில் பொள்ளாச்சி அபி என்று அறியப்படும் அன்பிற்குரிய தோழர் அக்பர் அவர்கள் தனது முதல் படைப்பான ஆதலினால் காதலித்தேன், எங்கேயும் எப்போதும் தொடர்ந்து மூன்றாவது படைப்பாக  #பாட்டையா என்ற 'சிறுகதை தொகுப்பை படைத்துள்ளார்.


புத்தகத்தின் பெயரை தாங்கி நிற்கும் #பாட்டையாசிறுகதை ஒடுக்கப்பட்ட மக்களின் இசைக்கருவியான பறை குறித்தும், விசேஷ நாட்களில் திருவிழாக்களில், இல்லங்களில் இசைக்கப்படுகிற கருவியும் அந்த இசைக்கு ஏற்ப தங்கள் நளினமான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய நபர்களின் திறன் குறித்தும், பாட்டையா என்கிற ஒரு பாத்திரத்தின் மூலமாகவும், முத்து வீரன் என்ற பாத்திரத்தின் வழியாகவும் நம்முள் கடத்தி விடுகிறார்.

அதை படிக்கும்போது அந்த இசையோடு, அந்த ஆட்டத்தோடு நாமும் கலந்து விடுகிற நிலையை ஏற்படுத்துகிறது.


ஆண்கள் பெண்களை அடக்கி ஆள்கிற ஆணாதிக்க மனப்போக்குகள் குறித்தும், இஸ்லாத்தில் திருமணம் ஆகக்கூடிய பெண்களுக்கு மணமகன் சார்பில் கொடுக்கக்கூடிய மகற் குறித்தும் #சஹாபி என்ற சிறுகதை மூலம் விரிவாக பேசியிருக்கிறார்.


திருநங்கைகளாக,திருநம்பிகளாக நம் மத்தியில் வாழ்ந்து வரக்கூடிய மூன்றாம் பாலினத்தவர்களின் வலிகள், வேதனைகள், அவமானங்கள் குறித்து பேசக்கூடிய #ஒப்பனைக்காரன் சிறுகதை அப்படிப்பட்டவர்கள் வழிபாட்டுக்கு உரியவர்களாக மாறக்கூடிய சமுதாயப் போக்குகளையும் சுட்டிக்காட்டியுள்ளது. 


ஆணும்-பெண்ணும் நண்பர்களாய் இருப்பதை, திருமணத்திற்கு பின்பு நண்பர்களாக நீடிப்பதை இச்சமூகம் ஏற்றுக்கொள்வதில்லை. 

ஆனால் , ஆணும் - பெண்ணும் 40 ஆண்டுகளாக நண்பர்களாக நீடிப்பதை  தன் சொந்த வாழ்க்கை அனுபவத்தினுாடே அக்பர் பதிவு செய்திருந்த #மகிழம்பூ.


இன்றைய சூழலில்,  பெண்கள் அதிக அளவில் படித்து வேலைக்கு செல்லக்கூடிய நிலையில் வாழ்க்கை முறையில் ஏற்பட்டிருக்கக் கூடிய மாற்றங்கள், வெவ்வேறு மதங்களை பின்பற்றுகிற குடும்பங்களில் திருமணங்கள ஏற்படுத்துகிற தாக்கங்கள், ஆனாலும் உண்மைநிலை என்ன என்பது குறித்து #நெருப்புக்குதிசையில்லை என்ற கதை மூலம் வெளிப்படுத்துகிறார்.


நவீன உலகில் ஏற்பட்டு வரக்கூடிய விஞ்ஞான மாற்றங்கள் அதனால் விளையும் நன்மைகள் குறித்து, 

குறிப்பாக இன்றைய இளைஞர்கள் எதிர்கொள்ளக்கூடிய குழந்தையின்மை பிரச்சனையை மையப்படுத்தி, அதோடு போகிற போக்கில் சாதிய பெருமிதம், சாதிய வெறி, சாதிய பாகுபாடு பேசுகிறவர்கள் முகத்தில் ஓங்கி அறைந்தார் போல் சொல்லப்படுகிறது #வினைப்பயன் என்கின்ற சிறுகதை, 


வேறு வேறு பரிமாணத்தில் ஒவ்வொரு சிறுகதைக்கான கதைக்களத்தை அமைத்து இத்தொகுப்பை தோழர் பொள்ளாச்சி அபி  தந்துள்ளார். 


தோழர் பொள்ளாச்சி அபிக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.