21 அக்டோபர் 2014

சனம் –சிறுகதை- பொள்ளாச்சி அபி

சனம் –சிறுகதை- பொள்ளாச்சி அபி பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளரும், இயக்குனருமான பொங்குசாமி,தலையில் முக்காட்டைப் போட்டுக் கொண்டு,தனது இருக்கையில் குத்தவைத்து உட்கார்ந்து கொண்டிருந்தார்.உட்காரும் இடம் முதல் உச்சந்தலை வரை அவருக்கு வேர்த்துக் கொண்டிருந்தது வேறு பெரும் அவஸ்தையாக இருந்தது. தனது மேல் சட்டைப்பையில் இருந்த செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டாலும், எதிரில்,மேசையின் மீது இருந்த லேண்ட்லைன் போனை என்ன செய்வது..? என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார்.ரிசீவரை எடுத்துக் கீழே வைத்துவிடுவதைக் காட்டிலும்,அதன் இணைப்பு ஒயரைப் பிடுங்கிவிடலாமா..? ..லாமா…என்ன.. பிடுங்கியே விடலாம்..என்று தோன்றிய விநாடியில்,படக் கென்று, பிடுங்கி வீசினார்.மீண்டும் குத்தவைத்து உட்கார்ந்து கொண்டார். இந்தச் சனியன் பிடித்த,பந்தோஷ்சிவன் வேறு எங்கே போய்த் தொலைந்தான்.? பத்துமணிக்கு வருகிறேன் என்று சொன்னவன்,மணி பத்து இருபது ஆகியும் இன்னும் வந்து தொலைக்கவில்லையே..? தூத்தெறி..இவம் பேச்சையெல்லாம் நம்பி படம் எடுக்க ஒத்துகிட்டேன் பாரு..என்னை மொதல்லே ஜோட்டாலே அடிச்சுக்கணும்..! தமிழ்நாட்டு மக்களைப் பத்திக் கவலைப்படாமே,அவனோட ப்ரெண்டுன்னு ஒருத்தன் ‘தொல்லைப் பெரியாறு’ன்னு படம் எடுத்தப்பவே தமிழ்நாட்டுலே பெரிய பிரச்சினையாச்சு..! அதை நெனச்சுட்டாவது நான் மூடிகிட்டு இருந்துருக்கணும். ஹ{ம்..காசு,பணம்,துட்டு, மணி மணி..ன்னு நாக்கைத் தொங்கப்போட்டுகிட்டு,நாயா நாமளும்தானே அலைஞ்சோம்..அதுக்கு இப்ப நல்லா வேணும்..!’ பொங்கு சாமியின் மனசுக்குள்,சுயபரிசோதனை இப்போ பொங்கி பொங்கி வழிஞ்சது.பந்தோஷ் சிவன் இப்பவாவது வந்து தொலைச்சாப் பரவாயில்லையே..ன்னு அவரு வாசப்படியவே பாத்து,காத்துகிட்டுருக்காரு. நல்லவேளை,பந்தோஷ்சிவனோட இன்னோவா காரு,அப்படியிப்படின்னு ஆடிகிட்டு,பொங்குசாமியோட ஆபிசு டேக்டுக்குள்ளே நுழையறது தெரிஞ்சது.அட இதென்ன,போன மாசம்தான் வாங்குன புது இன்னோவா காருலே,முன்னாடிப் பக்கம் கண்ணாடியக் காணோம்.ஏகப்பட்ட ஒடுக்கு,பெயிண்டெல்லாம் போயி, வந்து நிக்குது. என்ன ஆச்சு..காருக்கும் ஏதாவது மறை கழண்டுபோய்,எங்காவது குப்புறக் கவுந்துபோச்சா..? காருக்குள்ளேருந்து,இறங்குன பந்தோஷ் சிவன்,கதவைக்கூட சாத்தாம,பொங்குசாமியப் பாத்து லொங்கு,லொங்குன்னு ஓடிவந்தாரு.வந்தவேகத்துலே நிக்க முடியாம,அவருமேலேயே சாய,இதை எதிர்பாக்காத பொங்குசாமியும்,பேலன்ஸ் இல்லாம தடுமாற,ரெண்டுபேரும் சேந்து தரையிலே உருண்டாங்க..! “யோவ்..என்னாய்யா..நீ,சூட்டிங் ஸ்பாட்டுலேதான் நிதானமில்லாம கண்டமாதிரி நடந்துக்குவே..இப்பவும் உனக்கென்னய்யா கேடு..?” பொங்குசாமி கோபத்தில் பொங்கினார். “அய்யய்யோ..நீங்க ஒடனே ஆபிசைவுட்டுக் கிளம்புங்க..நான் வர்ற வழியிலே கொஞ்சம் பொம்பளைங்ளும்,ஆம்பளைங்களும்,கையிலே சீமாருகளோட கூட்டமா எதிர்லே வந்தாங்க..! சரி எலக்சன் டைம் ஆச்சே..ஆம்ஆத்மிக்கு ஓட்டுக் கேக்றாங்கன்னு நெனச்சு,தெரியாம பக்கத்திலே போய் ஸ்லோ பண்ணேன்.என்னை குறுக்காட்டி நிறுத்தி,வெளியே இழுத்துப்போட்டு, மாத்திமாத்திப் போட்டாங்க..! எப்படியோ தப்பிச்சேன் பொழச்சேன்னு..அந்தக் களேபரத்திலேருந்து தப்பிச்சு ஓடிவந்துருக்கேன். அவங்களும் இப்ப நம்மளைத்தான் தொரத்திகிட்டு வந்துட்டுருக்காங்க..! உடனடியா..நாம இங்கேருந்து எஸ்கேப் ஆகலைன்னா..நம்மகதி என்னாகும்னே தெரியலைங்க..! பெரிய இனக்கலவரம் மாதிரி மக்கள் நம்மளை படுகொலை பண்ணிப் போடுவாங்க போல..!” நாக்கு வெளியே தள்ள,பந்தோஷ்சிவன் பதட்டத்துடன் சொல்லச் சொல்ல,பொங்குசாமிக்கும் பதட்டம் கூடிப்போனது. ‘காலையிலேருந்து போன் வழியா கண்டவனும் கூப்பிட்டு,பொங்குசாமி முதற்கொண்டு, அவரோட வம்சாவளி அத்தனைபேரையும் திட்டித் தீத்தானுங்க.., இப்ப இதுவேறயா..?’ “யோவ்..சனியன் புடிச்சவனே..நீ இனக்கலவரத்துக்கும்,இனப்படுகொலைக்கும் வித்தியாசம் தெரியாம படம் எடுத்துத் தொலைச்சதுனாலேத்தான்யா நமக்கு இப்ப இவ்வளவு தொல்லை.உன்னாலே நானும் கெடந்து அல்லாடுறேன்!” ஓகோ..இப்ப மொத்த தப்புக்கும் நான்தான் காரணமுன்னு சொல்லவர்றீங்களா..? நீயா அந்த சினிமாவைப் பண்ணுனா,சரியா வராது..நான் தயாரிச்சதா இருக்கட்டும்.அப்பத்தான் தமிழ்நாட்டு ஜனங்க நம்புவாங்கன்னு சொல்லி,நீ;ங்கதானே மொத்தப்பணத்தையும் வாங்குனீங்க..? நான் வாங்குனா என்னய்யா..? என்னோட ஷேர்போக மிச்சமெல்லாம் உனக்குத்தானே குடுத்தேன்..? “ஊம்..கிழிச்சீங்க..எவ்வளவு வாங்குனீங்க..எவ்வளவு குடுத்தீங்கன்னு..எனக்கும் தெரியும்..! அதுவுமில்லாம வேற மொழிலே இந்தப்படத்தை எடுத்துட்டு,தமிழிலே டப்பிங் பண்ணுனதா சொல்லிடலாம்னு சொன்னப்பவும் வேண்டாம்னு சொல்லிட்டு, இப்ப சிக்கல் வந்தபின்னாடி,எல்லாத்துக்கும் காரணம் நான்தான்னு நீங்க மட்டும் தப்பிக்கப் பாக்காதீங்க..? அதுவுமில்லாம நான் ஏதோ வடஇந்தியப் படம் மாதிரி “ஜனம்”;னு பேர் வெக்கலாம்னு சொன்னேன்.நீங்கதான் பெரிய இவரைப் போல தமிழ்லே பேர் இருக்கட்டும்..ஒரு வேளை வரிவிலக்கு கிடைச்சா அந்தப்பணத்தையும் லாபக்கணக்குலே சேத்துக்கலாம்னு பிளான் போட்டு.., “சனம்” னு சுத்தத் தமிழ்லே வெச்சீங்க..இப்ப சனமெல்லாம் சேந்து ஒதைக்க வரும்போது..என்ன பண்றது,எங்க ஓடுறுதுன்னனு தெரியாம முழிக்க வேண்டியதிருக்கு..” பந்தோஷ் சிவன்,ஒரு அப்ரூவரைப் போல, தன் பங்குக்கு குரலை உயர்த்திப் பேச, பொங்குசாமி ஒரு அக்யூஸ்ட்டைப் போல திருதிருவென விழித்தார். “சரி..,இப்ப என்னய்யா செய்யுறது..?” “மொதல்லே,ஒரு லுங்கிய கட்டிகிட்டு வாங்க.. அப்படியே எனக்கும் ஒரு லுங்கி எடுத்துட்டு வாங்க..எங்கியாவது போய் எலக்சன் மீட்டிங்லே கூட்டத்தோட கூட்டமாய் போய் உக்காந்துக்குவோம்.மதிய சாப்பாடும்,குவாட்டரும் குடுத்துருவாங்க..எலக்சன் பிரச்சாரம் முடியறவரைக்கும் நமக்கும் கவலையில்லே.எஸ்கேப் ஆகறதுக்கும் நமக்கு பெரிய செலவுன்னு இருக்காது.” யோவ்..”சனம்”; படமெடுக்க நமக்கு பணம் குடுத்தவனோட ஆளுக எங்கியாவது அடையாளம் கண்டுபுடிச்சுட்டா..?” “என்னாங்க நீங்க பெரிய டைரக்டரு,தயாரிப்பாளருன்னு..விளம்பரம் பண்ணி வெச்சுகிட்டா மட்டும் போதுமா..எங்கே எப்படி நடந்துக்கணும்னு தெரியாதா..? யாராவது அடையாளம் கண்டுபிடிச்சுட்டா..நாம அப்ப எந்தக் கட்சி மீட்டிங்லே இருக்கறமோ..அந்த இடத்துக்கு தகுந்தமாதிரி,அம்மா வாழ்க..அய்யா வாழ்க..! ன்னு,சும்மா முழங்கிட்டோம்னா போதாது. அப்புறம் அது அவங்க கட்சிக்கும்,எதிர்க்கட்சிக்குமான பிரச்சினையாப் போயிரும்லே..!” திட்டம் பொங்குசாமிக்கும் ஏற்புடையாதாகவே இருந்தது.என்ன இருந்தாலும் கப்பக் கிழங்கும் கஞ்சியும் நல்லாத்தான் வேலைசெய்யுது.., எண்ணமிட்டபடியே லுங்கியை மாத்திக் கொண்ட பொங்குசாமி,யோவ் உனக்கு லுங்கியா,முண்டா..?” ஏதோவொரு எழவைக் கொண்டுவாங்க..எஸ்கேப் ஆகறதுக்கு எதுவாயிருந்தாத்தான் என்னா..? அவர்கள் கிளம்பி விட்டனர். இது சினிமாக்கரன் கதைங்கிறதுனாலே,இதுலே ஒரு பிளாஷ்பேக் இல்லேன்னா எப்படி..? சில மாதங்களுக்கு முன்பாக,தமிழகத்தின் பிரபல அரசியல் தலைவரின் எடுபிடியோடு,பார்ப்பதற்கு தமிழனைப் போலவே இருந்த அவர்,தன்னை ஒரு கர்னல் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.தான் ஒரு சினிமா தயாரிக்கவிருப்பதாகவும், அதனை நீங்கள்தான் எடுக்கவேண்டும்” என்று அவர்களிடம் வந்தார் ஒருவர். கதை,திரைக்கதை,இசை,இன்னுமுள்ள லொட்டு லொசுக்கு எல்லாம் சேர்த்து, மொத்த சினிமாவிற்கான தயாரிப்பு செலவு குறித்து பந்தோஷ்சிவனும்,பொங்குசாமியும் சில கோடிகளில் கொஞ்சம் அதிகமாகவே கணக்கு சொல்லி,தங்களுக்கு அட்வான்சாக இவ்வளவு வேண்டும் என்றும் சொன்னார்கள். ஒருவேளை அவர் சம்மதித்து விட்டால்,உபரியாக நிறைய லாபம் கிடைக்கும் என்பதுதான் பொங்குசாமியின் கணக்கு.தயாரிப்பாளர் அல்லவா..? அந்த மனிதர் கூலாகச் சொன்னார்.ப்பூ..இவ்வளவுதானா..? நீங்கள் சொன்னதைவிட மூன்று மடங்கு தருகிறேன்.” பொங்குசாமியும்,பந்தோஷ{ம் வாய் பிளந்தனர். “ஆனால்..,கதை நான் சொல்வது போலத்தான் எடுக்கவேண்டும்..” மூன்று மடங்கு பணம் தருகிறேன்..என்பவரின் கதை எப்படியிருந்தால் என்ன..? எப்படியும் படத்தை உருவமாக்கிவிடலாம்..! பொங்குசாமிக்கு நிலை கொள்ளவில்லை. பந்தோஷ்சிவனின் முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவமாடியது. “சரி..உங்கள் கதையைச் சொல்லுங்கள்..” “கருத்தை மட்டும்தான் நான் சொல்லுவேன்.அதற்கேற்றாற்போல கதையை நீங்கள் செய்து கொள்ளவேண்டும்.” “தாராளமாய்..” கதையே இல்லாமல் எத்தனை படத்தை எடுத்திருக்கிறோம்.? நமக்கு இதெல்லாம் பெரியவேலையா..? கர்னல் கருத்து சொல்லத் தொடங்கினார்.எங்கள் நாட்டில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்த விசாரணை வேண்டும் என்று அமெரிக்கா உட்பட சில நாடுகள்,ஐ.நா.சபையில், இன்னும் சில மாதங்களில் தீர்மானம் கொண்டுவர இருக்கின்றது.தேசநலன்தான் முக்கியம் என்ற ரீதியில்,உங்கள் நாடு அந்தத் தீர்;மானத்திற்கு ஆதரவு தெரிவிக்காமல்,புறக்கணிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால்,எங்களுக்கு தமிழகம் குறித்துத்தான் கவலையாக இருக்கிறது.ஏற்கனவே மாணவர்கள் நடத்திய போராட்டம்,உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு அல்லாமல்,எங்களுக்கும் பெரும் நெருக்கடியைக் கொடுத்தது.அந்த நிலை இப்போதும் வந்துவிடக்கூடாது. அதனால்,எங்கள் நாட்டில் நடைபெற்ற படுகொலைகள் எல்லாம்,சாதாரணமாக ஒரு போரில் நடப்பதுதான் என்பதுபோலவும்,இருந்தாலும் போரின்போது,இராணுவ வீரர்கள் சிலர்,தங்கள் சொந்த விருப்பு வெறுப்பின் காரணமாக,நடைமுறையை மீறியதற்காக,எங்கள் நாட்டு அதிபர் சீனாக்கூஜா பக்ஷே,வெளிப்படையான விசாரணைகள் நடத்தி,இராணுவ சட்டங்களின் படி,அவர்களுக்கு தண்டணை அளித்துவருவதாகவும் இருப்பது,இந்தக் கதையின் முக்கியஅம்சமாக இருக்கவேண்டும்.” “உங்கள் நாட்டில்,அப்படியெல்லாம் தண்டணை குடுத்தீங்களா..?” திடீரென இடையில் பொங்குசாமி பொங்கினார். கர்னல்,அமர்த்தலாகச் சிரித்தார்.அதன் அர்த்தத்தை பந்தோஷ்சிவன்தான் நன்கு புரிந்துகொண்டார். “ இல்லாததை இருப்பது மாதிரி எடுக்கறதுதானே சினிமா..? நம்ம குஜயைப் போட்டு “சலைவா..”ன்னு ஒரு படம் எடுத்தோமில்லே..?” வெரிகுட்..ஐ லைக் யூ..” என்றபடி பந்தோஷ்சிவனின் தோளில் கர்னல் தட்டிக் கொடுக்க,பந்தோஷ் சிவனுக்கு,அதுவரை மூத்திரம் போகுமிடத்தில் இருந்த எரிச்சல் நின்றுபோய் குளிர்ந்தது. கர்னல் தொடர்ந்தார்.எங்கள் நாட்டில் நடைபெற்ற கொலைகள்,கற்பழிப்புகள், ஆக்ரமிப்புகள், அடையாளமழித்தல் எல்லாமே சாதாரண இனக்கலவரம்தான். தமிழர்களும்,மற்ற நாடுகளும் சொல்வதுபோல இனப்படுகொலைகள் அல்லன்னு இந்தப்படத்துலே நீங்க தெளிவாக்கணும்..!” “இப்படியெல்லாம் படம் எடுத்தா..அதெல்லாம் உண்மையாயிடுமா..?” பொங்குசாமிதான் குறுக்கிட்டார். கர்னல் இப்போதும் அர்த்த புஷ்டியுடன் பந்தோஷ் சிவனைப்பார்க்க..அவர் பொங்குசாமியை முறைத்துக் கொண்டிருப்பது தெரிந்தது.’கூமுட்டையாட்டம் கேள்வியை இந்த ஆள் கேட்டுகிட்டு இருந்தான்னா,எங்கே புராஜக்ட் கையை விட்டுப் போயிடுமோன்னு..’ அவர் கவலை அவருக்கு. கர்னல் அதனைப் புரிந்துகொண்டு,பந்தோஷ் சிவனின் தோளில் ஆதரவாய் கையைப் போட்டுக் கொண்டார்.நடிக்க வந்த பொண்ணு..,கேக்காமயே தோளைக் கடிச்ச மாதிரி,பந்தோஷ்சிவனுக்கு “ஜிவ்” வென்றது. கர்னல் மீண்டும் தொடர்ந்தார். உண்மையாகுதோ பொய்யாகுதோ..அதெல்லாம் எனக்குத் தெரியாது.நீங்க எடுக்கற படம் கரெக்டா பார்லிமெண்ட் எலக்சன் பிரச்சாரம் ஆரம்பிக்குற சமயத்திலே வெளியாகணும்.இந்தப்படம் மக்கள் மத்தியிலே எங்களுக்கு ஆதரவா ஒரு கருத்தை உருவாக்கிடுச்சுன்னா..கட்சிக்காரங்களும் அதிகமா இந்தப் பிரச்சினையைப் பத்தி பேசமாட்டாங்க..எங்க நாட்டுக்கு வர்ற முதலீடுகளும் கொறயாமே வந்துட்டேயிருக்கும்.அதுக்கு மேலே உங்ககிட்டே இதைப்பத்தி பேசறதுக்கு ஒண்ணுமில்லே..” கர்னல் தன் பேச்சை முடித்துக் கொண்டார். அப்போதுதான் உள்ளே வந்த அசிஸ்டென்ட் டைரக்டரு ஒருத்தர், கர்னலையும், கைத்தடியையும் பார்த்துக் கொண்டே வந்து,பொங்குசாமியின் காதைக் கடித்தார்.அண்ணே..இவங்க நேத்து அந்த மனாலி பட டைரக்டரைப் பாக்கப் போயிருந்தாங்களாம்.அவரு வெரட்டியடிக்காத குறையாம்..னு ரகசியம் சொல்ல.., “அதைப்பத்தியெல்லாம் நமக்கு இப்ப ஆராய்ச்சி தேவையாடா..போ..போய்.. குடிக்கறதுக்கு ஏதாவது வாங்கிட்டு வா..”ன்னு அவசரகதியிலே தொரத்திட்டாரு பொங்குசாமி. அதுக்கப்புறம்..கர்னல் சொன்னபடியே படம் எடுத்ததும்,டைமுக்கு வெளியானதும் எல்லாமே திட்டமிட்டது போலத்தான் நடந்தது. ஆனா,இவங்க திட்டத்துலே முக்கியமான அம்சமா,மக்களோட உணர்வை கணக்கிலே எடுக்காம,அவங்களையெல்லாம் மாக்கானுங்கன்னு நெனச்சுகிட்டதுதான் ரொம்ப அபத்தமா முடிஞ்சது. -அப்புறம் இடைச்செருகலான,முக்கியமான ஒரு தகவல்,தமிழ்நாட்டுலேயிருக்குற வீடுகள்லே,சட்டிபானை இருக்கோ இல்லையோ..ஒரு சீமாரு கண்டிப்பா இருக்குங்கறதையும்,அதை தேவைக்கேத்த மாதிரி உபயோகப் படுத்துவோம்கிறதையும் சிலபேரு ஞாபகம் வெச்சுக்கோணும்..!- “அட சினிமாத் தந்தைகளே..உங்க பணத்தைப் போட்டு,ஏதோவொரு கதைன்னு சொல்லி,எதோவொரு எழவை நீங்க எடுத்துக் காமிச்சபோதெல்லாம், பொழுது போகணுமின்னு நாங்க வந்து பாத்தோம்..! விவாதிக்கத் தரமில்லாத படத்தையெல்லாம், இதையெல்லாம் விவாதிச்சு,நம்ம நேரத்தை வேஸ்ட் பண்ணிக்கணுமா..ன்னுதான் பேசாம இருந்தோம்.அதுக்காக இந்த “இனம்”..சாரி..”சனம்” சும்மா.. எப்பவுமே அமைதியாத்தான் இருப்போம்னு நீங்க கற்பனை பண்ணிகிட்டா எப்படிடா..? அந்த நெனப்புக்குத்தான் இப்ப வெச்சோம் வேட்டு..! அந்தப் படம் திருட்டு விசிடியா எடுக்கக் கூட, நேரமில்லாம தியேட்டரைவுட்டு தூக்கிட்டோம்லே..! ஜாக்கிரதை..! --------------- வணக்கம்..இந்தக் கற்பனைக் கதையை..நீங்க சமீபத்துலே ரிலீசான..?- இனம் படத்தோட போட்டுக் குழப்பிகிட்டீங்கன்னா..அதுக்கு நான் பொறுப்பில்லேன்னு சொல்லமாட்டேன் .. தாராளமாய் குழப்பிக்கீங்க..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக