01 ஜூன் 2012

அப்போது சிந்திப்போம்..!

நானும் நீயும்
ஒரே தமிழைப் படித்தோம்
ஒன்றாய் எழுதிப்பழகினோம்.!

உன்மீது எனக்கும்
என்மீது உனக்கும்
அளவற்ற அன்பு இருந்தது
அதை நானும் அறிவேன்.!

நாளடைவில்..
தமிழை நீ காதலித்தாய்.
ஆனாலது எனக்குத்தாய்.

தமிழ் ஒரு ஆயுதம்..
அதை வைத்திருப்பவன்
கைபோலவே உருமாறும்.

உன்கையிலது..
சிருங்காரமென்றால்
இங்கே அது சீற்றம்..

எனக்கு
கடவுள் நம்பிக்கையில்லை
அதனால் உன்பிரச்சாரத்துக்கு
கொடி பிடிக்கவில்லை.
காதலுக்கு நான் எதிரியுமில்லை.
எனக்கு
காதல்மட்டுமே பெரிதுமில்லை..!

தமிழால்தான் நீயும் நானும்
சிந்திக்கிறோம்..ஆனால்
உன் சிந்தனை வேறு
என் சிந்தனை வேறு

நட்பென்பது பழக்கத்தால் வருவது
அதனால் நிலை பெறுவது..
நட்புநீடிக்க அன்பு மட்டுமே
போதாது..!
இலட்சிய ஒற்றுமையும் வேண்டும்..!

இணைந்த புள்ளியிலிருந்து,நாம்
இருதுருவங்களாய் மாறியது
சதியல்ல அது
இயக்கவியல் விதி..!

உனது பாதைக்கு நானும்
எனது பாதைக்கு நீயும்
எப்போதாவது திரும்பினால்
எங்கேனும் ஒரு புள்ளியில்
சந்திப்போம்..! அப்போது
மேற்கொண்டு சிந்திப்போம்.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக