01 ஜூன் 2012

முட்டாளாகிப் போனேன்..!

அவன் பறம்பு நாட்டின் மன்னன்..
மலையும் காடும் அவனது நாடு
அவனது ஆட்சியின்கீழ் சிலநூறுவீடு
விலங்கும் மனிதனும் சேர்ந்து வாழ்ந்த
அழகிய இயற்கை இணைந்த வீடு..!

சேர்த்து வைக்க பெரும் பொருளில்லை
சேர்க்க வேண்டிய தேவையும் இல்லை.
சாலையில் செல்லும் வழியில் கிடந்த
முல்லைக் கொடிக்கு காலாய் தேரை
நிறுத்திச் சென்றான் மன்னன் பாரி.!

வள்ளல் பாரியென்றே வையம் வாழ்த்திட
வாழ்ந்தான்,இன்னும் வாழ்கிறான் மனதில்..
செல்லும் வழியில் கண்டதெற் கெல்லாம்
செங்கோல் தாழ்த்தி செய்தான் உதவி..!

வரலாறென அதனையும் நாம் படித்தோம்
வாழ்ந்தால் இப்படியென உறுதியும் பூண்டோம்.
மன்னன் வாழ்வை மனதில் இருத்தி
மழலைக்கெல்லாம் சொல்லியும் கொடுத்தோம்.!

மாநிலம் போற்றும் மன்னராகவே இருந்தாலும்
இருப்பதை எல்லாம் அடுத்தவர்க்கு கொடுத்த
மா மனிதர்கள் வாழ்ந்த நாட்டில்
மட அதிபதிகளுக்கு எதற்கப்பா சொத்து.?

முற்றும் துறந்த முனிவர்க் கெதற்கு
தங்க சிம்மாசனம், வைர கிரீடம்.?
பாரியென்று நீ சொன்னவரே முனிவர்
நீ முனிவரென்று சொன்னவர் மன்னர்.?

வரலாறு தெரியாத வாத்தியாராய் நினைத்து
மாற்றிச் சொல்லி விட்டாயே அப்பாவென
மழலைகள் பேசும் கேலியில் நான்
முழி பிதுங்கி முட்டாளாகிப் போனேன்..!
நான் மட்டுமல்ல என எப்படி சொல்வது.?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக