01 ஜூன் 2012

கடவுளுக்குத் தெரியுமா.?

எப்படித்தொடங்குகிறது..?
எங்கிருந்து தொடங்குகிறது.?
எல்லாம் ‘அவர்களுக்குத்’ தெரியும்..!
ஆனால்..
எதுவுமே தெரியாத அப்பாவிகள்
உயிர்பிழைக்க தெருவில்
ஓடிக்கொண்டிருக்கின்றனர்..

முன்பின் பார்த்தறியாத
முன்பகை எதுவுமில்லாத
சிக்கிய ஒருவனை நோக்கி
உயர்ந்தன ஆயுதங்கள்..

அவன் கைகூப்பியபடி
உயிருக்கு மன்றாடினான்..
“மதஅடையாளங்கள்
மட்டுமல்ல
மதம்கூட எனக்கு வேண்டாம்.
நீங்கள்தான் என் கடவுள்..
உயிர்ப்பிச்சை தாருங்கள்..!”

“நாங்கள் உன் மதத்துக் கடவுளல்ல”
உன்மத்தமாய் உயர்ந்த
ஆயுதங்களில் படிந்த இரத்தத்துடன்
கடவுள்கள் திரும்பிச் செல்கின்றனர்..

கடவுளரால்
கொல்லப்பட்டதை எண்ணியபடி
இறக்கிறான் அவன்..
இனி அவன் செல்லுமிடம்
சொர்க்கமா நரகமா..?
அது எதுவென்று
கடவுளுக்குத் தெரியுமா.?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக