02 ஏப்ரல் 2012

கண்டுபிடித்திருக்கிறோம்.

எத்தனை காலமாக சிந்தித்தாய்
என்னென்னவோ கண்டுபிடித்தாய்
மாற்றங்களைக் கொண்டுவந்தாய்
மகத்தான சாதனைகள் தந்தாய்

கம்பியில்லா தந்தி தந்தாய்
கம்பியில்லா தொலைபேசி தந்தாய்
ஆனால்..
மின்சாரமில்லாத கம்பி தந்தாயா.?
அதைத் கண்டுபிடித்திருக்கிறோம்.

இதனால் சில நன்மைகளும்
நடந்திருக்கின்றன..
சொன்னால் ஆச்சரியப்படுவாய்.
தொலைக்காட்சி தொல்லையின்றி,
பக்கத்துவீடுகளில் இப்போது
யார் இருக்கிறார்கள்
என்ன செய்கிறார்கள்
என்று பேசிக்கொள்ள முடிகிறது.!

இதோ பார் நிலா என்று
குழந்தைக்கு சோறூட்டமுடிகிறது.
மறந்துபோன கிராமியவிளையாட்டுகள்
மாலைநேர வீதிகளில்
குழந்தைகளால்
மறுஉருவாக்கம் பெறுகின்றன.

ஒரு விளக்கைச் சுற்றி அமர்ந்து
குடும்ப உறுப்பினர்களெல்லாம்
ஒன்றாய் சாப்பிடக்கூட முடிகிறது.
உறவுகள் புதுப்பிக்கப்படுகிறது.

மின்விசிறியில்,மின் குளிரில்
உறங்கிப்பழகிய வீட்டுமனிதர்கள்
உறக்கமின்றி விழித்திருப்பதால்
திருட்டுபயமும் அறவேயில்லை.!

ஆகா..எல்லாவற்றிலும்
ஏதொவொரு நன்மையிருக்கும்
என்பது இதுதானோ..?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக