21 டிசம்பர் 2011

பெரியாறும்-பெரியாரும்.! - பொள்ளாச்சி அபி

இலங்கையிலிருந்து..
அகதிகளாய்..
இந்தியாவிற்குத் திரும்பிய
நம் ரத்த சொந்தங்கள்
எடுத்துவைத்த ஒவ்வொருஅடியிலும்
தாம்பட்ட துன்பத்தை
பகிர்ந்தனர்.
இளைஞர்கள் கொல்லப்பட்டதும்,
யுவதிகள் கற்பழிக்கப்பட்டதும்
குழந்தைகள்,முதியவர்கள்
என வேறுபாடின்றி..
இனம் அழிக்கும் போரின்
கொடூர அரசியலின்
ரத்தம் தெறித்த பக்கங்களை..!

இதோடு மட்டும் ஓயவில்லை.

மலேசியாவிலிருந்து..
ஆஸ்திரேலியாவிலிருந்து,
படிப்பதற்கும்,பிழைப்பதற்கும்
பட்டதுன்பங்கள் தாளாமல்
இந்தியாவிற்கு திரும்பிய
நம் ரத்த சொந்தங்கள்..,
எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும்
தாம்பட்ட துன்பத்தை
பகிர்ந்தனர்.
வெள்ளையன்,கறுப்பன்..என
பாகுபாடு காட்டி,
நம்நாட்டு இளைஞர்களுக்கு
கால்விலங்கிட்ட
நிறவெறி அரசியலின்
ரத்தம் தெறித்த பக்கங்களை..!

குடியரசுத் தலைவராக
இருந்தால் மட்டுமென்ன..?
தீவிரவாத அச்சுறுத்தலை
காரணம் காட்டி..
சோதனைகள் நடத்தியதும்
மன்னிப்புக்கேட்டதுமான
சந்தர்ப்பவாத அரசியலையும்
நாம் சந்தித்தோம்..!.

அடபோகட்டும்..இவையெல்லாம்
அந்நிய நாடுகள்..!-ஆனால்,
அருகாமையிலிருந்தும்-
எங்களை அந்நியப்படுத்துகிறாயே.
கேரளத்து சகோதரா..!
நீ இந்தியனில்லையா..?

முல்லைக்கு தேர் கொடுத்த
வரலாறு எங்களுக்குண்டு..!
முல்லைப் பெரியாறை மறுத்து
களங்கப்படாதே..!
அங்கு வரும் பக்தர்களை
அடித்து,உதைக்கவும்..
எமது பெண்களின் துகிலுரிக்கவும்
துணிந்தாயாமே..?

உனது தாயும்,சகோதரியும்
இன்று மேல்துண்டுபோட்டு
மானம் காத்துக்கொள்ளவும்,
நாத்திகம் பேசினாலும்
உனது ஆத்திக உரிமையை
மீட்டுக் கொடுத்ததும்..,எமது
ஈரோட்டுப் பெரியார்தான்
என்பதை மறந்தாயா..?

நீ உனது எல்லைக்குள்
கேரளத்துக்காரனாயிரு..!
எல்லையில்லா அன்பையும்
ஆதரவையும் வழங்குவதில்
நீ இந்தியனாயிரு..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக