29 டிசம்பர் 2011

மரியாவின் மகன்..!




“நிறுத்துங்கள்..!” அவரின் கம்பீரக்குரலுக்கு கட்டுப்பட்ட கூட்டம்,அப்படியே உறைந்து நின்றது.கைகளில் இருந்த கற்களும்,குப்பைகளும்,சிறு தடிகளும் அப்படியே உறைந்து நின்றன.

அவர் குரல் கொடுத்த இடத்திலிருந்து.மெதுவாக நடந்து மக்கள் கூட்டத்தை நோக்கி வந்தார்.மந்திரத்திற்கு கட்டுப்பட்டவர்களைப் போல கூட்டம் இரண்டாகப் பிளந்து அவருக்கு வழிவிட்டது. விலகிய கூட்டத்தின் வழியே நடந்து மையத்திற்கு வந்தவர்,அப்போதுதான் பார்த்தார் அவளை..,கண்ணீர் வழியும் கண்களில் மிரட்சியுடன்,கன்னத்தில் அறைபட்ட சிவப்புடன்,கூட்டத்தின் நடுவே கூனிக்குறுகி அமர்ந்திருந்தாள் அந்த இளம்பெண்.

“யார் இவள்..? எதற்காக அனைவரும் ஒன்றுகூடி அடிக்கிறீர்கள்.?”

“இவள் இப்பகுதியில் விபச்சராம் செய்துவருவதால்,இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை கெட்டுப்போகிறார்கள்.” என்று நடுத்தர வயதுடைய ஒருவன் கூறினான்.
“அப்படியா..? என்று ஆச்சரியத்துடன் வினவிய அவர்,அந்தப் பெண்ணைச் சுற்றிலும் திரண்டு நின்றிருந்த அனைவரையும் பார்த்தார்.
சொல்லப்போகும் பதிலை எதிர்பார்த்து,சிலர் அவரின் முகத்தைப் பார்த்திருந்தபோதும், பலபேர்,அடிபட்ட பெண்ணின் கிழிந்த ஆடைகள் வழியே தெரிந்த அங்கங்களை பார்த்துக் கொண்டிருந்ததில் அவர்களின் கண்களில் வழிந்த காமமும்,எண்ணங்களிலிருந்த வக்கிரமும் தெளிவாகவே தெரிந்தது. மேலும் சிலரோ ஒரு உயிர் தங்கள் கண்முன்பாகவே பறிக்கப்படும் அரிதான காட்சியை,ரசித்து திருப்தி பட்டுக் கொள்வதற்காகக் கூடியிருந்தனர்.

“சரி,இப்போது என்ன செய்வதாக உத்தேசம்..?”

“இவளை இப்படியே விட்டால்,மிக அருமையான வழிபாட்டுத்தலம் அமைந்த மலைப்பகுதியான இந்த இடமே,நாசக்கேடாகும்.அதனால் இவளை கல்லாலேயே அடித்துக் கொல்லப்போகிறோம்.” கூட்டத்திலிருந்த அந்த மதகுருமார்களில் ஒருவர் ஆவேசத்துடன் கூறினார்.அவர் சொன்னதற்கு ஆதரவாய் கூட்டமும் ஆரவாரித்தது.
இதனைக்கேட்ட அந்தப் பெண்ணின் கண்களில்,கிலி தெரிந்தது.மரணபயம் அறைந்ததில் அவளின் முகம் வெளுத்துவிட்டது.உயிர் பிழைக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால்,இங்கிருந்து தப்பிவிடலாமே..என்ற தவிப்பும்,அவஸ்தையுமாக அவளுக்குள் ஒரு போராட்டமே நடந்து கொண்டிருந்தது.

‘அனைவரும் மதிக்கும் வகையில் தோற்றம் கொண்ட இவர் என்ன சொல்லப்போகிறாரோ..?.இவர் சொல்லும் ஒரு வார்த்தையை வைத்துத்தான்
தான் உயிர் பிழைப்பதும்,உயிர் இழப்பதும் நடக்கப்போகிறது..,’அந்தப் பெண் கடைசி சந்தர்ப்பமாக,கருணையை எதிர்பார்த்து,அவரின் கண்களைப் பார்த்தாள்.

ஆனால் அவரைச் சுற்றி நின்று கொண்டிருந்த கூட்டமோ,”சீக்கிரம் உங்கள் பதிலைச் சொல்லுங்கள்.”
“இங்கே இதுபோன்ற குற்றத்திற்கு,கல்லால் அடித்துக் கொல்வதுதான் சிறந்த தண்டணை.”
“உங்களுக்கு முன்பு இருந்தவர்களும் இதையேதான் தீர்ப்பாகக் கூறியுள்ளனர்..”

அந்தப் பெண்ணைக் கொல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று அவரை வற்புறுத்துவதுபோல, கூட்டத்தின் மனப்போக்கு இருப்பதும் அவருக்குப் புரிந்துவிட்டது.’நாட்டில் மனிதர்களுக்கு இருக்கவேண்டிய மன்னிக்கும் குணம் எங்கே போயிற்று..?’ அபலைகள் சிக்கிவிட்டால் அவர்களை தங்கள் இரையாக்கத் துடிப்பதும்,நிலைமை மீறினால் கொன்று விடுவதும்.. இதுமட்டும்தான் அபலைகளுக்கான விடுதலையா..?,வேறு வழியே இல்லையா..? அவருக்கு மிகுந்த வேதனையாக இருந்தது.
‘ இனி தாமதிக்க முடியாது,தாமதிக்கும் ஒவ்வொரு கணமும்,கூட்டத்தின் ஆத்திரம் அதிகமாகிவிடலாம்.’ என்று முடிவு செய்துகொண்ட அவர்,மிகவும் தீர்க்கமான தனது குரலில்,ஆரவாரத்துடன் கூடியிருந்த கூட்டத்தை நோக்கிக் கூறினார். “ பிறந்ததிலிருந்து,தங்கள் மனம் அறிய ஒரு பாவமும் செய்யாதவர் இந்தக் கூட்டத்தில் எவரோ..அவர் இந்தப் பெண்ணின் மீது முதல் தாக்குதல் தொடுக்கட்டும். கல் எறியட்டும்..”என்று கூறியபடி,கூட்டம் முடிவெடுக்க அவகாசம் கொடுப்பது போல,தனது தலையைக் குனிந்து கொண்டார்.

சில மணித்துளிகள் கடந்து அவர் நிமிர்ந்தபோது,அங்கிருந்த கூட்டத்தில் பெண்களைத் தவிர ஆண்கள் அனைவரும் சென்றிருந்தனர்.மனிதக் கூட்டத்தின் மனப்போக்கை அறிந்திருந்த அவர்,தனது தீர்ப்பு ஏற்படுத்திய மகிழ்ச்சியில் அப்பகுதியிலிருந்து,திரும்பிச் சென்றார்.
மனிதர்கள் செய்யும் பாவங்களிலிருந்து,மன்னிப்பு வழங்கவும்,மனம் திருந்தவும் செய்யவேண்டிய வேலைகள் அவருக்கு இன்னும் நிறைய இருக்கிறது. மிக எளிய ஆடைகள் அணிந்திருந்தாலும்,கம்பீரமாக அவ்விடத்திலிருந்து நகர்ந்து செல்லும் அந்த மனிதரைப் பார்த்து,இவர்தான் “ மரியாவின் புதல்வர் யேசு ” என்று பெண்கள் கிசுகிசுத்துக் கொண்டனர்.
இந்த உலகத்திற்கு புதியமாற்றங்களைக் கொண்டுவரும் ஒரு புரட்சிக்காரனாக, அவரது பயணம் மீண்டும் தொடர்ந்தது.

புதிய ஏற்பாடு-யோவான்-அதிகாரம.8.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக