21 டிசம்பர் 2011

இப்போதாவது புரியுமா..?

கடலினை ஆவியாக்கி
திரளுது மேகம்..
திசைகளைத் தீர்மானித்து
வீசுது காற்று..,
இங்கே தேவையென
தடுக்குது மலை..,
உனது வசிப்பிடத்தை
குளிர்ச்சியாக்குது மழை..
நீ விதைத்ததெல்லாம்
செழிக்க பிறக்கிறது நதி..,
உனது தாகத்தை
தணிக்குது நீர்..,
உனது மூச்சினை
சுத்தப்படுத்துது மரம்..,

வானத்தின் பொழிவும்
வனத்தின் செழிப்பும்..
மானத்தோடு உன்னை
வாழவைக்க-ஓயாது
உழைக்குது..,-உனது
உழைப்பு தேவைப்படாமலே..!

ஆனால்..-மனிதா..!
நீ-ஏழையின் உழைப்பை
சுரண்டும் முதலாளிபோல

மரத்தை வெட்டுகிறாய்..!
மாரியைத் தடுக்கிறாய்..!
சுரங்கம் அமைக்கிறாய்..!
மலையைக் குடைகிறாய்..!
மணலைத் திருடுகிறாய்..!

அகழ்வாரை நிலம் தாங்கும்தான்..
ஆனால்
அதற்குமொரு எல்லையுண்டு..
தனது கோபத்தை-புவி
வெப்பமாக வெளிப்படுத்திய
பின்னும்- நீயுனது
போக்கை மாற்றிடவில்லை..!
எனில்...,
இனியுன் சந்ததிக்கு
எதிர்காலத்தில்
போக்கிடம் வேறெதுவுமில்லை..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக